திரு ஜெய மோகன் அவர்களுக்கு,
உங்களின் ரயிலில், பிரதமன் இரண்டு சிறுகதைகளையும் படித்தேன். வெண்முரசு போன்ற பிரமாண்டமான ஆக்கதிற்கிடையிலும் இவ்வளவு ஆழமான சிறுகதைகள எழுத முடிகிற உங்கள் படைப்பூக்கம் ஆச்சரியப்படுத்துகிறது. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்கிற ரயில் நல்ல குறியீடு. சாமி நாதன் குடும்பத்தின் சொத்தை அபகரிக்க முத்து சாமியின் குடும்பம் செய்கிற முயற்சி அநீதிதான். ஆனால் முத்துசாமியின் மகள்களுக்கு நடந்தது மகா கொடுமை. அது நடக்க காரணமாய் இருந்தது பற்றிய குற்ற உணர்வு சாமி நாதனுக்கு இருக்கிறது. மன நிலை பிறழ்ந்த மகளை சொல்லாமலே திருமணம் செய்து கொடுக்க முத்து சாமி முயல்வது தவறுதான். ஆனால் அதை பெரும்பாலோர் செய்யக்கூடும். அது சாமி நாதனின் மனதிலிருக்கும் குற்ற உணர்வை மட்டுமல்ல , வாசகர் மனதில் இருக்கும் அநீதி இழைக்கப்பட்ட உணர்வையும் அகற்றி விடுகிறது. அவனுக்கு வேண்டியதுதான் என்று தான் பெரும்பாலான வாசகர் கடிதங்கள் சொல்கின்றன. பீஸ்மரை வீழ்த்த கிருஷ்ணன் கூறுகிற உத்தியை ஸகாதேவன் நியாயப்படுத்துகிற வெண்முரசுவின் அத்தியாயத்தையும் உடனே படிக்க நேர்ந்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அநீதி இழைக்க வேண்டிய அல்லது அநீதிக்கு துணை போகிற நிர்ப்பந்ததிலிருந்து யாருமே தப்ப முடியாதோ.
ரயிலில் ஏற்படுத்திய மன நெருக்கடியிலிருந்து ஒரு விடுதலை பிரதமன். பிரதமனின் மணத்தை, சுவையை இன்னும் உள்ளம் ருசிக்கிறது. தான் படைக்கிற எந்த உணவையும் வாயில் இட்டுப் பார்க்காமலே , அற்புத ருசியை சிருஷ்டிக்கிற ஆசானின் ருசியைப் பற்றிய புரிதல் ஒரு பெரிய தரிசனம். ”மனசுக்கப் பழக்கமாக்கும் ருசி. நினைச்சா மனசைப் பழக்கி எடுக்கலாம். அல்லாமெ ஒத்த ருசியில் நின்னா பலதும் நமக்கு இல்லாம ஆகும். இந்த உலகம் ருசிகள் கொண்டு நிறைஞ்சதாக்கும். நாக்க மனசு பிடிச்சு நடத்தக்கூடாது. நாக்க அது பாட்டிற்கு விட்டால் அது பாட்டிற்கு எல்லா ருசியையும் கண்டுகிடும்.” இந்த ஞானம் அவ்ருக்கு இருந்த தால் தான் அந்த பிரதமன் அவ்வளவு ருசியாய் இருக்கிறது. ஒரு வகையில் அவர் ஞானம் சாமி நாதன்களுக்கும், முத்து சாமிகளுக்கும் பதில்.
அன்புடன்
ராம கிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக