பக்கங்கள்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

காணி நிலம்


         காணி நிலம் வேண்டாம் பராசக்தி 
             காணி நிலம் வேண்டாம்  
             ஐந்து சென்ட் நிலம் போதும் பராசக்தி 
             ஐந்து சென்ட் நிலம் போதும் 
             அது இரண்டே வருடத்தில் 
             பத்து மடங்காய் மதிப்பு  உயர வேணும் 
             பராசக்தி ! மதிப்பு உயர வேணும் !
             பள்ளிக்கூடம், காலேஜ் ,ஆசுபத்திரி 
             பக்கத்திலே வேணும் , பராசக்தி 
             பக்கத்திலே வேணும் 
             நெடுஞ்சாலையிலே  பஸ் போகும் 
             சத்தம்  வந்து  காதில் விழ வேணும்,
             பஸ் ஸ்டாண்டும் பக்கத்திலே வேணும் 
              பராசக்தி பக்கத்திலே வேணும் 
              பத்து  பன்னிரண்டு தென்னை மரம் 
              கூடவே  வேணும் ,பராசக்தி 
              அதிலே தேங்கா போட்டு நான் 
              காசு பார்க்க வேணும் 
              வேறென்ன வேணும் பராசக்தி 
              முடிஞ்சா இனியொரு பிளாட் 
              இதேபோல வேணும்  

திங்கள், 18 பிப்ரவரி, 2013

திரு நாச்சிமுத்து -ஒரு இந்திய மாமா 


                                      சமீபத்தில் மறைந்த என் மாமா திரு நாச்சிமுத்து   இந்திய உறவு முறைகளின் ஆழமான  பிணைப்பிற்கு   ஒரு  சிறந்த  உதாரணம்.  அவர்  மாதிரியான மனிதர்கள்  இன்று அருகி வருகிறார்கள் . ஆனால்  இவரைப்போன்றவர்கள்  தான் இந்திய  உறவுகளின்  வேர்களாய்  இருந்து வந்திருக்கிறார்கள். பெற்றோர் , நண்பர்கள் என்கிற உறவுகளுக்கு மத்தியில் இந்த மாதிரி ஒரு உறவின் இடம் முக்கியமானது. என் மாமா என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஒரு துணையாக இருந்திருக்கிறார்.  என் திருமணம் , வீடு  என்று  எல்லா முக்கிய முடிவுகளிலும் அவர் பங்கு இருந்திருக்கிறது.   தாய்மாமன் என்ற உறவைப்பற்றி அவருக்கு மிக உயர்ந்த அபிப்ராயம் உண்டு . அது ஒரு தெய்வீகமான  உறவு  என்பார் .அவர் எனக்கு தாய் மாமன் இல்லை . என்  தந்தையின் சகோதரியின் கணவர்.ஆனால்  ஒரு தாய் மாமன் போல தான் இருந்தார். என் அம்மாவிற்கு சகோதரர்கள்  இல்லை. அவர் ஒரே பெண் . என் தங்கை பருவமடைந்த  போது  யாரிடமோ எனக்கு சீர் செய்ய தாய் மாமன் இல்லை என்று சொன்னார் என்று கேட்டு சண்டைக்கு வந்து  விட்டார் . உடனடியாக   தேவையான பொருட்களை வாங்கி வந்து சீர் செய்து விட்டு  நான் இருக்கும் வரை எதற்கும் கவலைப்படகூடாது : எல்லாவற்றுக்கும் மாமா  இருக்கிறேன்  என்ற போது அவர் குரலின் அன்யோன்யம்  நெஞ்சை தொட்டது. .

                                   சிறிய வயதில் அவர்  ராமு என்று கூப்பிடும்போது குரலில் சொட்டும் பிரியம் இப்போதும் நினைவில் தித்திக்கிறது . பிறகு நான் அவர் சகோதரர்  மகளை மணந்து மருமகன் முறை ஆனதும் மாப்பிள்ளை என்று கூப்பிட ஆரம்பித்தார் .நீங்கள் என்கிற மரியாதை விளியும் தொடங்கி விட்டது.  எவ்வளவு சொல்லியும் மரியாதையை கை விடவில்லை . ஆனாலும் குரலில் சொட்டுகிற பிரியம் மட்டும் குறையவே இல்லை. சாப்பிடும் போது பார்த்து பார்த்து உபசாரம் செய்வார் . மாப்பிளைக்கு அதை எடுத்து வை , இதை எடுத்து வை என்று ஒரே தடபுடல்தான் . அவர் வீடே ஒரு பெரிய ஜங்ஷன் போல இருக்கும் . பொள்ளாச்சிக்கு எதோ வேலையாக வரும் எல்லா உறவினர்களும்  அவர் வீட்டிற்கு வராமல் இருக்க முடியாது . வராவிட்டால் கோபித்து கொள்வார். வீட்டில் தினமும் விருந்தினர் இருப்பார்கள்  வேலை இருந்துகொண்டே இருக்கும்.  ஆனால் அவர் சளைக்க  மாட்டார் . பார்த்து பார்த்து செய்வார் . வந்து போகிறவர்கள் முகமும் மனமும் நிறைந்திருக்கும்

                              PLANNING- இல், ORGANIZING- ல்  மன்னன் . எந்த வேலை  என்றாலும் ஒரு file  போட்டு விடுவார். அரசாங்க file  போல tag  போட்டு  பேப்பர் பேப்பராக  கோர்த்து வைதுகொண்டே இருப்பார். கால  அட்டவணை , பட்ஜெட் ,  பொறுப்புகளை  பகிர்ந்தளித்தல்  எல்லாம் பக்காவாக இருக்கும். கணக்குகள்  பைசா துல்லியத்திற்கு சரியாக இருக்கும். என் திருமணத்திற்கு , என் வீட்டு வேலைக்கு  அவர் தயாரித்து வைத்திருந்த கோப்புகளை பார்த்து வியந்து போனேன் . கொத்தனாருக்கு பஜ்ஜி வாங்கிகொடுத்த செலவு கூட எழுதி வைத்திருந்தார் .

                                  என் மேல் அவருக்கு கொஞ்சம் பாசம் ஜாஸ்தி . அவருடைய எல்லா உறவுகளுக்கும் அப்படிதான் தோன்றும் என்றாலும் என் மீது கொஞ்சம் ஜாஸ்திதான் . ஒருமுறை நானும் சுதாவும் கோவில்பட்டியில் இருந்து ஊருக்கு வரும்போது அதிகாலை அவர் வீடு முன்னாலேயே பேருந்திலிருந்து இறங்கி விடுவதாக சொன்னேன். எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று கேட்டார் . காலை மூன்று மணியிலிருந்து நான்கு  மணிக்குள் வந்து விடுவோம் என்று சொன்னேன். காலை மூன்று மணிக்கு வந்து இறங்கியபோது , கொட்டும் பனியில் ,  கரும் இருளில் அந்த தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சால்வையை போர்த்துக்கொண்டு வரும் பேருந்துகளை பார்த்துகொண்டு நின்றிருந்தார். என்ன மாமா இது என்று கேட்டபோது தூக்கம் வரவில்லை மாப்பிள்ளை என்றார் . மென்மையான குரல் அவருடையது.  ஆனால் கேட்கும்போது நமக்காக ஏதும் செய்ய ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை வந்து விடும். என்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது, வீடு வாங்க வைத்தது  அந்த பேச்சு தான் .

                                  நான்  வேலைக்காக மதுரா  வந்தது அவருக்கு  வருத்தம் . ஒவ்வொரு  வாரமும் போன் செய்யும்போதும்  "ஏன்  மாப்பிள்ளை , கொஞ்சம்  சம்பளம் கம்மியாயிருந்தாலும்  இங்கே மாத்திட்டு வந்திருங்களேன் . அப்பா , அம்மா வயசான  காலத்திலே தனியாக இருக்காங்களே " என்பார் . கிடைக்க மாட்டேங்குதே  மாமா   என்று  நான் சொல்லும்போது ஒரு கணம் மௌனமாக இருப்பார் . பிறகு  பேச்சை மாற்றுவார்.

                           அவருக்கு  உடல் நிலை சரியில்லை  என்று  செய்தி வந்ததும் ஓடினோம். ஒருநாள் அவருடன் ஆஸ்பத்ரியில் இருக்க வாய்ப்பு கிடைத்தது . நீங்க கூட இருந்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது என்றார். இந்த லிவர் பிரச்சினை இல்லாவிட்டால் இன்னும் பத்து வருடம் இருப்பேன் என்றார். இதுவும் சரியாக போய்விடும் மாமா என்றேன் . எனக்கும் நம்பிக்கை இல்லாமலில்லை என்றார் . ஆனால் அனைத்து  நம்பிக்கைகளும் பொய்த்துப்போனது .

                           இப்போதும் கண்ணை மூடினால் "மாப்பிளை , நம்ம புரோக்கர் ஒரு FIRST  CLASS  இடம் சொன்னாரு வாங்கி போட்டா ...." என்கிற குரல் கேட்பது போல இருக்கிறது . இனி வாழ்வில் கூட மாமா இருக்க மாட்டார் என்பது  ஜீரணிக்க கஷ்டமாக தான் இருக்கிறது.