பக்கங்கள்

புதன், 29 அக்டோபர், 2025

சிதம்பரம்

1985- ல் எனக்கு இருபது வயது. நானும் என் நண்பர் கணேசமூர்த்தியும் சோமனூரில் வேலை பார்த்துகொண்டிருந்தோம். கணேசமூர்த்தி  FRONT LINE  பத்திரிக்கை வாங்குவார். ஒரு இதழில் சிதம்பரம் என்கிற திரைப்படத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அது ஒரு மலையாள- தமிழ் இருமொழிப் படம். G. அரவிந்தன் இயக்கியது. அதில் கொடுத்திருந்த படங்களும், விவரிப்பும் மனதை மிகவும் கவர்ந்தன. உடனே அந்தப் படம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து எங்கே திரையிடப்பட்டிருக்கிறது என்று விசாரித்தோம். பாலக்காட்டில்  என்று தெரிந்ததுஅடுத்த நாளே லீவு எடுத்துகொண்டு பஸ் ஏறிவிட்டோம்.

                 பாலக்காட்டில் கோட்டை மைதானம் என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விழித்துக் கொண்டு நின்றோம். எங்கே தியேட்டர் என்று தெரியவில்லை. ஒரு இளைஞரிடம் சிதம்பரம் திரைப்படம் ஓடுகிற தியேட்டர் எங்கே இருக்கிறது என்று கேட்டோம். அவர்  நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று மலையாளத்தில் கேட்டார். சிதம்பரம் பார்க்க கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கிறோம் என்றோம். அவர் வியப்புடன், “சினிமா பார்க்க கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கிறீர்களா?” என்றார். “வாங்கள், நான் அழைத்துப் போகிறேன்” என்று ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து தியேட்டர் வாசலில் விட்டார். “அண்ணா நீங்களும் படம் பார்க்க வாருங்கள்”, என்று அழைத்தோம். “இல்லை. ஒரு அவசர வேலை இருக்கிறது  கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கிறீர்களே என்று தான் வந்தேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

                  அடுத்த இரண்டு மணி நேரம் ஒரு புது அனுபவம். நாங்கள் பார்த்த எந்த திரைப்படம் போலவும் இல்லை அந்தப் படம்.  Visual treat  என்கிற வார்த்தைக்கு அன்றுதான் அர்த்தம் தெரிந்தது. அந்தப் படத்தில் காண்பிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகள், காமிராக் கோணங்கள் எங்களை அசர அடித்தது. இந்தப் படம் எடுத்த இடத்தை உடனே பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அடுத்த வாரமே மூன்று தினங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

              மூணாறும், மாட்டுப்பட்டியும் உண்மையிலேயே கடவுளின் சொந்த இடங்கள்தான். மாட்டுப்பட்டியின் இந்தோ ஸ்விஸ் மாட்டுப்பண்ணைதான் சிதம்பரத்தின் கதைக்களம்.  அன்றெல்லாம் சுற்றுலாப்பயணிகளை பண்ணையைப் பார்க்க அனுமதிப்பார்கள். (சிலர் செய்த சில அயோக்கியத்தனங்களால் இப்போது அனுமதி இல்லை). குட்டி யானைகள் போல இருக்கின்ற மாடுகளின் கம்பீரமும், ஆழ்ந்த புல்வெளிகளின் வசீகரமும் மனதில் ஒரு அமைதியைக் கொடுத்தது. இயற்கையின் பிரமாண்ட தரிசனம் மனதின் கொந்தளிப்புகளை அடக்கி ஒரு மோன நிலையைத் தந்தது. என்பதுகளின் மூணாறு எப்படி அழகாக இருந்தது என்பது உங்களுக்குப் புரிய சிதம்பரம் தான் பார்க்க வேண்டும்.

                  மூணாறின் அழகை ஷாஜி கரூணின் காமிரா பசியோடு இருக்கும் கன்று முட்டி முட்டி பால் குடிப்பதைப் போல குடித்திருக்கிறது. அழகு ததும்பும் பிரேம்கள். கண்கள் நிறைந்து போகும்.

                      அடுத்த அற்புதமான விஷயம் தேவராஜனின் இசை. அவர் மலையாள திரை உலகின் மூத்த இசை அமைப்பாளர் என்று தெரியும். ஆனால் தமிழ் இசையில் இவ்வளவு ஞானம் உள்ளவர் என்று தெரியாது. நந்தனார் பாடல்கள், தேவாரம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று ஒரு நல்ல நாத அனுபவம். ஸ்மிதா பாடீலின் முக பாவங்களும்,ஷாஜியின் காமிரா வழி மூணாறின் பூக்களும், தேவராஜனின் இசையில் தேவார வரிகளும் ஒரு தெய்வீக அனுபவம்தான்.

                   ஸ்மிதா பாடிலின் நடிப்பு மற்றொரு சிறப்பு. ஒரு தமிழ்ப் பெண்ணாக சரியாகப் பொருந்துகிறார். மருட்சியும் , மலர்ச்சியும் திறம்பட வெளிப்படும் கண்கள், நுணுக்கமான உணர்வுகளைக் காட்டும் முக பாவங்கள் என ஒரு நடிப்பு உற்சவத்தையே நடத்தியிருக்கிறார்.  What a beautiful women!

                    C.V. ஶ்ரீராமன் என்ற எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படியாக வைத்து அரவிந்தன் உருவாக்கிய இந்த திரைச்சித்திரம் இந்தியாவின் மிகச்சிறந்த படம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது.

                       மாட்டுப்பட்டி இந்தோ ஸ்விஸ் பண்ணையில்  மாடு மேய்க்கும் ஒரு தமிழ்த் தொழிலாளி முனியாண்டி. சங்கரன் ஒரு அன்பான மலையாளி சூப்ரிடண்ட். முனியாண்டியோடு நட்பாக இருக்கிறார். சமயத்தில் பண உதவியும் செய்கிறார். குடிக்கும்போது முனியாண்டிக்கும்  ஊற்றிக்கொடுக்கிறார். இது கண்டிப்பான மற்றொரு சூப்பர்வைசரான ஜேக்கப்பிற்குப் பிடிப்பதில்லை. அவன் தொழிலாளிகளிடம் ஒரு இடைவெளி வைத்திருக்க வேண்டும் எனக் கருதுபவன்.

                       முனியாண்டி சிதம்பரத்திலிருந்து சிவகாமி என்கிற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வருகிறான்.  வரண்ட பகுதியான சிதம்பரத்திலிருந்து வந்த சிவகாமிக்கு மூணாறின் அடர்ந்த காட்டுப் பிரதேசங்களும், பிரமாண்ட மரங்களும் ஒரு மிரட்சியைக் கொடுக்கின்றன. அதேசமயம் அழகான மலர்களால் ஈர்க்கப்படுகிறாள். இந்த சூழ்நிலை ஒருவித தனிமை உணர்வைக் கொடுக்கிறது. ஏதேனும் வேலை செய்ய நினைக்கிறாள். ஆனால் முனியாண்டி அதை விரும்பவில்லை.

                         சங்கரன் சிவகாமிக்கு அவள் அப்பாவுக்கு கடிதம் எழுதும்போது அட்ரஸ் எழுத உதவியாக இருக்கிறார். அவளிடம் அன்பாக, கரிசனையாக நடந்து கொள்கிறார். ஜேக்கப்பின் கரடுமுரடான நடவடிக்கை சிவகாமிக்கு பயத்தைக் கொடுக்கிற போது சங்கரனின் அன்பான அருகாமை முனியாண்டியாலும் கொடுக்க முடியாத ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.

                   ஓரு திரைப்படக் குழுவோடு மது விருந்தில் இருக்கும்போது சிவகாமியைப்பற்றி அவதூறாகப் பேசுகிறான் ஜேக்கப். சங்கரன் அவனைத் தாக்கிவிடுகிறார். ஜேக்கப் சிவகாமிக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்துகொடுக்கிறான். அதை முனியாண்டி மறுக்கிறான். அதனால் அவனுக்கு இரவு ஸிப்ட் ஏற்பாடு செய்கிறான் ஜேக்கப். ஒரு பாடம் கற்பிக்கப் போவதாக மிரட்டவும் செய்கிறான்.

                        இரவு ஷிப்டில் வேலை செய்கிறபோது ஜேக்கப்பின் பைக் சப்தம் கேட்டு ஓடி வருகிறான் முனியாண்டி. தன் வீட்டிலிருந்து ஒடிப்போகும் சங்கரனைக் காண்கிறான். அடப்பாவி என்று கதறி அழுகிற முனியாண்டி மனைவியைக் கொன்று தற்கொலை செய்து கொள்கிறான்.

                               அடுத்தப்பகுதி முழுவதும் குற்ற உணர்ச்சியிலும், கழிவிரக்கத்திலும் அல்லலுறும் சங்கரனின் பாவ விமோசனத்திற்கான பயணத்தை விவரிக்கிறது. இடையறாது குடித்ததின் விழைவாக கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் சங்கரனை , ஆன்மீகத்தில் ஈடுபடும்படியும் , பயணம் மேற்கொள்ளும்படியும் மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

                            ஊர் ஊராய் செல்லும் சங்கரன் இறுதியாக சிதம்பரம் வருகிறார். அங்கே செருப்பு வாங்கி டோக்கன் தரும் பெண் சிவகாமியாக சங்கரன் கண்களுக்குத் தோற்றம் தருகிறாள். அவள் முன் தலை குனிந்து சரணாகதித் தோற்றத்தில் நிற்கிறார்  சங்கரன். ஊழித்தாண்டவமாடும் இசையின் பின் புலத்தில் காமிரா சிதம்பரக் கோயிலின் கோபுர அடுக்குகளை படிப்படியாக காண்பித்து, உயர்ந்து வானத்தோற்றத்தில் நிற்கிறது.

சிதம்பரம் கொடுக்கிற ஆன்மீக, தத்துவ தரிசனங்கள் பல. சங்கரன், முனியாண்டி என்பவை சிவனின் வெவ்வேறு பெயர்கள், சிவகாமி என்பது சிதம்பரக் கோயிலில் அம்பாளின் பெயர் என்பதை யோசிக்கும்போது, சிதம்பர கோயிலின் தொன்மத்தை உணர்ந்தவர்களுக்கு பல புது புது அர்த்தங்களை இந்த திரைப்படம் கொடுக்கிறது.

               சிதம்பரத்தின் தொன்மம் என்ன? இந்து மத சம்பிரதாயப் படி பஞ்ச பூத சக்திகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கோயில் இருக்கிறது. சிதம்பரம் ஆகாயத்திற்கான கோயில். சிதம்பர ரகசியம் பார்ப்பது என்று சடங்கு ஒன்று சிதம்பரம் கோயிலில் உண்டு. அதில்  ஆகாயத்தைத் தான் காட்டுவார்கள். முதலும் முடிவும் இல்லாத பிரமாண்ட ஆகாய வெட்ட வெளிதான் பிரம்மம் என்பதே சிதம்பர ரகசியம். இந்த மகா சக்தியின் முன் ஒரு தூசியாக தன்னை உணர்ந்து சிவகாமியின் முன் பணிந்து நிற்கும் சங்கரனின் தோற்றமே சிதம்பரம் திரைப்படத்தின் தரிசனம்.

                       இருபது வயதில் என் அழகுணர்ச்சிகளை தூண்டிய , என் ரசனைகளை மேம்படுத்திய படம் சிதம்பரம். நான் பார்த்த முதல் கலைப்படம் சிதம்பரம். சத்யஜித்ரே, அகிரா குருசேவா எல்லாம் அப்புறம் தான் பார்த்தேன். அதற்காக அரவிந்தன் என்றும் என் நன்றிக்கு உரியவர். இந்தப் படத்தை 2025 -ல் மீண்டும் பார்த்தேன். ஶ்ரீராமனின் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் படித்தேன். எனக்கு திரைப்படம் ஒருபடி மேலாகத் தோன்றுகிறது. நாற்பது வருடங்களுக்கு முன் எனக்கு கொடுத்த அதே பிரமிப்புகளை, உணர்வுகளை இன்றும் கொடுக்கிறது சிதம்பரம். நாற்பது வருடங்களுக்கு முன் பூத்தது அல்ல இன்று பூத்த மலர் என்று வாசம் வீசி நிற்கிறது சிதம்பரம்.

வியாழன், 23 அக்டோபர், 2025

WHEN BREATH BECOMES AIR


WHEN BREATH BECOMES AIR  என்கிற புத்தகம் படித்தேன். பால் கலாநிதி எழுதியது. படிக்க வேண்டிய புத்தகம்தான். இதன் சிறப்பு  இது மரணத்தின் நிழலில் நிற்கிற ஒருவர், சில நாட்களில் இறக்கப் போகிறோம் என்று தெரிந்த ஒருவர் எழுதியது. மரணத்தின் மணம் அடிக்கிற  அசலான வரிகள்.

பால் கலாநிதி ஒரு மூளை நரம்பியல் நிபுணர். அமெரிக்காவில் வசித்த ஒரு இந்திய வம்சாவளியினர். இலக்கியம் , தத்துவம் மற்றும் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். அவருக்கு நுறையீரல் புற்று நோய் வரும்போது முப்பத்தாறு வயது. சில காலமே தன் ஆயுள் என்று தெரிந்து கொள்கிறார். நரம்பியல் துறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தவேண்டும் என்கிற கனவில் இடியாய் விழுகிறது இந்த செய்தி. அவரும் அவர் காதல் மனைவி லூசியும் எப்படி இந்த துயரத்தை எதிர் கொண்டார்கள் என்பதை விவரிக்கிறது இந்த புத்தகம்.

பால் கலாநிதி இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். இலக்கியம் மூலமே இதை எதிர்கொள்கிறார். தன் வாழ்க்கையை, தன் போராட்டங்களையே புத்தகமாக எழுதுகிறார். அவருக்கு T.S. ELIOT  மிகப் பிடித்தமான எழுத்தாளர் என்று தெரிகிறது.எலியட்டின் வரிகள் புத்தகம் நெடுகத் தெறித்துக்கொண்டே இருக்கின்றன.

இது புனைவு அல்ல. நிஜம். மரணத்தைக் கண்களுக்கு முன் காண்பவனின் வரிகள். விசையாய் நம்மை அறைகின்றன. எந்த தத்துவம் இதற்கு நீதி சொல்ல முடியும்?  முட்டி மோதுகின்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?ஆனால் இது ஒரு அழுகாச்சி புத்தகம் அல்ல. மரணத்தை தீரமாக எதிர்கொள்கிறார் பால். Matter of Fact  தொனியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் மெலோ டிராமா கிடையாது. 

பால் சொல்கிறார்.  Death may be a  one time event. But living of a terminal illness is a process.   ஒவ்வொரு படியும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளப்படுகிறது.  ஏமாற்றத்தோடு முடிகிறது. இருந்தாலும் அடுத்த படியையும் நம்பிக்கையோடுதான் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்தப் பயணத்தில் பாலின் குடும்பம் உறுதியோடு துணை நிற்கிற்து. புற்று நோய் என்று தெரிவதற்கு முன் அவர் மனைவி லூசியோடு ஒரு சிறிய கருத்துவேறுபாடு உண்டாகிறது. பிரியலாமா என்று கூட யோசிக்கிறார்கள். ஆனால் கணவருக்கு புற்று நோய் என்று தெரிந்ததும் லூசி  ஊசலாடவே இல்லை. பால் மறுமணம் செய்யச் சொல்வதை பொருட்படுத்தவே இல்லை. குழந்தை வேண்டுமா என்கிற முடிவை பால் எடுக்க வேண்டும் என்று லூசியும், லூசிதான் எடுக்க வேண்டும் என்று பாலும் நினைக்கிறார்கள். கடைசியில் செயற்கை முறையில் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.  CADY  என்று பெயரிடுகிறார்கள். அந்த குழந்தையை அவர்கள் வளர்த்துகிற முறையும் , பாலுக்கும் அந்த குழந்தைக்கும் உள்ள உறவும் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

புத்தகத்தின் ஆரம்பப்பக்கங்களில் இந்திய வம்சாவளியினர் அமெரிக்க சிறு நகரங்களில் வாழ்கிற பால்ய காலங்கள் அழகாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. படிக்க சுவரசியமாக இருக்கிறது. அமெரிக்க கல்லூரி வாழ்வையும் புரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் புத்தகங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்: புத்தகங்களை பரிசளிக்கிறார்கள். ஏக்கப் பெருமூச்சு வருகிறது.

பாலின் புற்று நோய் மருத்துவர் எம்மா, பாலை விரும்பினால் ,அறுவை சிகிட்சை நிபுணர் தொழிலை மேற்கொள்ளச் சொல்கிறார். முதல் அறுவை சிகிட்சையின் போது பலவீனம் காரணமாக பாதியிலேயே வேறு ஒரு மருத்துவரின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் அடுத்த சர்ஜரிகளில் திறம்பட பணி பிரிந்து உயிர்களைக் காப்பாற்றுகிறார். பெருமிதம் கொள்கிறார். சர்ஜரிகளிலும் , நரம்பியல் சம்பந்தமான ஆய்வுகளிலும் சாதனைகள் நிகழ்த்த திட்டங்கள் தீட்டுகிறார். ஆனால் புற்று நோய் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறது.

மருத்துவத் துறையின் வாழ்வியல் நுணுக்கமாக விவரிக்கபட்டிருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சிக்காக சாதாரண மக்கள் தங்கள் உடல்களை தானமாகத் தரும்போது , நன்றாக விவரம் தெரிந்த பல மருத்துவர்கள் தங்கள் உடல்களைத் தானமாகத் தருவதில்லை என்கிறார். மூளையில் ஒரு 2  mm  தவறாக ஆழமாக கத்தியை சொருகி விட்டால் , நோயாளியின் விதியே மாறி விடக் கூடும். மிகச் சிக்கலான வேலை  மூலை நரம்பியல் நிபுணர் வேலை.

 பால் இந்த புத்தகத்தை முடிக்க முடியவில்லை. லூசி தான் எழுதி முடிக்கிறார். அவர் மொழியும் நன்றாக இருக்கிறது.எப்படி அவரும், பாலும், குடும்பமும், மரணத்தின் நொடிகளிலும், ஜோக்குகளைப் பகிர்ந்துகொண்டு பாலின் இறுதி நிமிடங்களில் இனிமை சேர்த்தார்கள் என விவரித்திருக்கிறார். பாலின் இறுதி நொடிகளில் எப்படி அவர் உடல் இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன , எப்படி பால் தைரியமாக சுவாசிக்கும் இயந்திரத்தை நிறுத்தச் சொன்னார் என்று அவர் நுணுக்கமாக எழுதியதை கண் கலங்காமல் படிக்க முடியாது. அவரின் வார்த்தைகளிலே “Paul’s decision not to avert his eyes from death epitomizes a fortitude we don’t celebrate in our death avoidant culture. His strength was defined by ambition and effort but also by softness, the opposite of bitterness. He spent much of his life wrestling with the question of how to live a meaningful life and his book explores that territory.

 

 

எனக்குப் பாலின் பல வரிகள் பிடித்திருந்தன. 

If the unexamined life was not worth living, was the unlived life worth examining? 

 As a resident my highest ideal was not saving lives but guiding a patient or family to understanding of death or illness.

Even if I am dyeing , until I actually die, I am still living.

You can’t ever reach perfection. But you can believe in an asymptote towards which you ceaselessly striving.

The main message of Jesus is that mercy trumps justice every time.

Learning to live with the awareness of death is learning to live with grace

 

 நிச்சயம் படியுங்கள். வாழ்வு, மரணம் பற்றி சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம். சில புதிய கேள்விகளும்.......

புதன், 15 அக்டோபர், 2025

BREAKING BAD

கடைசியாக நானும் Breaking Bad  பார்த்து விட்டேன். 2008 -லிருந்து 2013 வரை வந்த தொடரை இப்போது தான் பார்க்க முடிந்தது. Netflix-ல் இருக்கிறது. தொலைக்காட்சித் தொடர்களிலேயே தலை சிறந்த ஒன்று என்று பலரால் பாராட்டப்பட்டது. பாராட்டுக்குத் தகுதியானது தான். 

ஒரு சாதாரண மசாலாத் தொடர் என்று விட முடியவில்லை. பல ஆழங்கள் இருக்கின்றன. Breaking Bad என்றால் கெட்டுப் போதல் அல்லது கெட்டவனாக மாறுதல் என்று தமிழ்ப் படுத்தலாமா? 

வால்டர் வைட் ரசாயனத் துறையில் தலை சிறந்த அறிவாளி, ஆழ்ந்த புத்திசாலி , கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் ஒரு சாதாரண ஆசிரியராக இருக்கிறார். மாலை வேளைகளில் கார்கள் சுத்தம் செய்யும் கம்பனியில் வேலை செய்கிறார். கர்ப்பிணியான அழகான மனைவிநரம்பியல் குறைபாடு உள்ள மகன் என்று சிறு குடும்பம். வாழ்க்கை அமைதியாகப் போகிறது. ஆரம்ப காலத்தில் நண்பர்களோடு Grey Matter Technologies  என்ற கம்பனி  தொடங்கியிருக்கிறார். பிறகு கருத்து வேறுபாடுகளால் வெளியே வந்து விட்டிருக்கிறார். ஆனால் அது மகத்தான வெற்றி பெற்று பங்குதாரர்கள் கோடீஸ்வரர்களாகிறார்கள்.  வால்ட் புழுங்குகிறார். இவருக்கு கான்ஸர் வருகிறது. சிகிட்சை செய்ய பணமில்லை. மெத் என்று அழைக்கப்படுகிற மெத்தம்பெட்டமைன் என்கிற போதைப் பொருள் தயாரிக்க ஆரம்பிக்கிறார். முதலில் சிகிட்சைக்காகபிறகு குடும்பத்திற்காக என பணம் சம்பாதிக்க தொடங்கியது எப்படி தன் ஈகோவிற்காக என்று மாறுகிறது என்கிற அந்த ஆளுமை மாற்றத்தை நுணுக்கமாக சித்தரித்திருத்திருக்கிறார்கள்.

Breaking Bad -n சிறப்புகளை நிறையப் பேர் பதிவிட்டிருக்கிறார்கள். நான் வியந்த சில விசயங்களை குறிப்பிட விரும்புகிறேன். முதலில் அந்த வால்டர் வைட் ஒரு இலக்கிய வாசகர். அவரிடம் அப்பரண்டிஸாக சேரும் இளைஞன் அவருக்கு வால்ட் விட்மனின் Leaves of Grass கவிதைப் புத்தகத்தைப் பரிசளிக்கிறான். அதை வால்டர் வைட் கழிவறையில் தான் வைத்திருக்கிறார். அங்கேதான் அவரும் அவர் போலீஸ்கார மச்சினன் ஹான்கும் அந்த புத்தகத்தைப் படிக்கிறார்கள். கிரிமினலும், போலீஸும் இலக்கியம் படிப்பது எனக்குப் பிடித்திருந்தது. அந்த புத்தகத்தினால்  வால்டர் வைட் மாட்டிக்கொள்கிறார்தான். எனக்கு ரொம்ப பிடித்தது கழிவறையில் புத்தகம் வைக்க ஸ்டாண்ட் எல்லாம் வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கழிவறை!. அமெரிக்கர்கள் கழிவறையில் புத்தகம் படிப்பார்கள் என்பது தெரிந்ததும் எனக்கு அமெரிக்கர்களை பிடிக்க ஆரம்பித்து விட்டது. நானும் கழிவறையில் புத்தகம் படிப்பேன். எங்கள் வீட்டில் சரஸ்வதியை அவமதிப்பதாக திட்டுவார்கள். எனக்கு இப்போது சப்போர்ட் கிடைத்துவிட்டது. ஆனானப்பட்ட வால்ட்டே இந்த பழக்கத்தினால்தான் சிக்கிகொள்கிறார்.

வால்ட் ஒரு சாதாரண Chemistry  ஆசிரியர். ஆனால் எவ்வளவு பெரிய வீடு வைத்திருக்கிறார். நீச்சல் குளம் வேறு. இருந்தாலும் மருத்துவ செலவுக்கு பணம் பத்தவில்லை. போதை மருந்து தயாரிக்க வேண்டிய நிர்பந்தம். அதிலும் பயங்கர Quality conscious. 96% Purity லெவலில்   வால்டர் வைட் ஒருவரால் தான் தயாரிக்க முடிகிறது. அதற்கு பயங்கர டிமாண்ட். அதே வேண்டும் என்று எல்லோரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஒரு போதைப் பொருளுக்கு அவ்வளவு  தர எதிர்பார்ப்பு.  ஒரு ஈ லேபுக்குள் வந்து விடுகிறது. Contamination ஆகி விடும் என்று ஒரு எபிஸோட் முழுவதும் சுத்தம் செய்கிறார் வால்டர் வைட்..  Export Quality  என்றால் அப்படி இருக்க வேண்டும் என்று எங்கள் மில்லில் மிரட்டியது நியாயம் தான் போல.

     ஒரு அவசரமான தருணத்தில் தாய் மகனை அழைத்துக்கொண்டு காரில் வருகிறாள். அவன் அப்பா ஒரு போதை மருந்து கிரிமினல் என்று தெரிந்து பயங்கர வருத்தத்தில் இருக்கிறான். இருந்தாலும் தாய் சீட் பெல்ட் போடச் சொல்லி வற்புறுத்துகிறாள். சீட் பெல்ட் இல்லாமல் பயணம் செய்வது  பாதுகாப்பு இல்லை என்கிறாள். அதேபோல் குடும்பத்தில் ஒரு விசயம் விவாதிக்கும் போது ஒரு தலயணை வைத்துக் கொள்கிறார்கள். யாரிடம்  தலயணை இருக்கிறதோ அவர்தான் பேச வேண்டும். மற்றவர் குறிக்கிடக்கூடாது. பேசுகிற விசயம்  புற்று நோய் சிகிட்சை.  இதற்கே இப்படி கட்டுப்பாடு. அமெரிக்க குடும்பங்களின்  பிணைப்பும்  நமக்கு சற்றும் குறைந்தது அல்ல என்பதும் நமக்கு தெரிய வருகிறது. அவர்கள் சமூக ஒழுக்கம், பழக்க வழக்கங்கள் சிறு சிறு சம்பவங்கள் மூலம் தெரிய வரும் போது ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது.

வால்ட் குற்றவாளியாவதன் உளவியல் காரணிகள், படிப்படியான குண மாற்றங்கள் திறம்பட எடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா எபிசோடும் உலகத்தரம். நிச்ச்யம் பார்க்க வேண்டிய ஓன்று. அடுத்தது Better call Saul பார்க்கலாம் என இருக்கிறேன். அது இதன் முதல் பாகமாம்.

திங்கள், 6 அக்டோபர், 2025

கடல்புறா

பணி ஓய்வு பெற்ற போது சில நண்பர்கள் நான் ஒரு புத்தகப் பிரியன் என்று தெரிந்ததால் புத்தகங்களைப் பரிசளித்தார்கள். அவர்கள் இலக்கியம் படிப்பவர்கள் அல்ல. அன்பினால் கொடுத்தார்கள். ஒருவர் வேள் பாரியையும், ஒருவர் கடல் புறாவையும் கொடுத்தார். 

              கடல் புறா பழைய நினைவுகளை கிளறி விட்டது.  நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே நூலக உறுப்பினராகி விட்டேன். அதில் எங்கள் தமிழ் ஆசிரியருக்கு ரொம்பப் பெருமை.  எல்லா மாணவர்களுக்கும் என்னை ஒரு முன் உதாரணமாக காட்டுவார்.  நூலகம் செல்லும் போது சாண்டில்யன் நாவல்களுக்கு கிராக்கி அதிகம் இருப்பதை கவனித்திருக்கிறேன். திரும்பி வந்ததும் உடனே போய் விடும். கிடைக்கவே கிடைக்காது. சிலர் நூலகரிடம் சொல்லி வைத்திருப்பார்கள். வேறு ஒருவர் எடுத்துப் போய்விட்டார் என்று தெரிந்ததும் நூலகர் சாமியிடம் “ என்ன சாமிசொல்லியிருந்தேனே “ என்று அலுத்துக்கொள்வார்கள். அப்படி என்ன இருக்கிறது சாண்டில்யன் புத்தகங்களில் என்று தோன்றும்.

                  எங்கள் ஊரில் ஒரு பூசாரி இருந்தார். அவர் கட்டுக் கட்டாய் புத்தகங்கள் வைத்திருப்பார். அழகாக பைண்டு செய்யப்பட்ட சாண்டில்யன் புத்தகங்கள் அவர் வீட்டில் நிறைய இருக்கும். அவர் ஒரு சாண்டில்யன் ரசிகர். அவரிடம் புத்தகங்கள் வாங்குவதற்காகவே நாங்கள் சில பையன்கள் ஒரு குரூப்பாக அவரிடம் சுற்றிக்கொண்டு சிறு ஏவல் வேலைகளை செய்துகொண்டிருப்போம்.  அதில் சிலர் சுண்டலுக்காகவும்தான். நான் அவரிடம் இருந்த எல்லா புத்தகங்களையும் அவர் வீட்டிலிருந்தே படித்துவிட்டேன். கடல் புறா நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது படித்தேன். சரசரவென்று வேகமாக போகும் திருப்பங்கள் நிறைந்த கதை. ஓரு ஞாயிறன்று அவர் திண்ணையில் படுத்துக்கொண்டு மூன்று பாகங்களையும் படித்துவிட்டேன். சாப்பிடக்கூட போகவில்லை. அப்பா வந்து தலையில் ஒன்று போட்டு இழுத்துச்சென்றார். சில நாட்கள் கடலிலேயே கடல்புறாவின் பாய் மரத்தில் கம்பீரமாய் நின்றுகொண்டிருப்பேன். பாய் மரச் சீலைகள் பறந்து கொண்டிருக்கும். இல்லாத மீசையை தடவிக்கொண்டு இளைய பல்லவனாய் கற்பனை செய்துகொண்டு போர்த்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருப்பேன்.

சாண்டில்யன் நாவல்களில் ஒரு அத்தியாயம் ஆறு பக்கங்கள் என்றால் மூன்று பக்கங்கள் வர்ணனையாக இருக்கும். முதல் இரண்டு வரிகளும் கடைசி இரண்டு வரிகளும் படித்துவிட்டால் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளலாம். வர்ணனைகளை தள்ளி விடுவேன். அடுத்த மூன்று பக்கங்களும் பட்டாசாக கதை போகும். இடை இடையில் வர்ணனைகள் இடை பற்றியதாய் இருக்கும். அந்த வயதில் அது போர் அடித்தது. டிப்ளமா மூன்றாம் வருடம் இரண்டாம் முறை படித்தபோது கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. அவர் கதைகளின் பெண் வருணனைகளுக்கு தீவிர ரசிகர்கள் இருந்தது போல் கடும் விமரிசனங்களும் இருந்த. அவர் அதை சிருங்கார ரசம் எப்படி ஒரு ஒரு இலக்கிய முறை என்று காளிதாசன்கம்பன் எல்லோரையும் சாட்சிக்கு அழைத்து பக்கம் பக்கமாக எழுதுவார். இன்றைய திகட்டும் இணைய உலகில் அவருடைய  SOFT PORN  வளவள வரிகளாகவே கடந்து போகப்படும்.

ஒரு  Nostalogic  உணர்வுடன் தான் கடல்புறாவை கையில் எடுத்தேன். இப்போதும் சுவாரசியமாகவே படிக்க முடிந்தது என்பது சாண்டில்யன் ஒரு வெற்றிகரமான வணிக எழுத்தாளர் என்பதற்கு சாட்சி.

1967 -ல் முதல் பதிப்பு. 2025 -ல் எழுபத்தி ஏழாம் பதிப்பு என்பது சாண்டில்யன் நடையில் சொன்னால் சிறு பத்திரிக்கை இலக்கிய எழுத்தாளனுக்கு கோபப் பெருமூச்சு வரவழைக்கும் விஷயம். .

கதா நாயகன் ஒரிஸா போகிறான்: (கலிங்கம்). மலேசியா போகிறான். (கடாரம்) இந்தோனேஸியா போகிறான்.(ஶ்ரீ விஜயம்). சீனாக்காரர்கள் வருகிறார்கள்: அரேபியர்கள் வருகிறார்கள். எல்லோரும் இலக்கண சுத்தத் தமிழ் பேசுகிறார்கள். பேசிக்கொண்டிருக்கையிலேயே LOGIC பிரச்சினை சாண்டில்யனுக்கு ஞாபகம் வந்து  அவர்கள் மொழியில் பேசுவது போல் எழுதிவிடுகிறார். அது ஒன்றும் பிரச்சினை இல்லை. கதா நாயகனுக்கு எல்லா மொழிகளும் புரிகிறது. நமக்கு ஆந்திரா போவதற்குள்ளேயே நாக்கு தள்ளி விடுகிறது.

நாற்பது வருடங்கள் கழித்துப் படிப்பதாலாயோ என்னவோ கதை முழுவதும் மறந்து விட்டது. ஆகவே ஒவ்வொரு திருப்பம் வரும் போதும் ஆ என்று ஆச்சரியப்பட வைத்தது. விரு விரு என்று படித்தேன். மூன்று பாகங்கள்ஆயிரத்து அருநூறு பக்கங்களை விட்டு விட்டு நான்கைந்து மணி நேரத்தில் படித்து விட்டேன் என்று  நினைக்கிறேன். என்னுள்ளே உள்ள பாலகன் இன்னும் சாகவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

கதை எல்லா சாண்டில்யன் நாவல்களிலும் ஒன்று தான். ஓரு தமிழ் வீரன் அன்னிய நாட்டு அரசுகளை வீழ்த்துகிறான். போகிற இடத்திலெல்லாம் அழகிகள் அவனை வீழ்த்துகிறார்கள் அல்லது வீழ்கிறார்கள். சாண்டில்யனுக்கு பலதார உறவு என்பது பெரிய கவர்ச்சி என்று தெரிகிறது. காந்தர்வ விவாகம் தெரியுமா?  Instant Marriage.  ராஜ வம்சத்திற்கு அது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாம்!

சாதாரணமாக சாண்டில்யன் கதைகளில் ஒரு மந்திரி அல்லது துறவி பயங்கர புத்திசாலியாக வருவார். இதில் காணோம். கதா நாயகனே அந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறான்.

ஒரு காலத்தில் இத்தகைய வணிக நாவல்களை ஒரு பெரிய நச்சு சக்தி என்று இலக்கிய வாதிகள் எதிர்த்தார்கள். அதற்கான தேவை இருந்தது. காரணம் இலக்கியம் பற்றிய பிரக்ஞை தமிழ் உலகில் இல்லை. வணிக எழுத்துவணிக கலை ஒரு பொழுது போக்காகத்தான் இருக்கும். இலக்கியத்தின் மூலம் தான் வாழ்க்கையின் ஆழங்களைஅர்த்தங்களை உணர முடியும். நிகர் வாழ்க்கை வாழ முடியும். ஆனால் எல்லாராலும் உடனடியாக இலக்கியத்துக்குள் வந்துவிட முடியாது. அதற்கான வாசிப்புப் பயிற்சியை வணிக எழுத்து தரும். ஆகவே அதற்கான இடம் மதிப்பு இருக்கிறது என்கிறார் ஜெயமோகன். எனக்கும் அதே கருத்துதான். என் படிப்பு ருசியை வளர்த்தியவர்கள் சாண்டில்யன்கல்கிசுஜாதா போன்றவர்கள். அவர்கள் என் நன்றிக்கு உரியவர்கள்தான்.

அதேபோல் ஒரு அலையாய் வந்தவர் ரோலிங். ஹாரி போட்டர் கதைகள் படிப்பு ஆர்வத்தை ஒரு தலைமுறையினரிடம் புயல் போல் மூட்டியது. என் மகன் ஹாரி போட்டர் கதைகளை இரவும் பகலுமாக படித்தான். எவ்வளவு ஆழமாக படித்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள ஹாரி போட்டரின் அங்கிள் என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டேன். டிரில் தயார் செய்யும் கம்பனி  வைத்திருக்கிறார் என்றான். அசந்து போனேன்.

படிப்பின் ருசியையும் ஆனந்தத்தையும் அறிந்து கொள்ள ஹாரி போட்டர், சாண்டில்யன் போன்றவர்கள் ஒரு துவக்கப்படி. அந்த வகையில் இவர்கள் முக்கியமானவர்கள். ஆனால் ஒரு சிலரே இந்தப் படிகளைத் தாண்டி இலக்கிய சிகரங்களில் ஏறுகிறார்கள். படிப்பின் சுவையை தக்க வைக்கும் சூழல் இருந்தால் இவர்கள் எண்ணிக்கை உயரலாம்.

சாண்டில்யனை எண்பது தொன்ணூறுகளில் மாணவர்களாக இருந்தவர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என நினைக்கிறேன். இன்றைய இளைஞர்கள் படிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் படிப்பது போல நவீனப்படுத்தப்பட்ட சாண்டில்யர்கள் படிப்பின் தித்திப்பை ஊட்ட நிச்சயம் தேவை. இனிப்பு அதிகம் ஆனால் நோய் வரும் என்று காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள். நல்ல உணவிற்கு வந்து சேர்வார்கள்.