பக்கங்கள்

திங்கள், 6 ஜூலை, 2026

                                                                      காசி

என் மகள் IIM LUCKNOW-ல் சேர தேர்ந்தெடுக்கப்பட்டதால் குடும்பத்துடன் சென்று அவளை சேர்த்துவிட தீர்மானித்தோம். அப்படியே எங்காவது கோவிலுக்கு சென்றுவிட்டு கல்லூரி செல்லலாம் என்று யோசித்தோம். காசி அதே மாநிலம் என்பதால் அங்கு சென்றுவிட்டு அங்கிருந்து லக்னோ செல்லலாம் என்று திட்டமிட்டோம். கோவையிலிருந்து விமானம் மூலம் காசி சென்றோம்.


காசி பற்றி பல எழுத்தாளர்களின் எழுத்து மூலம் ஒரு மனச்சித்திரம் இருந்தது. அது கொஞ்சம் சிதைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய காசி வளர்ந்து வருகிற ஒரு நவீன நகரமான வாரணாசிக்குள் தன் புராதனத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்கிற நகரம்.


உயர்ந்து நிற்கிற ஸாப்பிங் மால்கள், மதுக்கடைகளில் முண்டி நிற்கிற கூட்டம்,அங்கும் இங்கும் பறக்கிற விலை உயர்ந்த கார்களுள் இடையில் புகுந்து முன்னேறுகிற ஆட்டோக்கள், இவை உருவாக்கும் போக்குவரத்து நெரிசலில் பொறுமையாக நகரும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள்.


எப்போதும் கூடுதல் காசு கேட்கும் கார்-ஆட்டோ டிரைவர்கள், படகோட்டிகள், அதிகம் கொடுத்துவிட்டோமோ, ஏமாந்து விட்டோமோ என்கிற ஆன்ம நெருக்கடியில் நாம், எல்லாம் மாயை என்று ஆறுதல் சொல்கிற காசியின் பழமை மாறா படித்துறைகள், புன்னகைத்து மிதந்து செல்கிற கங்கை, , பரப்பிரம்மமாய் காசி விஸ்வனாதர்,


எப்போதும் சிதை நெருப்பு அணையாத மணிகர்னிகா படித்துறை, அரிச்சந்திரா படித்துறை அடங்கிய 80 படித்துறைகளையும் படகுப்பயணத்தில் ஒரு பறவைப் பார்வை பார்த்தது,காசியின் குறுகலான சந்துப்பாதைகளில் கஞ்சா அடித்து மயங்கிக் கிடக்கும் சாமியார்களைக் கடந்து நடந்தது எல்லாம் ஒரு ஆன்மீக அனுபவமாகத்தான் இருந்தன.


நமது அரசு இலக்கினையான அசோகா சின்னம் இருக்கிற சாரநாத் போய் வந்தோம். புத்தர் தன் முதல் பிரசங்கத்தை அங்கேதான் நடத்தினாராம். இப்போதுவெயிலில் குளித்துக்கொண்டு மோனத்தில் இருந்தார்.


காசியில் சில இடங்களில் சாலை அறிவிப்புப் பலகைகளில் ஹிந்தி, ஆங்கிலம் இவற்றோடு தமிழிலும் எழுதியிருந்ததைப் பார்த்தேன். ஏற்கனவே கேதார்நாத் படித்துறையில் சிவ சிவ என்று எழுதியிருந்தாலும் இது வாரணாசி வளர்ச்சி போர்டு வைத்திருக்கிற அதிகாரப்பூர்வமான போர்டுகள். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்திய போது வைத்ததாக இருக்கும். அத்தனை தூரம் போய் தமிழைப் பார்த்தது மகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்தது.



கங்கையில் இரவு படகுப்பயணமும் கங்கை ஆர்த்தியும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது நிஜம். இருட்டில் அழகாக ஆடுகிற தீபங்களும், அவற்றின் ஒளியில் மின்னுகிற கங்கை நீர்ப்பரப்பும், நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் கூடிய பூசகர்களின் உடல் அசைவுகள், பெரும் கூட்டத்தைப் பொருட்படுத்தாத அவர்கள் அர்ப்பணிப்பு எல்லாம் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்தன.


நாங்கள் போன நேரம் கோடைக்காலம். கடுமையான வெயில் சுட்டெரித்தது. காசி விஸ்வனாதர் கோயிலில் இரண்டு கிலோ மீட்டர்கள் முன்பே நிறுத்தி விட்டார்கள். பயங்கரக் கூட்டம். நீண்ட வரிசை. தரிசனம் முடிந்து வருகையில் களைப்படைந்து விட்டோம். கோவிலை விட்டு வெளியே வந்ததும் சற்று தூரத்தில் ஒரு வித்தியாசமான உணவகம் கவர்ந்தது. கொஞ்சம் உள்ளடங்கி இருந்தது. உணவு அருந்திச் செல்வோம் என்று உள்ளே சென்றோம். உணவு அருந்திக்கொண்டிருக்கையில் அருகே பார்த்தால் ஒரு அழகிய கோவில். அழகிய வேலைப்படுகளுடன் ஒரு பழமையான கோவில். என்ன கோவில் என்று கேட்டோம். இது கௌதமேஸ்வர் மஹாதேவ் மற்றும் காசிராஜ் காளி கோவில் என்றார்கள். வெளியே வைத்திருக்கிற போர்டில் இந்தக் கோவில் காசி மஹாராஜாவிற்கு சொந்தமானது, யாரும் ஆக்கிரமிப்பு செய்யவோ மாற்றங்கள் செய்யவோ கூடாது, மிருகங்கள் வளர்க்ககூடாது என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. கர்ப்பக்கிரகத்தில் காளியின் சிலையும் சிவ லிங்கமும் இருந்தன. அருகிலேயே ஒரு பிராமணக் குடும்பமும் வாழ்கிறது. பூஜைகள் செய்வதற்காக போல இருக்கிறது. தூண்களில் எல்லாம் நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ள அழகான கோவில். பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் என்கிறது GOOGLE. அருகில் உள்ள காசி விஸ்வனாதர் கோவிலில் உள்ள லிங்கத்தைப் பார்க்க கூட்டம் அலை மோதுகிறது. இந்தக் கோவிலில் ஆளே இல்லாமல் லிங்கம் அனாதையாக நிற்கிறது. கடவுள்களுக்கு கூட சரியான இடமும் அதிருஷ்டமும் வேண்டும் போல.

அந்தக் கோவிலின் படங்களைக் கொடுத்திருக்கிறேன். காசிக்குப் போனால் இந்த சிவனையும் தரிசித்து வாருங்கள். தனிமையில் இருப்பதால் மனதார உரையாட முடியும்.


சனி, 30 மே, 2026

சுந்தர ராமசாமி என்னும் மானிடன்

 1984-ல் நான்  டிப்ளமா முடித்து கோவையில் ஒரு மில்லில் வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளம் பெற்றிருந்தேன். கோவையில் ஒரு புத்தக கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று போயிருந்தேன். புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன். கண்காட்சியிலிருந்த பெரியவர் நான் புரட்டிக் கொண்டிருந்த ஜே ஜே சில குறிப்புகள் புத்தகத்தைப் பார்த்து ரொம்ப நல்ல புத்தகம். இது ஒன்று விற்றாலும் இந்தக் கண்காட்சி நடத்தியதற்கு சந்தோஷப்படுவேன் என்றார். அவர் விஜயா பதிப்பகம் வேலாயுதம். என் சம்பளத்தில் வாங்கிய முதல் புத்தகம். என்னை இலக்கியத்தின் பக்கம் இழுத்த  புத்தகம். அத்தனை வீச்சு நிறைந்த தமிழ் நடையை அது வரை படித்திருக்கவில்லை. இன்றும் அந்த நடைக்கு ஈடாக ஒன்று படித்ததில்லை.

சமீபத்தில் சுந்தர ராமசாமியின் ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் என்ற புத்தகத்தைப் படித்தேன். ஏழுமலை என்கிற தடா கைதி சுந்தர ராமசாமிக்கு சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதற்கு சுந்தர ராமசாமி எழுதிய பதில்களின் தொகுப்புதான் இந்த புத்தகம். ஏழுமலை எழுதிய கடிதங்கள் இல்லை. சுந்தர ராமசாமியின் பதில்கள் மட்டும்தான். மாதிரிக்காக ஏழுமலையின் இரண்டு கடிதங்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏழுமலை 57 கடிதங்கள் சுந்தர ராமசாமிக்கு எழுதியிருக்கிறாராம். அதில் பெரும்பான்மையைச் சேர்த்திருந்தால் முக்கியமான ஆவணமாக இருந்திருக்கும். 

சுந்தர ராமசாமியின் கடிதங்கள் வழி தெரிவது அவரது மென்மையான மனதும்  பரிவும். தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்திகொண்டே இருக்கிறார். உங்கள் கதைகளை எனக்கு அனுப்புங்கள் , நான் படித்துப்பார்க்கிறேன் என்று எழுதுகிறார். காலச்சுவடு பதிப்பகம் உங்கள் கதைகளைப் பதிப்பிக்காது. ஆனால் எனக்கு அனுப்புங்கள். நான் படித்துப் பார்க்கிறேன் என்று எழுதுகிறார். இரண்டு மூண்று கடிதங்களில் தொடர்ந்து கேட்டும் அவர் அனுப்பவில்லை. உண்மையாகவே படிக்க ஆசையாக இருக்கிறது அனுப்புங்கள் என்று மீண்டும் எழுதுகிறார். ஏழுமலை அனுப்பிய கவிதைகளை காலச்சுவடு பிரசுரிக்கவில்லை என்ற  மனக்குறைக்கு ஆறுதல் சொல்கிறார்.  காலச்சுவடு நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என்கிறார். என் மன ஓட்டமும் காலச்சுவடின் மன ஓட்டமும் ஒன்று என்று நினைக்க வேண்டாம் என்கிறாரர். அவர் கேட்கிற புத்தகங்களை அனுப்பி வைக்கிறார். அவர் கேட்கிற மதம், அரசியல் , சமூகம் சார்ந்த எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்கிறார். சிறைக்கம்பிகளுக்கு அப்பாலிருந்து வருகிற ஒரு சிந்திக்கிற ஆத்மாவின் குரலை செவி மடுக்க வேண்டும்; அவரது படிக்கிற, எழுதுகிற துடிப்புகளைத் தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் அவா அவர் வரிகளில் புலப்படுகிறது. சக மனிதன் மீதுள்ள அவரது அக்கறை அவர் வரிகளில் சிந்திக்கொண்டே இருக்கிறது.

ஜெயமோகன் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவார். கேரளாவில் அவரும் சுந்தர ராமசாமியும் பயணம் செய்யும்போது ஒரு ஆட்டோ டிரைவரைச் சந்திக்கிறார்கள். அந்த ஆட்டோ டிரைவர்  சுந்தர ராமசாமியின் தீவிர வாசகர். இவர்களை சாப்பிட அழைக்கிறார். அவர் வீட்டிற்கு போகிறார்கள். ஆட்டோ டிரைவரும் அவர் மனைவியும் பாசத்துடன் உணவு பரிமாறுகிறார்கள். மீன் குழம்பும் சோறும். சுந்தர ராமசாமி அசைவம் சாப்பிட மாட்டார். அவர்கள் வீட்டில் வேறு ஒன்றும் இல்லை என்று தெரிகிறது. சுந்தர ராமசாமி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று ஜெயமோகனிடம் கண் ஜாடை காட்டுகிறார். மீன் குழம்பை சாதத்துடன் குழைத்து ரசித்து சாப்பிடுகிறார். எல்லாம் முடிந்து  அறைக்கு திரும்பி வந்த பிறகு  சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் முகம் வீங்கி கஷ்டப்படுகிறார். வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே என்று ஜெயமோகன் கேட்கிறார். எவ்வளவு ஆசையாக சாப்பிடக் கூப்பிட்டார். சாப்பிடவில்லையென்றால் அவர் மனம் எவ்வளவு  கஷ்டப்படும் என்று  சுந்தர ராமசாமி சொன்னாராம். இந்தக் கடிதங்கள் , இந்த சம்பவம்  அனைத்தும் சுந்தர ராமசாமி எவ்வளவு உன்னதமான மனிதர் என்று காட்டுகின்றன.  எழுத்தாளர்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். அவர்கள் படைப்பு எவ்வளவு இலக்கியத்தரம் வாய்ந்தது என்றுதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. ஆனால் நல்ல இலக்கியவாதிகள் நல்ல மனிதர்களாகவும் இருப்பது எவ்வளவு இனிமையாகவும் , இதமாகவும் இருக்கிறது.

அந்த ஏழுமலை விடுதலையாகி விட்டாரா? என்ன செய்கிறார்? ஏதேனும் புத்தகம் எழுதியிருக்கிறாரா? ஒன்றும் தெரியவில்லை.

ஒரு மகத்தான எழுத்தாளர் நான் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்திருக்கிறார்.அவரை ஒரு முறை கூடப் போய் பார்க்கவில்லை. ஒரு கடிதம் கூட எழுத வில்லை. பாழாய்ப் போன இந்த கூச்ச சுபாவத்தை எண்ணி குற்ற உணர்வு எழுகிறது.

இன்று சுந்தர ராமசாமியின் பிறந்த நாளாம். அவர் எழுத்துகள் சில பக்கங்கள் மீண்டும் படித்தேன். அவர் ஆன்மா இன்னும் பலகாலம் உயிர்ப்புடன் இருக்கும்

புதன், 22 ஏப்ரல், 2026

GOD FATHER

பழைய ஆங்கிலப் படங்களை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கோகுல் பிரசாத்தின் தலை சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் பட்டியலும்  இதற்கு உதவியாக இருந்தது. இதில்  GOD FATHER-I, GOD FATHER-II  இரண்டும் பார்த்தேன். மரியோ பூசோவின் காட் ஃபாதர் நாவல் முன்பே படித்திருந்தேன். படங்கள் பார்த்ததும் மீண்டும் ஒருமுறை புத்தகத்தைப் படித்தேன். நாவல்களிலிருந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெறுவது அபூர்வம். காட் ஃபாதர் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றிருக்கிறது. தலை சிறந்த பொழுதுபோக்குப் படங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இரண்டு காட்ஃபாதர் படங்களும் வரும். அதிலும்  காட்பாதர் -2, ஒருபடி மேல். எனக்கு நாவலும் பிடித்தது. படங்களும் பிடித்திருந்தன. திரைப்படங்கள் சிறந்த கலை வெற்றியைப் பெற்றிருந்தாலும், நல்ல காட்சி அனுபவத்தைத் தந்தாலும் சில இடங்களில் நாவல் கடத்துகிற உணர்வுகளை முழுமையாக திரையில் கொண்டு வர முடியவில்லை என்று தோன்றுகிறது. 

 

              உதாரணமாக மைக்கேலின் மனமாற்றத்தை படிப்படியாக நாவலில் நாம் உணர்கிறோம். தந்தை ஊரே பயப்படும் மாஃபியா தலைவராக இருந்தாலும், அந்த குடும்பத்திலிருந்து விலகி சாதாரண குடிமகனாகவே வாழ மைக்கேல் விரும்புகிறான். அவன் எப்படி தன் தந்தையைபோலவே தந்திரம் மிக்க, இரக்கமற்ற , கடினமான ஒரு டானாக உருவெடுக்கிறான் என்பதே கரு. அவன் மனதில் மாற்றத்தை வரவழைக்கிற  சம்பவங்கள், தன் தந்தையின் மீது வைத்திருக்கிற பாசம் , குடும்பத்தின் மரியாதை போன்றவை  உருவாக்குகிற பரிமாண மாற்றத்தை நாவல் திரைப்படத்தைக் காட்டிலும் திறம்பட உணர்த்துகிறது. அதேபோல் மைக்கேலின் தாயார் புத்தகத்தில் ஒரு வலுவான பாத்திரம். திரையில் அந்தப் பாத்திரம் அத்தனை வலுவுடன் படைக்கப்படவில்லை.. அதேபோல சில துணைப்பாத்திரங்களின் வாழ்வும் விரிவாக நாவலில் காட்டப்படுகிறது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அத்தனையையும் திரையில் கொண்டு வர முடியாது எங்கிற உண்மையையும் புரிந்துகொள்ளமுடிகிறது. அதே சமயம் இத்தாலிய குடும்பங்களின் வண்ண மையமான  கொண்டாட்டங்களையும், மாஃபியா ரவுடிகள் என்றாலும்  அவர்களின் ஆழமான குடும்பப் பிணைப்புகள், அவர்கள் பாசம், அவர்கள் நிகழ்த்துகிற வன்முறைகளின் கொடுரம் ஆகியவை திறையில் நன்றாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. மார்லன் பிராண்டோ, அல் பஸீனோ தொடங்கி சிறு கதைப்பாத்திரங்கள் வரை சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குரலை உயர்த்தாமலே வசன உச்சரிப்பு மூலம் அல் பஸீனோவும், பிராண்டோவும்  குளிர் அச்சத்தை நெஞ்சுக்குள் கொண்டு வருகிறார்கள். திரைக்கதையையும், இயக்கத்தையும் உயர்தரத்தில் மரியோ பூஸோவும், ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்பாலாவும் படைத்திருக்கிறார்கள்.

காட்ஃபாதர் -1 படத்தைவிட காட்ஃபாதர்-2 சிறப்பாக வந்திருக்கிறது. சாதாரணமாக ஒரு தொடர் படம் முந்தையப்படத்தை விட நன்றாக வருவது அபூர்வம். சாதாரணமாக முதல் படத்தால் கவரப்பட்டவர்கள் அதிக எதிர்பார்ப்புடன் சென்று இரண்டாம் படத்தில் எமாற்றம் அடைவது வழக்கம். ஆனால் காட்ஃபாதர்-2 முதல்படத்தை விட சில படிகள் மேலாகவே அமைந்திருக்கிறது. 

காட்ஃபாதர் என்று அவரைச்சுற்றியிருப்பவர்களால் அன்புடன் அழைக்கப்படுகிற விட்டோ கார்லியோனியின் இளமைக்காலமும், அவர் டானாக மாறி அடைகிற உயர்ச்சியும், அவரைத் தொடர்ந்து டானாக பதவியேற்கிற மைக்கேலின் எழுச்சியும் மாறி மாறி நேர்த்தியாக காட்ஃபாதர்-2 படத்தில் காண்பிக்கப்படுகிறது. கிரிமினல் உலகில் வெற்றிகள் அடைந்தாலும் அவர் அடைகிற மன நெருக்கடியயும், தனிமையையும் அல்பசீனோ அற்புதமாக காட்டுகிறார். தேர்ந்த நடிப்பு. 

இத்தகைய வணிகப் படங்கள், தமிழ் வணிகப்படங்கள் போல்  பார்வையாளர்களை முட்டாள்களாக கருதுவதில்லை. கொஞ்சமாவது ஆழ்ந்து கவனித்தால்தான் , யோசித்தால்தான் சில காட்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். மைக்கேலின் வீட்டில் படுக்கையறையில் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். தன் குடும்பத்தில் யாரோ ஒரு துரோகி இருக்கிறான் என்று மைக்கேல் புரிந்துகொள்கிறான். அது யார் என்று மைக்கேலைப் போலவே நாமும் அனைத்து உரையாடல்களையும் கவனித்தால்தான் புரிந்துகொள்ள முடியும். அதைப்போலவே  பழைய விசுவாசி ஒருவர் மைக்கேலுக்கு எதிராக சாட்சி சொல்ல ஒத்துக்கொண்டு நீதிமன்றம் வருகிறார். மைக்கேல் சிசிலியிலிருந்து அவர் சகோதரரை அழைத்துக்கொண்டு வருகிறார். அவர் பேசுவதே இல்லை. அமைதியாக அமர்ந்திருக்கிறார். சாட்சி மைகேலுக்கு ஆதரவாக சாட்சியம் கொடுக்கிறார். மிரட்டலா? அன்பா எது அவரை அப்படி மாற வைத்தது என்று பார்வையாளரே ஊகம் செய்து கொள்ள வேண்டியதுதான். கடைசியில் அந்த நபர் நான் என்ன செய்ய முடியும் என்று மைக்கேலிடம் கேட்கிறார். அவர் ரோம சாம்ராஜியத்தில் இவ்வாறு துரோகம் இழைத்துத் திருந்தியவர்கள் தண்ணீர் தொட்டியில் கையை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிற கதையை சொல்கிறார். அடுத்த காட்சியில் அவர் தண்ணீர்த் தொட்டியில் இறந்து கிடக்கிறார்.

வன்முறையாலும் , குற்றங்களாலும் டான் என்கிற நிலைக்கு உயர்ந்தாலும், தன் சகோதரர்களை இழந்து, மனைவியைப் பிரிந்து மைக்கேல் தனியாக நிற்கிற காட்சி பல சிந்தனைகளை தூண்டும்.

காட்ஃபாதர்-3 படம் இரண்டு வெர்ஸனில் இருக்கிறதாம். இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும். 

நிச்சயம் புத்தகத்தையும் படங்களையும் பரிந்துரைக்கிறேன். புத்தகத்தைப் படித்துவிட்டு படங்களைப் பார்த்தாலும் சரி,படங்கள் பார்த்துவிட்டு புத்தகம் பார்த்தாலும் சரி. மீண்டும் ஒருமுறை படங்களை திரும்பப் பார்ப்பீர்கள் அல்லது புத்தகத்தை திரும்பிப் படிப்பீர்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.

சனி, 14 பிப்ரவரி, 2026

தூக்குக் கைதியின் வாக்குமூலம்

“ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்” என்ற புத்தகம் படித்தேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. 711 பக்கங்கள் கொண்ட ஒரு பெரிய புத்தகம். கதைப்புத்தகம் அல்ல. செல்வம் என்ற தண்டனைக் கைதி எழுதிய சுய சரிதை. ஆனால் ஒரே மூச்சில் படிக்க முடிகிற, சுவராசியமான புத்தகம். வாசிப்பதில் ஆர்வமுள்ள, சமூக அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். 2025-ல் வந்த மிக முக்கியமான புத்தகம் என்று சொல்லுவேன். காரணம் நாம் கண்டிருக்காத உண்மைகளை உரக்கச் சொல்லுகிறது இந்தப் புத்தகம்.. சுடுகிற உண்மைகள்.

நாம் ஒரு ரவுடியை திரைப்படங்களில், நாவல்களில் பார்த்திருப்போம். ஆனால் அது ஒரு கற்பனைச் சித்திரம்தான். உண்மையில் ஒரு ரவுடியின் மனம் எப்படி வேலை செய்யும்? அவன் உணர்வுகள் என்ன? அவன் வாழ்வு எப்படி இருக்கும் என்பவற்றை இந்த புத்தகம் காட்டுகிறது. ரத்தமும் சதையுமாக அவனை நம் முன் நிறுத்துகிறது. அவனை நாம் வெறுக்கலாம்: அச்சப்படலாம்: அருவெறுக்கலாம். ஆனால் அவன் நம் சமூகத்தின் ஒரு பகுதி. அவனை நாம் புரிந்துகொள்ளாமல் சமூக முன்னேற்றம் சாத்தியம்  இல்லை. அந்த உலகத்தை இவ்வளவு தீவிரமாகச் சொன்ன வேறு புத்தகத்தை நான் படித்ததில்லை.

செல்வம் குற்றச் சூழல்  இயல்பாக இருக்கும் இடத்தில் பிறந்து வாழ்கிறார். அவர் பிறந்த புதுக் குடியிருப்பு என்ற பகுதியை மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் அஞ்சுகிறார்கள். இவர்களிடம் வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று விலகிப் போகிறார்கள். இயல்பாகவே வன்முறை சம்பவங்களில் ஈடுபட நேரிடுகிறது. ஒரு மாஃபியா கும்பலின் தலைவன் சப்பட்டை ஐயப்பன் என்பவனை ஒரு சம்பவத்தின் போது எதிர்த்துப் பேசி விடுகிறார். அவன் அடியாள் ஒருவனை செல்வத்தின் உறவினர் ஒருவரிடம் சண்டையிடும்பொது வெட்டி விடுகிறார் செல்வம். சப்பட்டை ஐயப்பன் அவரைக் கொலை செய்ய ஆணையிடுகிறான். செல்வத்தைக் கொல்ல அந்தக் கும்பல் அவனை வெட்டிச் சிதைக்கிறது. மயிரிழையில் உயிர் பிழைக்கிற செல்வம் ஒரு முழு ரவுடியாகிறார். ஐயப்பனுக்கு எதிரான கும்பலில் சேருகிறார். அந்தக் கும்பல் ஐயப்பனைக் கொல்கிறது. அய்யாவு என்பவன் ஐயப்பன் கும்பலின் புதுத் தலைவனாகிறான். அவன் செல்வத்தைத் தாக்க வரும்போது அவர் உறவினர் வீட்டில் இருந்த 17 மாடுகளை கொல்கிறான். இதில் கடும் ஆத்திரம் அடைந்த செல்வமும் நண்பர்களும் அய்யாவுவைக் கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள். அய்யாவுவை கோர்ட்டில் நீதிபதி முன்பே கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் செல்வத்திற்கும் அவன் நண்பர்களுக்கும் தூக்குத்தண்டணை விதிக்கப்படுகிறது. ஐய்யப்பன், பிரபு, தேவராஜன், லிங்கம் என்று மாறி மாறி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகிறார்கள். ரத்தம் வெள்ளமாக ஒடுகிற ஒரு குற்றச் சரித்திரம் நம் கண்முன் விரிகிறது. இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என்று நாம் விக்கித்துப்போகிறோம்.  இந்த உலகம் நம் உலகில் வந்து விடக்கூடாதே என்று வேண்டுகிறோம். விலகிப் போகிறோம். ஆனால் சில அப்பாவிகளும் இடையில் வந்து இரையாகிறார்கள்.

தூக்குத் தண்டனை கிடைத்தபின் அதை மாற்றப் போராடுகிறார்கள். எல்லா நீதி மன்றங்களும் அவர்கள் மனுவை நிராகரிக்கின்றன. பின் கவர்னருக்கு கருணை மனு அனுப்புகிறார்கள். அதுவும் நிராகரிக்கப்படுகிறது. பின் ஜனாதிபதிக்கு அனுப்புகிறார்கள். ஜனாதிபதிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். காலம் சென்று கொண்டே இருக்கிறது. போரட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

இதனிடையில் செல்வம் சிறைக்கைதிகளின் உரிமைக்காக போராடுகிறார். அவரை சிறை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான சிறைகளில் அவர் இருந்திருக்கிறார். பிரபலமான ,சுவாரசியமான பல கைதிகளின் நட்பு கிடைக்கிறது. சுவாமி பிரேமானந்தா, சசிகலா கணவர் நடராஜன்,, தீரன் சின்னமலை பேரவை யுவராஜ். ராஜீவ் காந்தி கொலையாளிகள் , நெடுமாறன், ஜான் பாண்டியன் எனப் பலரின் சித்திரம் நமக்கு கிடைக்கிறது. நமக்குத் தெரியாத வேறு பரிமாணங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக பிரேமானந்தா அரசியல் காரணங்களுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர், அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் உண்மையல்ல என்கிறார். ராஜீவ் கொலையாளிகளுக்குள்ளேயே இணக்கம் இல்லை. முருகனைக் கொலை செய்ய ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் முயன்றார்கள் என்ற செய்தி வியப்பை அளிக்கிறது.

கைதிகளின் சிறை வாழ்க்கை நுணுக்கமாகக் காட்டப்படுகிறது. எல்லா கைதிகளின் வாழ்க்கையும் ஒன்று போலில்லை என்று தெரிகிறது. சிலர் தனிச் சமையல், கோழிக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி , புரோட்டா என்று விதவிதமான சாப்பாடு, மின் விசிறி, டிவி, பீடி,சிகரட்டு என்று ராஜபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். வீடியோ டெக் எடுத்து ஆபாசப்படங்கள் கூடப் பார்க்கிறார்கள்.அதே சமயம் பெரும்பாலான கைதிகள்  தரமற்ற உணவுசுகாதாரமற்ற கழிப்பறைகள்சிறைக் காவலாளிகளின் அடக்குமுறை என ஒரு நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். பணமும் உடல் பலமும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. சாதாரண சமூகத்திலேயே ஊழலை ஒழிக்க முடியவில்லை. சபிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறவர்களின் ஊழலை கேட்க யார் இருக்கிறார்கள்?

அதிருஷ்டவசமாக செல்வத்தை இலக்கியம் என்ற தேவதை அணைத்துக் கொள்கிறாள். தேர்ந்த வாசகராகிறார். புத்தகங்கள் அவர் மனதில் ஏற்படுத்திய மாற்றங்கள் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர் திருந்தியது நம்பகத்தனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு நண்பன் நோய்வாய்ப்பட்டு இறந்து போக இரண்டு குழந்தைகளுடன் அவன் மனைவியை மறுமணம் செய்து கொள்கிறார். அவர் மனைவி, “உங்களால் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளை நீங்கள் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கும் போது அவர் கண்களின் ஓரத்திலிருந்து அவர் அறியாமல் கண்ணீர் வழிகிறது. அவர் குழந்தைகளுடன்   பேசுவது கவித்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. அவரை முதன் முதல் தாக்கியவர்கள் மீது வழக்கு 32 வருடங்களுக்குப் பின் நடைபெறுகிறது. ஒருவரைத் தவிர எல்லா  குற்றம் சாட்டப்பட்டவர்களும் இறந்துவிடுகிறார்கள். அவரையும் இவர் வெளிச்சம் இல்லாத்ததால் இவர்தான் வெட்டினாரா என்று சொல்ல முடியவில்லை என்று சாட்சி கூறி விடுவித்து விடுகிறார். பழி வாங்க வேண்டும் என்கிற ரத்த வெறியிலிருந்து மன்னிக்க முடிகிற மனநிலைக்கு உயர்ந்து விடுகிறார்.

பத்ரி ஷேசாத்ரியை அவர் சந்திக்க சிறையில் நேரிட்டது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. இந்த புத்தகம் வெளிவர  அது ஒரு காரணம்.

சிறைச் சாலை நடைமுறைகளில் பல சீர்திருத்தங்களை செல்வம் வழியுறுத்துகிறார். இந்த சீர்திருத்தங்களை அமுல் படுத்தினால், கைதிகளின் வாழ்க்கை மேம்படும். இது சிறைக்கு செல்வதின் அச்சத்தை நீர்க்கச் செய்து விடாதா என்ற கேள்வி எழுந்தாலும் கைதிகளின் மன மாற்றத்திற்கு, சிறிய கிரிமினலாக உள்ளே செல்பவன் பெரிய கிரிமினலாக மாறாமல் வெளி வர இவை அவசியம் என்கிற நியாயமும் புரிகிறது.

இந்த புத்தகம் படித்தது மன நிறைவைத் தந்தது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்

செவ்வாய், 27 ஜனவரி, 2026

A TOUR TO PEMBROKE VILLA

PRECOT  மில் ஊழியர்களின் ஒரு ஒன்றுகூடல் விழாவிற்காக குன்னூர் அருகில், மாங்கொம்பை கிராமத்தில் இருக்கும் பெம்ப்ரோக் விடுதிக்கு      (PEMBROKE VILLA)  இரண்டு நாள் சுற்றுலாவாகச் சென்றிருந்தோம். முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்த நண்பர்களுடன் ஒரு கூடல். உணர்ச்சி பூர்வமான, ஆனந்தம் நிறைந்த கொண்டாட்டமாக அமைந்தது. தமிழ்நாட்டின் நூற்பாலைகளில் PROFESSIONALISM  கொண்டு வர PRECOT, PATSPIN, PREMIER, LOYAL, RAMCO போன்ற நிறுவனங்களின் பணி பெரியது. ஒருமாதிரி உயர்தர கூட்டு வாழ்க்கையையும்  குடியிருப்புகளில் அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதைப்பற்றித் தனியாக எழுத வேண்டும். இந்தப் பதிவில் PREMPOKE VILLAவைப் பற்றி எழுதத் தோன்றியது.

வளைந்து வளைந்து செல்லும் ஊட்டி மலைப்பாதையில் குன்னூருக்கு சற்று முன் வழி மாறி மாங்கொம்பை கிராமம் அருகே சென்றால் வரும் விடுதி. ஒரு இரண்டு மூன்று கிலோ மீட்டர்களுக்கு சரியான பாதை கூட கிடையாது. மேடும் , பள்ளமும் நிறைந்த பாதையில் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் செல்ல வேண்டும். ஆனால் செமையான பங்களா. அழகான லொகேஷன் என்று சொல்வது பெரிய under statement.

 

 சுற்றிலும் ஆளரவமேயில்லாத தேயிலைத்தோட்டங்கள், அடர்ந்த மரங்கள் இவற்றின் மத்தியில் ஒரு வெள்ளை மாளிகை PEMBROKE VILLA. இங்கிலாண்டு வேல்ஸ் பகுதியில் BEMBRKSHIRE  என்ற மாவட்டமும், BEMBROKE என்கிற சிறுநகரமும் இருக்கிறது என்று படித்தேன். அங்கிருந்து வந்த ஏதோ பிரபு கட்டியிருக்க வேண்டும். அழகாக வடிவமைக்கப்பட்ட மாளிகை. மூன்று படுக்கையறைகள். கழிவறைகள் இணைக்கப்பட்டவை. வரவேற்பறை, டைனிங் ஹால், சமையலறை. எல்லாம் விசாலமான வசதியான அறைகள். ஒவ்வொரு படுக்கயறைக்கும் ஒரு பெயர் . அவர் குழந்தைகளின் பெயராக இருக்கக் கூடும்.  வெளியே கூடுதலாக இரண்டு அவுட் ஹௌஸ்கள்.

யோசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கிருந்தோ இங்கிலாந்திலிருந்து வந்து, இந்த தேயிலை வனத்தில் வசித்த அந்தக் குடும்பத்தின் மன நிலை எப்படி இருந்திருக்கும்? என்னதான் ஒரு ஆளும் வர்க்கத்தில் இருந்து வந்திருந்தாலும் இந்த தனிமையில் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? அவர்கள் அடிமையாய் நடத்திய இந்த மக்களின் வெறுப்பை வெளியே காட்டாத , பயத்துடன் இறைஞ்சும் கண்கள் முதுகில் குத்தும்போது எப்படி உணர்ந்திருப்பார்கள்?இந்த நுன்னுணர்வுகள் அவர்களுக்கு இருந்திருக்குமா?

ஆனால் ரசிகர்கள்.! வீடு அமைந்திருக்கிற லோகேஷன், வீட்டில் இருக்கிற வசதிகள் அவர்கள் ரசனையைக் காட்டுகிறது. ஒரு புத்தக அலமாரி கூட இருக்கிறது. பியானோ போன்ற இசைக் கருவிகள் கூட இருந்திருக்கும். நூறு வருடம் பழைய ஸ்காட்ச் விஸ்கியை இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்திருப்பார்கள். இனிமையான இசையைக் கேட்டுக்கொண்டு,விஸ்கியை துளித்துளியாய் ரசித்துக்கொண்டு வாழ்ந்திருப்பார்கள். பள்ளத்தாக்கில் ஒட்டு வீடுகளில்  மந்தையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களின் மீது சிறு கரிசனமாவது வந்திருக்குமா? தெரியவில்லை. ஆனால் என்ன செய்வது? அப்படித்தான் செல்கிறது வாழ்க்கை.

புத்தக அலமாரியைப் பார்த்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. இயற்கையின் எல்லா அழகுகளும் சூழ்ந்திருக்க நடுவில் வைக்கப்பட்ட புத்தக அலமாரி. ஒரு வோர்ட்ஸ்வொர்த்? ஒரு ராபர்ட் ஃப்ராஸ்ட்? ஒரு ஷெல்லி? ஒரு பைரன்? ஒரு ஸேக்ஸ்பியர்? ஒன்றும் இல்லை.  Readers Digest யுடைய பெயர் தெரியாத நபர்கள் எழுதிய சில சுருக்கப்பட்ட பவுண்ட் புத்தகங்கள்.. புத்தகங்களைப்பற்றித் தெரியாத ஒருவர்தான் இந்த புத்தக வரிசையை தயாரித்திருக்க வேண்டும். இடையில் யாரோ ஒரு ஹாரி போட்டரையும், பௌலோ கொய்லொவையும் வைத்திருக்கிறார்கள். துருத்திக்கொண்டு தெரிந்தன.

வெளியே புல்த்தரையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். இயற்கையின் பிரமாண்ட மோனம்! அழகான பூக்கள் தலையாட்ட கூட வந்த ஒரு ரசிக நண்பர் ஒலிக்கவிட்ட இளையராஜாவின் இசையில் புல்லாங்குழல். இதமான குளிர் கவிழ்ந்தது. எல்லாத்துயரங்களும் பின்னால் செல்ல, எல்லா வெறுமைகளையும் அழகு நிரப்ப கொஞ்சம் வாழ்ந்தேன்.

வெள்ளி, 9 ஜனவரி, 2026

TO KILL A MOCKINGBIRD

 

ஹார்ப்பர் லீ எழுதிய To kill a Mocking bird-ஐ மீண்டும் படித்தேன். ஹார்ப்பர் லீ இரண்டு புத்தகங்கள்தான் எழுதியிருக்கிறார். 1960-ல் எழுதிய  To kill a mocking bird  அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. புலிட்ஸர் பரிசும் கிடைத்தது. ஒரு கிளாஸிக் என்று கருதப்படுகிறது. திரைப்படமாகவும் வந்தது.

அதற்குப்பிறகு லீ நீண்டகாலம் ஒன்றுமே எழுதவில்லை. ஐம்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 2015-ல் Go set a Watchman  என்கிற புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் அது 1950-லியே எழுதப்பட்டு அவருக்கு அவ்வளவு திருப்தி தராததால் வெளியிடப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதை செம்மைப்படுத்தி 2015-ல் வெளியிட்டார்.TO KILL A MOCKINGBIRD க்கு prequel என்று சொல்ல முடியும். அது அவ்வளவு வரவேற்பு பெறவில்லை. TO KILL A MOCKING BIRD  அவரது ஒரே மாஸ்டர்பீஸாக அமைந்து விட்டது. இதே போல் இரண்டு நாவல்கள் மட்டும் எழுதிய ப.சிங்காரம் ஞாபகத்திற்கு வருகிறார்.

 ஜீன் லூயிஸ் ஃபின்ச் என்கிற சிறுமிதான் இந்த நாவலின் கதைசொல்லி. ஸ்கௌட் என்று அன்பாக அழைக்கபடுகிறார். அட்டிகஸ் என்கிற வழக்கறிஞரின் மகள். ஜிம் என்று ஒரு அண்ணன். டில் என்று ஒரு நண்பன். இந்த மூன்று குழந்தைகளின் வாழ்வின் வழி இந்த நாவல் செல்கிறது. 

குழந்தை கதை சொல்கிற மாதிரி வேறு சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். ஒன்று ரொம்ப பெரிய மனுசத்தனமாக படிக்கவே எரிச்சலாக இருக்கும் அல்லது குழந்தைகள் கூட படிக்க முடியாத மாதிரி இருக்கும். இந்த நாவலின் நடை மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஒரு எட்டு வயசு சிறுமியின் வார்த்தைகளில் பெரிய விசயங்கள் எல்லாம் இலகுவாக சொல்லப்பட்டிருக்கும்.

அட்டிகஸின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில்  போ ரெட்லீ என்கிற இளைஞன் வசிக்கிறான். சிறு வயதில் நடந்த சில அசம்பாவிதங்கள் மூலம் மனநிலை சிறிதாக பாதிக்கப்பட்டு தனிமையில் வசிக்கிறான். வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. அவனை ஒருமுறையாவது பார்க்க மூன்று சிறுவர்களும் முயல்கிறார்கள். அவர்கள் முயற்சிகள் வேடிக்கைகரமான தோல்வியில் முடிவடைகின்றன. தனிமையில் இருக்கும் போவுக்கு இவர்களின் அருகாமை மகிழ்வைத் தருகின்றன. சிறு பரிசுகள் தர முயல்கிறான். ஸ்கௌட்டின் மீது அவனுக்கு அலாதிப்பிரியம். ஒரு தீ விபத்தை வேடிக்கைப் பார்க்க குளிரில் நடுங்கி நிற்கும் அவளுக்கு அவள் அறியாமல் போர்வை போர்த்துகிறான். இவர்களின் adventures  அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

இன்பமாக சென்றுகொண்டிருக்கும் அட்டிகஸ் குடும்பத்தின் வாழ்க்கையில் புயலாக ஒரு சர்ச்சை குறுக்கிடுகிறது.  ஒரு வெள்ளை இனப் பெண்ணை வன்புணர்வு செய்து விட்டதாக ஒரு கருப்பின இளைஞர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அட்டிகஸ் அந்த இளைஞருக்கு ஆதரவாக வாதாட நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார். அவர்கள் வசிக்கும மேகோம்ப் என்கிற சிறுநகரத்தில்  வெள்ளை இனத்தவரிடம் அட்டிகஸிற்கு எதிராக உணர்வு கிளம்புகிறது. அதன் எதிரொலிகளை ஜிம்மும் ஸ்கௌட்டும் நேரிட வேண்டியிருக்கிறது. அவர்களால் தங்களுக்கு எதிரான இந்த வெறுப்புணர்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 

அட்டிகஸ் தன் குழந்தைகளை இந்த சூழலை எதிர்கொள்ள பக்குவப்படுத்தும் விதம் அற்புதமாக இருக்கும். வயது முதிர்ந்தவர்களிடம் பழகுவது போலவே அவன் அவர்களிடம் பழகுகிறான். அவர்களின் சந்தேகங்களுக்கு அவன் அளிக்கிற விளக்கங்கள்இன வெறுப்புக்கு எதிராக புரிந்துணர்வை அவர்களிடம் அவன் விதைக்கிற விதம்நகரமே எதிர்க்கிற போதும் ஏன் அந்த வழக்கை எடுத்துக்கொண்டான் என்று சொல்வது எல்லாம் ஹார்ப்பர் லீ எழுதியிருக்கும் முறைதான் இதை ஒரு கிளாஸிக் ஆக மாற்றுகிறது. அட்டிகஸின் ஒரு வரித் தெறிப்புகள் அட்டிகஸ் மேற்கோள்கள் என்றே புகழ் பெற்றிருக்கின்றன.

ஒரு வெள்ளை இனக் கும்பல் ஆயுதங்களுடன் குற்றம் சாட்டப்பட்ட டாம் என்ற கருப்பின இளைஞனையும் அட்டிகஸையும் தாக்க வருகிறது. ஸ்கௌட் அவர்களிடம் குழந்தைக்கே உரிய அறியாமையுடன் பேசும்போது அவர்கள் நடந்துகொள்ளும் விதம் ரசிக்க வைக்கிறது.

டாம் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க அட்டிகஸ் புத்திசாலித்தனமாக வாதாடினாலும் வெற்றி பெற்றானா என்பது எது வெற்றி என்று நாம் உணர்வதைப் பொறுத்தது.

அட்டிகஸ் அந்தப்பெண் அப்படி குற்றம் சாட்டுவதற்கான சூழல் எப்படி வந்தது என்று காட்டும்போது அந்தப் பெண் மீது பரிதாபம் எழுகிறது.

அட்டிகஸ்ஸின் சில மேற்கோள்கள்:

ஒரு மனிதனை அவன் கண்ணிலிருந்து விஷயங்களைப் பார்க்காவிட்டால் புரிந்துகொள்ளவே முடியாது. அவன் தோலுக்குள் இறங்கி அவனாக நடக்காதவரை அவனைப் புரிந்து கொள்ளமுடியாது.

தைரியம் என்பது நீ அடிக்கப்பட்டுவிட்டாய் என்று தொடங்குவதற்கு முன்பே தெரிந்திருந்தும் , தொடங்கி அதை எப்பாடு பட்டும் முடிப்பதுதான்.

பெரும்பான்மை விதியில் அடங்காத ஒரு விசயம் ஒரு மனிதனின் மனசாட்சிதான்.

மற்றவர்களோடு இணக்கமாக வாழ்வதற்கு முன்என்னோடே நான் இணக்கமாக வாழ ஆரம்பிக்க வேண்டும்.

படிக்காதவர்கள் நிச்சயம் படியுங்கள். ஹார்ப்பர் லீயின் மொழி உங்களை வசீகரிக்கக்கூடும். நான்  இன்னும் சிலமுறை படிக்க வேண்டும்.

புதன், 31 டிசம்பர், 2025

BETTER CALL SAUL

BETTER CALL SAUL  பார்த்து விட்டேன். BREAKING BAD, BETTER CALL SAUL, GAME OF THRONES மூன்றையும் தொலைக்காட்சித் தொடர்களில் தலை சிறந்தவையாக பலர் சொல்கிறார்கள். மூன்றையும் பார்த்து விட்ட திருப்தி எனக்கு. இத்தகைய பாராட்டுகளுக்குத் தகுதியான தொடர்கள்தான். வெறும் பொழுதுபோக்கு வணிகத் தொடர்கள்தான் என்று தள்ளிவிட முடியாத தரத்தில்தான் இருக்கின்றன மூன்றும். இந்த மூன்றின் தர வரிசை பற்றி நிறைய கருத்துக்கள் இருக்கின்றன. எனது வரிசை BREAKING BAD, BETTER CALL SAUL    GAME OF THRONES Better call Saul இரண்டாம் இடத்திற்கு வருவதற்கு காரணம் சில பாகங்கள் இழுவையாக இருப்பதுதான். ஐந்து ஸீஸனில் முடித்திருக்கலாம்

இந்த OTT  தொடர்கள் நான்கைந்து வருடங்கள் முன்பு பிரபலமாக வந்தபோது வேலை நெருக்கடி காரணமாக நான் பார்க்கவில்லை. நான் ரொம்ப லேட்டு. இவ்வளவு தாமதமாக பார்த்துவிட்டு விமர்சனம் எழுத வேண்டுமா என்று தயங்கத்தான் செய்தேன். ஆனால் என் நண்பர்களில் பலர் பார்க்கவில்லை என்று தெரிந்ததால் எழுதுகிறேன். இந்த மூன்று தொடர்களை நிச்சயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

 BREAKING BAD இல் வருகிற ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரம் Saul.  அந்த கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி , ஆறு seasons வருகிற ஒரு தொடர் எடுத்திருக்கிற வின்ஸ் கில்லிகன் மற்றும் பீட்டர் கௌடின் புத்திசாலித்தனம் பாராட்டப்பட வேண்டியது. எவ்வளவு அற்புதமாக  கதை அமைத்திருக்கிறார்கள்!.  இரு சகோதரர்களுக்குள் நடக்கிற உளவியல் மோதலாக வடிவமைத்திருப்பது ஒரு  BRILLIANT STROKE.

BREAKING BAD , BETTER CALL SAUL இரண்டிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மிகப் புத்திசாலியான ஒருவன் பல காரணங்களால் வாழ்வில் தோல்விகளை, அவமானங்களைச் சந்திக்கும்போது, அவன் எந்த வழியிலும் வெற்றியை நாடத் துணியும்போது அடையும் கீழ்மையே இந்தத் தொடர்களின் அடிநாதம். 

இந்தக் கதைகளின் நாயகர்கள் கிரிமினல்கள்தான். ஆனால் அவர்கள் மீது வெறுப்பு கொள்வதை விட பரிதாபமே கொள்கிறோம். அதற்குக் காரணம் அவர்கள் சந்திருக்கிற அவமானங்கள் திறம்பட சித்தரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி அவர்களின் மனிதாபிமானப் பக்கங்களும் வெளிப்படுவதுதான். ஜிம்மி முதியோர் வழக்குகளில் ஈடுபடும்போது அவனது அன்பான அணுகுமுறை காரணமாக முதியவர்கள் அனைவரும் அவனை நேசிக்கிறார்கள். அது வெறும் நடிப்பல்ல. அவன் இயல்பு. ஒரு நஷ்டஈடு வழக்கு சீக்கிரம் முடிந்தால் ஜிம்மிக்கு (ஸால்) தேவைப்படும் பணம் சீக்கிரம் கிடைக்கும். அதற்காக பொறுப்பில் உள்ள மூதாட்டி சுயநலத்துடன் செயல்படுவதாக மற்ற முதியவர்களை நம்ப வைக்கிறான். அவர்கள் அழுத்தம் காரணமாக வழக்கும் விரைவில் முடிக்கப்பட உள்ளது. ஆனால் மற்ற பெண்கள் யாரும் அந்த மூதாட்டியுடன் பேசுவது இல்லை என்பதை ஜிம்மி உணர்கிறான். தான் தான் இப்படி எல்லாம் பொய் சொன்னது என்பது அவர்களுக்குத் தெரிய வருவது போல ஒரு நாடகம் ஆடுகிறான். வழக்கு சமரசத்திற்குப் போகாமல் நிற்கிறது. அவனுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகிறது. அதேபோல் இறுதியில் ஒரு வயதான பெண் அவனை வெளிபடுத்த அவசர உதவி பட்டனை அமுத்தும்போது அவரை தாக்க விரும்பாமல் தடுக்காமல் விடுகிறான்.அவனது மனிதாபாமானமே அவன் சிறை செல்ல காரணமாகிறது.

ஜிம்மியின் அண்ணன் சக்கின் நினைவாக கொடுக்கப்படும் உதவித் தொகைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்யும் குழுவில் ஜிம்மியும் ஒரு உறுப்பினர். ஒரு மாணவிக்கு அவள் ஒரு கடைத் திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பதால் உதவித் தொகை மறுக்கப்படுகிறது. ஜிம்மி மட்டும் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அவள் அனுபவம் அவளை மேலும் பக்குவப்படுத்தியிருக்கும் என்று வாதிடுகிறான். அவன் வாதம் நிராகரிக்கப்படுகிறது. அவன் அந்த மாணவியிடம் இப்படித்தான் நீ பழைய  நிகழ்ச்சிகளை வைத்து முத்திரை குத்தப்படுவாய். அதை எதிர்த்து போராடித் தான் மேல் வர வேண்டும். உன்னால் முடியும் என்று பேசுகிற காட்சி மனதைத் தொடுகிறது.

ஜிம்மிக்கும் அவன் அண்ணன் சக்கிற்கும் உள்ள முரண் ஆழமானது. சக் எல்லோரும் போற்றும் சட்ட மேதை. மிகுந்த படிப்பும் கடின உழைப்பும் கொண்டு முன்னேறியவர். ஆனால் அவரை எல்லோரும் மதிக்கிறார்களே தவிர அன்பு செலுத்துவதில்லை. ஆனால் ஜிம்மி விளையாட்டுப் பிள்ளை. குறுக்கு வழி, சிறு சிறு ஏமாற்று வேலைகள் மூலம் பணம் சம்பாதிப்பது என்றிருக்கிறான். ஆனால் அவர்கள் அம்மா, சக்கின் மனைவி எல்லோரும் ஜிம்மியைத்தான் நேசிக்கிறார்கள். அவன் ஒரு பகுதி நேரக் கல்வி மூலம் வக்கீலானதை சக்கினால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. ஜிம்மி தன் காதலிக்காக ஒரு தவறு செய்ததும் அவன் வக்கீல் பட்டத்தையே பறிக்க சக் திட்டமிடுகிறார். கடைசியில் அந்த உறவும் ஒரு துன்பியல் நாடகமாக முடிகிறது.

ஜிம்மியின் காதலியாக வருகிற கிம்மும் ஒரு நல்ல பாத்திரம். ஜிம்மி சிறு தவறுகள் புரிகிற போதெல்லாம் அவன் மனசாட்சியாக நிற்கிற கிம்மும் ஒரு மன அழுத்த குறைப்பு விளையாட்டாக சிறு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறாள். அவளும் ஜிம்மியும் சேர்ந்து செய்கிற ஒரு திட்டம் அவளை படிக்க வைத்த ஒரு வழக்கறிஞரின் மரணத்தில் முடிவடையும்போது அதிர்ந்து போகிறாள். நாம் இருவரும் சேர்ந்து இருந்தால்  மற்றவர்களுக்கு ஆபத்து என்று பிரிந்து போகிறாள்.

கூர்மையாக அவதானிக்கிற, திறமையாக திட்டம் தீட்டுகிற பாதுகாவலராக வரும் மைக் என்கிற முன்னாள் போலீஸ்காரர் மற்றொரு சக்தி வாய்ந்த பாத்திரம். அவரது மற்றொரு முகமான அன்பான தாத்தாவும் மனிதாபிமான இயல்பும் நன்றாக காட்டப்பட்டிருக்கிறது.

இந்த கதாபத்திரங்களும், உளவியல் நாடகங்களும் இந்த தொடர்களை  கலா சிருஷ்டி என்ற தரத்திற்கு உயர்த்துகின்றன.

நிச்சயம் பார்க்க வேண்டிய தொடர்கள் தான். ஆனால் ஒவ்வொரு தொடரும் 60 முதல் 70 மணி நேரத்தை சாப்பிட்டு விட்டன. புத்தகம் படிப்பதை இந்தப் பழக்கம் நிச்சயம் பாதித்து விட்டது. இனி இதைக் குறைத்துவிட்டு படிப்பதை அதிகரிக்க வேண்டும். Only Exceptional series or films only. பார்ப்போம்.

புதன், 19 நவம்பர், 2025

BAD GIRL

Bad Girl – ஒரு முக்கியமான திரைப்படம் என்று நினைக்கிறேன். காரணம் பெண்களின் உணர்வுகளைபதின்ம வயதுப் பெண்களின் பாலுணர்வு மலர்ச்சியிலிருந்து அவர்கள் முப்பது வயது ஆகும்வரை அடையும் உணர்வு மாற்றங்கள் வரை ஒரு பெண்ணின் பார்வையில் விவரித்த முதல் படைப்பு இது. பதின்ம வயதுப் பையன்களின் வேட்கைகளை பாலு மகேந்திரா அழியாத கோலங்களில் காண்பித்துவிட்டார். ஆனால் இளம்பெண்களின் மனங்கள் ஆணின் அருகாமையைஎப்படி உணரும் என்பதை உண்மையாகவே இந்தப் படம் சித்தரித்திருக்கிறது என்று நினைக்கிறேன். வர்ஷா பரத் என்கிற பெண்னின் வரிகள்இயக்கம்குரல் எல்லாமே இது ஒரு Sincere effort  என்று தோன்ற வைக்கின்றன்.

அஞ்சலி சிவராமன் ரம்யாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது ஒரு clitche. ஆனால் வேறு வகையில் சொல்லத் தோன்றவில்லை. அவர் தாயாராக வருகிற சாந்திப்பிரியாவின் நடிப்பும் பிரமாதம்.

பள்ளிப் பருவத்திலேயே ஒரு ஆணோடு காதல் கொள்வதுகல்லூரிப் பருவத்தில் பாலுறவு வைத்துக்கொள்வது என்பவற்றின் மீது நமக்கிருக்கும் மனத்தடைகளத் தாண்டி அந்தப் பெண்ணின் மீது நமக்கு ஒரு பிரியம் ஏற்படுவது அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி. வெறும் காமம் மட்டுமல்ல தன் கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு துணைக்கான ஏக்கம்சுதந்திர வேட்கை எல்லாம்தான் அவள் அலைக்கழிப்புகளுக்குக் காரணம் என்று புரிகிறது. ஆனால் அவள் தன் மூன்றாம் காதலனைப் பிரிந்ததற்கான காரணம் வலுவாக சொல்லப்படவில்லை. முதல் காதலன் அப்பா அம்மா மீது உள்ள பயம் காரணமாக வீட்டை விட்டு ஒடி வரப் பயப்படுகிறான். இரண்டாம் காதலன் ஒரு பொறுக்கி. கதாநாயகி சரியான துணை இல்லாததால்தான் அப்படி இருக்கிறான்தன்னால் அவனை திருத்திவிட முடியும் என்று தப்புக்கணக்குப் போட்டு ஏமாந்து விடுகிறாள். ஆனால் மூன்றாம் காதலனைப் பிரிய காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.

அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் அப்படி ரொம்ப “ஸ்ட்ரிக்ட்”அநியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றவில்லை. பாட்டி இறந்து போகிற போது உறவினர்கள் எதிர்ப்பையும் மீறி ஜாதி மாறி கல்யாணம் செய்த பெண்ணை அனுமதிக்கிற அளவிற்கு முற்போக்காகவே இருக்கிறார்கள். பதினைந்து வயதில் பெண் ஓடிப்போனால் பெற்றோர்கள் சும்மா இருக்க வேண்டுமாவளர்க்கிற பூனை வெளியா போனால் மற்ற விலங்குகள் வேட்டையாடுமேபாதுகாப்பில்லையே என்று மகள் தவிப்பது போலத்தானே எங்களுக்கும் இருக்கும் என்று அந்த தாயார் புலம்புவதும் நியாயமாகத்தான் படுகிறது.  அந்த தாயார் அவர் ரிடயர் ஆகும்போது தன் மாணவிகளிடம் IIT, அண்ணா யுனிவெர்சிடியில் படித்து பெரிய ஆளாகுங்கள் என்று சொல்கிறார். அவர்கள் நாங்கள் காமர்ஸ் மேடம் என்கிறார்கள். அதனால் என்னஅவற்றில் படித்தவர்களை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். அப்போது புன்னகை வருகிறது.

இயக்குநர் பிராமண சமூகத்திலிருந்து வந்ததால் கதை பிராமண சூழலில் நடப்பதாக காண்பித்திருக்கிறார். அது இயல்பாகவே இருக்கிறது.

 

இது ZEN -Z பெண்கள் கதை என்கிறார்கள். ஒரு பெண் எல்லா ஆண்களையும் கொன்று விட வேண்டும் என்கிறாள். மற்றொரு பெண்ணோ ஆனால் ஆண்கள் தருகிற செக்ஸ் பிடிக்கிறதே என்கிறாள். இப்படி சில  Zen -Z தூவல்கள் இருக்கின்றன.  ஆனால் எனக்குத் தெரிந்து எல்லா ஜென் பெண்களும் இப்படி பூனையோடு சுதந்திர வாழ்க்கை வாழ விரும்புவதில்லை. பெரும்பாலும் நிறைய உலகியல் புரிதலோடு இருக்கிறார்கள். இது மிகுந்த நுண்ணுணர்வு உள்ள சுதந்திர வேட்கை உள்ள ஒரு  special character ஐப் பற்றிய படம். இத்தகையப் பெண்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்வார்கள். ரம்யா ஒரு தனி வீடு பார்த்து பூனையோடு வாழ ஆரம்பிக்கும் போது இனியாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று  ஒரு பெண்ணின் தந்தையாக என் மனம் ஆசைப்படுகிறது. அதே சமயம் இந்த வாழ்க்கை சந்தோஷமாக அமையுமா என்று சந்தேகமும் படுகிறது. படம் பார்க்கலாம். Hotstar-ல் இருக்கிறது

வெள்ளி, 14 நவம்பர், 2025

CITADEL

CITADEL

 

 எனக்கு மிகவும் பிடித்த  ஆங்கில நாவல்களில்  ஒன்று CITADEL.  A.J. CRONIN எழுதியது. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் .அதேசமயம் நல்ல எழுத்தாளர். CITADEL  இலக்கியமா என்று எனக்குத் தெரியாது. எந்த இலக்கியவாதியும் இதைப்பற்றி சொல்லி நான் கேட்டதில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. படிக்க மிக சுவாரசியமான புத்தகம். எப்போது படித்தாலும்  உற்சாகமும் உத்வேகமும் கொடுக்கிற புத்தகம். என்  மதிப்பீடுகளை உருவாக்கவும் உதவியது.

                      மருத்துவர்களைப் பற்றிய கதை. ஆன்ட்ரே மான்சன் என்கிற தற்போதுதான் மருத்துவ படிப்பு முடித்த இளைஞன். தன் துறையைப்பற்றி நிறைய கனவுகள் உள்ளவன். டிரின்ஃபி என்கிற நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள பள்ளத்தாக்கு நகரம் ஒன்றில் உதவி மருத்துவராகச் சேருகிறான். அவன் படிப்பிற்கும் நிஜ வாழ்விற்கும் உள்ள வேறுபாடுகள், சில சிக்கலான பிரச்சினைகளை அவன் சந்தித்து வெற்றி காண்கிற  அனுபவங்கள் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. க்ரோனின்  ஒரு மருத்துவர் என்பதால் மருத்துவ நிகழ்வுகள் நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கின்றன.

அவனுடய ஆரம்ப அனுபவமே அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வந்த முதல் நாளே ஒரு நோயாளியை பரிசோதிக்க வேண்டி வருகிறது. அவருக்கு என்ன நோய் என்று மான்சனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஆசிரியர்கள் வகுப்பில் கூறிய முறைப்படி ஒரு “காம்பௌண்ட் “ தயாரிக்கிறான். அந்த வழியில் வந்த டென்னி என்கிற உதவி மருத்துவன் அவனை எள்ளி நகையாடுகிறான். டென்னி ஒரு சினிக். வாழ்வில் பல ஏமாற்றங்களை சந்தித்து எல்லாவற்றையும் ஒரு ஏளனப் பார்வை பார்ப்பவன். ஆனால் மருத்துவத்துறையில் மிக உயர்ந்த கல்வித் தகுதியும்அறிவும் உள்ளவன். அவன் உதவியால் இது டைபாயிடு தொற்று நோய் என்று கண்டுபிடிக்கிறார்கள். இருவருடைய பல நோயாளிகளுக்கும் இந்த தொற்று நோய் பிடிக்கிறது. ஒரு குழந்தையும் இறக்கிறது. இதற்கு காரணம் சேதமடைந்த ஒரு கழிவுநீர் தொட்டியின் கசிவு என்று கண்டுபிடிக்கிறார்கள். மாவட்ட அரசு அதிகாரிகளிடம் இந்த கழிவுத் தொட்டியை மாற்ற மன்றாடுகிறார்கள். அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். கடைசியில் இருவரும் சேர்ந்து அந்த கழிவுநீர்த் தொட்டியை வெடி வைத்து தகர்க்கிறார்கள்.

ஒரு திறமையற்ற மருத்துவர் பைத்தியம் என்று முடிவு செய்து மன நல மருத்துவமனைக்கு அனுப்ப நினைத்த ஒரு நோயாளியை தைராயிட் குறைபாடு என்று கண்டுபிடித்து குணப்படுத்துகிறான் மான்சன்.

பத்தொன்பது வருடங்களாக குழந்தையில்லாமல் தவித்தார்கள் ஒரு வயதான தொழிலாள தம்பதி. 43 வயதில் அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கிறாள். பிரசவம் நல்லபடியாக நடக்க மான்சனின் உதவியை நாடுகிறார்கள் அந்த தம்பதி. ஆனால் குழந்தை கிட்டதட்ட இறந்தே பிறக்கிறது. அதை புதிய ஒரு முறையைப் பின்பற்றி காப்பாற்றுகிறான் மான்சன்.இந்தப் பகுதிகள் அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றன. 

1930 களிலேயே மருத்துவத்துறை எப்படி வணிக மயமாகத் தொடங்குகிறதுலட்சிய வேகத்துடன் தொடஙுகிற மருத்துவர்கள் கூட எப்படி பணத்தின் ஈர்ப்பு என்கிற புயலில் சிக்கி வீழ்கிறார்கள் என்பது க்ரோனினின் வரிகளில் படிக்க பயமாகத்தான் இருக்கிறது.

ஒரு பெண்ணின் காச நோயை மருத்துவர்களால் குணப்படுத்த முடியாமல் போகஅதில் ஆராய்ச்சி செய்து புதிய முறையைக் கண்டுபிடித்த முறையான மருத்துவப் படிப்பு படிக்காத ஒரு நிபுணரின் உதவியை மான்சன் நாடுகிறான். அதன் காரணமாக அவன் வேலையே போகும் அபாயம்  வருகிறது. இது குறித்த மருத்துவக் கௌன்ஸில் விசாரணயில் மான்சனின் உரை நல்ல வீச்சுடன் அமைந்திருக்கிறது.

மான்சனின் மனைவி க்ரிஸ்டிநண்பர்கள் டென்னிஹோப் மருத்துவத் துறையில் உயர்பதவியில் இருக்கும் அப்பேய் என எல்லா பாத்திரங்களும் உயிர்ப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன

மான்சனின் உயர்கல்விப் பட்டத்திற்காக அவனை நேர்முகத்தேர்வு செய்யும் அப்பேய்  மருத்துவத் தொழிலில் அவனது முக்கியக் கொள்கை என்ன என்று கேட்கிறார். மான்சன் “ I keep telling myself never take anything for granted” என்கிறான். இதுதான் இந்த நாவலின் அடிநாதம். மான்சனை எப்போதும் வழி நடத்துவது இந்தக் கொள்கைதான். அதனால்தான் செல்வாக்குள்ள ஒரு நர்ஸ் எதோ ஒரு எண்ணெயில் காயத்திற்கு மருந்து போடும்போது அது செப்டிக் ஆகும் என்று எச்சரிக்கிறான். அது அலட்சியப்படுத்தப்படுகிறது. அவன் பயம் உண்மையாகிறது. அதனால்தான் அனுபவம் வாய்ந்த மருத்துவர் காச நோய்க்கு இவன் பரிந்துரைக்கிற சிகிட்சை முறையை மறுக்கிற போது முறையான படிப்பு இல்லாத நிபுணரிடமும் துணிந்து செல்கிறான். அதனால்தான் ஒரு பணக்கார இளம்பெண்ணைக் கன்னத்தில் அரைகிறான் சிகிட்சைக்காக என்ற போதும். தனக்கு சரி என்று தோன்றாத விஷயத்தை செய்வதே இல்லை. NO என்று சொல்ல தயங்கவதேயில்லை.

கிரிஷ்டி போன்ற மனைவியும் டென்னி போன்ற நண்பனும் கிடைத்தது அவன் அதிருஷ்டம்.

க்ரோனின் பல மருத்துவ சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கிறார். நல்ல வாசிப்பின்பம் தருகிற கதை. இந்த புத்தகம் நிறைய திறப்புகளைத் தருகிறது. நம் மதிப்பீடுகளைப் பரிசீலிக்கச் சொல்கிறது.  அனைவரும் குறிப்பாக மருத்துவர்கள் படிக்கவேண்டிய நாவல்.

புதன், 29 அக்டோபர், 2025

சிதம்பரம்

1985- ல் எனக்கு இருபது வயது. நானும் என் நண்பர் கணேசமூர்த்தியும் சோமனூரில் வேலை பார்த்துகொண்டிருந்தோம். கணேசமூர்த்தி  FRONT LINE  பத்திரிக்கை வாங்குவார். ஒரு இதழில் சிதம்பரம் என்கிற திரைப்படத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அது ஒரு மலையாள- தமிழ் இருமொழிப் படம். G. அரவிந்தன் இயக்கியது. அதில் கொடுத்திருந்த படங்களும், விவரிப்பும் மனதை மிகவும் கவர்ந்தன. உடனே அந்தப் படம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து எங்கே திரையிடப்பட்டிருக்கிறது என்று விசாரித்தோம். பாலக்காட்டில்  என்று தெரிந்ததுஅடுத்த நாளே லீவு எடுத்துகொண்டு பஸ் ஏறிவிட்டோம்.

                 பாலக்காட்டில் கோட்டை மைதானம் என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விழித்துக் கொண்டு நின்றோம். எங்கே தியேட்டர் என்று தெரியவில்லை. ஒரு இளைஞரிடம் சிதம்பரம் திரைப்படம் ஓடுகிற தியேட்டர் எங்கே இருக்கிறது என்று கேட்டோம். அவர்  நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று மலையாளத்தில் கேட்டார். சிதம்பரம் பார்க்க கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கிறோம் என்றோம். அவர் வியப்புடன், “சினிமா பார்க்க கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கிறீர்களா?” என்றார். “வாங்கள், நான் அழைத்துப் போகிறேன்” என்று ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து தியேட்டர் வாசலில் விட்டார். “அண்ணா நீங்களும் படம் பார்க்க வாருங்கள்”, என்று அழைத்தோம். “இல்லை. ஒரு அவசர வேலை இருக்கிறது  கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கிறீர்களே என்று தான் வந்தேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

                  அடுத்த இரண்டு மணி நேரம் ஒரு புது அனுபவம். நாங்கள் பார்த்த எந்த திரைப்படம் போலவும் இல்லை அந்தப் படம்.  Visual treat  என்கிற வார்த்தைக்கு அன்றுதான் அர்த்தம் தெரிந்தது. அந்தப் படத்தில் காண்பிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகள், காமிராக் கோணங்கள் எங்களை அசர அடித்தது. இந்தப் படம் எடுத்த இடத்தை உடனே பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அடுத்த வாரமே மூன்று தினங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

              மூணாறும், மாட்டுப்பட்டியும் உண்மையிலேயே கடவுளின் சொந்த இடங்கள்தான். மாட்டுப்பட்டியின் இந்தோ ஸ்விஸ் மாட்டுப்பண்ணைதான் சிதம்பரத்தின் கதைக்களம்.  அன்றெல்லாம் சுற்றுலாப்பயணிகளை பண்ணையைப் பார்க்க அனுமதிப்பார்கள். (சிலர் செய்த சில அயோக்கியத்தனங்களால் இப்போது அனுமதி இல்லை). குட்டி யானைகள் போல இருக்கின்ற மாடுகளின் கம்பீரமும், ஆழ்ந்த புல்வெளிகளின் வசீகரமும் மனதில் ஒரு அமைதியைக் கொடுத்தது. இயற்கையின் பிரமாண்ட தரிசனம் மனதின் கொந்தளிப்புகளை அடக்கி ஒரு மோன நிலையைத் தந்தது. என்பதுகளின் மூணாறு எப்படி அழகாக இருந்தது என்பது உங்களுக்குப் புரிய சிதம்பரம் தான் பார்க்க வேண்டும்.

                  மூணாறின் அழகை ஷாஜி கரூணின் காமிரா பசியோடு இருக்கும் கன்று முட்டி முட்டி பால் குடிப்பதைப் போல குடித்திருக்கிறது. அழகு ததும்பும் பிரேம்கள். கண்கள் நிறைந்து போகும்.

                      அடுத்த அற்புதமான விஷயம் தேவராஜனின் இசை. அவர் மலையாள திரை உலகின் மூத்த இசை அமைப்பாளர் என்று தெரியும். ஆனால் தமிழ் இசையில் இவ்வளவு ஞானம் உள்ளவர் என்று தெரியாது. நந்தனார் பாடல்கள், தேவாரம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று ஒரு நல்ல நாத அனுபவம். ஸ்மிதா பாடீலின் முக பாவங்களும்,ஷாஜியின் காமிரா வழி மூணாறின் பூக்களும், தேவராஜனின் இசையில் தேவார வரிகளும் ஒரு தெய்வீக அனுபவம்தான்.

                   ஸ்மிதா பாடிலின் நடிப்பு மற்றொரு சிறப்பு. ஒரு தமிழ்ப் பெண்ணாக சரியாகப் பொருந்துகிறார். மருட்சியும் , மலர்ச்சியும் திறம்பட வெளிப்படும் கண்கள், நுணுக்கமான உணர்வுகளைக் காட்டும் முக பாவங்கள் என ஒரு நடிப்பு உற்சவத்தையே நடத்தியிருக்கிறார்.  What a beautiful women!

                    C.V. ஶ்ரீராமன் என்ற எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படியாக வைத்து அரவிந்தன் உருவாக்கிய இந்த திரைச்சித்திரம் இந்தியாவின் மிகச்சிறந்த படம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது.

                       மாட்டுப்பட்டி இந்தோ ஸ்விஸ் பண்ணையில்  மாடு மேய்க்கும் ஒரு தமிழ்த் தொழிலாளி முனியாண்டி. சங்கரன் ஒரு அன்பான மலையாளி சூப்ரிடண்ட். முனியாண்டியோடு நட்பாக இருக்கிறார். சமயத்தில் பண உதவியும் செய்கிறார். குடிக்கும்போது முனியாண்டிக்கும்  ஊற்றிக்கொடுக்கிறார். இது கண்டிப்பான மற்றொரு சூப்பர்வைசரான ஜேக்கப்பிற்குப் பிடிப்பதில்லை. அவன் தொழிலாளிகளிடம் ஒரு இடைவெளி வைத்திருக்க வேண்டும் எனக் கருதுபவன்.

                       முனியாண்டி சிதம்பரத்திலிருந்து சிவகாமி என்கிற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வருகிறான்.  வரண்ட பகுதியான சிதம்பரத்திலிருந்து வந்த சிவகாமிக்கு மூணாறின் அடர்ந்த காட்டுப் பிரதேசங்களும், பிரமாண்ட மரங்களும் ஒரு மிரட்சியைக் கொடுக்கின்றன. அதேசமயம் அழகான மலர்களால் ஈர்க்கப்படுகிறாள். இந்த சூழ்நிலை ஒருவித தனிமை உணர்வைக் கொடுக்கிறது. ஏதேனும் வேலை செய்ய நினைக்கிறாள். ஆனால் முனியாண்டி அதை விரும்பவில்லை.

                         சங்கரன் சிவகாமிக்கு அவள் அப்பாவுக்கு கடிதம் எழுதும்போது அட்ரஸ் எழுத உதவியாக இருக்கிறார். அவளிடம் அன்பாக, கரிசனையாக நடந்து கொள்கிறார். ஜேக்கப்பின் கரடுமுரடான நடவடிக்கை சிவகாமிக்கு பயத்தைக் கொடுக்கிற போது சங்கரனின் அன்பான அருகாமை முனியாண்டியாலும் கொடுக்க முடியாத ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.

                   ஓரு திரைப்படக் குழுவோடு மது விருந்தில் இருக்கும்போது சிவகாமியைப்பற்றி அவதூறாகப் பேசுகிறான் ஜேக்கப். சங்கரன் அவனைத் தாக்கிவிடுகிறார். ஜேக்கப் சிவகாமிக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்துகொடுக்கிறான். அதை முனியாண்டி மறுக்கிறான். அதனால் அவனுக்கு இரவு ஸிப்ட் ஏற்பாடு செய்கிறான் ஜேக்கப். ஒரு பாடம் கற்பிக்கப் போவதாக மிரட்டவும் செய்கிறான்.

                        இரவு ஷிப்டில் வேலை செய்கிறபோது ஜேக்கப்பின் பைக் சப்தம் கேட்டு ஓடி வருகிறான் முனியாண்டி. தன் வீட்டிலிருந்து ஒடிப்போகும் சங்கரனைக் காண்கிறான். அடப்பாவி என்று கதறி அழுகிற முனியாண்டி மனைவியைக் கொன்று தற்கொலை செய்து கொள்கிறான்.

                               அடுத்தப்பகுதி முழுவதும் குற்ற உணர்ச்சியிலும், கழிவிரக்கத்திலும் அல்லலுறும் சங்கரனின் பாவ விமோசனத்திற்கான பயணத்தை விவரிக்கிறது. இடையறாது குடித்ததின் விழைவாக கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் சங்கரனை , ஆன்மீகத்தில் ஈடுபடும்படியும் , பயணம் மேற்கொள்ளும்படியும் மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

                            ஊர் ஊராய் செல்லும் சங்கரன் இறுதியாக சிதம்பரம் வருகிறார். அங்கே செருப்பு வாங்கி டோக்கன் தரும் பெண் சிவகாமியாக சங்கரன் கண்களுக்குத் தோற்றம் தருகிறாள். அவள் முன் தலை குனிந்து சரணாகதித் தோற்றத்தில் நிற்கிறார்  சங்கரன். ஊழித்தாண்டவமாடும் இசையின் பின் புலத்தில் காமிரா சிதம்பரக் கோயிலின் கோபுர அடுக்குகளை படிப்படியாக காண்பித்து, உயர்ந்து வானத்தோற்றத்தில் நிற்கிறது.

சிதம்பரம் கொடுக்கிற ஆன்மீக, தத்துவ தரிசனங்கள் பல. சங்கரன், முனியாண்டி என்பவை சிவனின் வெவ்வேறு பெயர்கள், சிவகாமி என்பது சிதம்பரக் கோயிலில் அம்பாளின் பெயர் என்பதை யோசிக்கும்போது, சிதம்பர கோயிலின் தொன்மத்தை உணர்ந்தவர்களுக்கு பல புது புது அர்த்தங்களை இந்த திரைப்படம் கொடுக்கிறது.

               சிதம்பரத்தின் தொன்மம் என்ன? இந்து மத சம்பிரதாயப் படி பஞ்ச பூத சக்திகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கோயில் இருக்கிறது. சிதம்பரம் ஆகாயத்திற்கான கோயில். சிதம்பர ரகசியம் பார்ப்பது என்று சடங்கு ஒன்று சிதம்பரம் கோயிலில் உண்டு. அதில்  ஆகாயத்தைத் தான் காட்டுவார்கள். முதலும் முடிவும் இல்லாத பிரமாண்ட ஆகாய வெட்ட வெளிதான் பிரம்மம் என்பதே சிதம்பர ரகசியம். இந்த மகா சக்தியின் முன் ஒரு தூசியாக தன்னை உணர்ந்து சிவகாமியின் முன் பணிந்து நிற்கும் சங்கரனின் தோற்றமே சிதம்பரம் திரைப்படத்தின் தரிசனம்.

                       இருபது வயதில் என் அழகுணர்ச்சிகளை தூண்டிய , என் ரசனைகளை மேம்படுத்திய படம் சிதம்பரம். நான் பார்த்த முதல் கலைப்படம் சிதம்பரம். சத்யஜித்ரே, அகிரா குருசேவா எல்லாம் அப்புறம் தான் பார்த்தேன். அதற்காக அரவிந்தன் என்றும் என் நன்றிக்கு உரியவர். இந்தப் படத்தை 2025 -ல் மீண்டும் பார்த்தேன். ஶ்ரீராமனின் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் படித்தேன். எனக்கு திரைப்படம் ஒருபடி மேலாகத் தோன்றுகிறது. நாற்பது வருடங்களுக்கு முன் எனக்கு கொடுத்த அதே பிரமிப்புகளை, உணர்வுகளை இன்றும் கொடுக்கிறது சிதம்பரம். நாற்பது வருடங்களுக்கு முன் பூத்தது அல்ல இன்று பூத்த மலர் என்று வாசம் வீசி நிற்கிறது சிதம்பரம்.