பக்கங்கள்

புதன், 19 நவம்பர், 2025

BAD GIRL

Bad Girl – ஒரு முக்கியமான திரைப்படம் என்று நினைக்கிறேன். காரணம் பெண்களின் உணர்வுகளைபதின்ம வயதுப் பெண்களின் பாலுணர்வு மலர்ச்சியிலிருந்து அவர்கள் முப்பது வயது ஆகும்வரை அடையும் உணர்வு மாற்றங்கள் வரை ஒரு பெண்ணின் பார்வையில் விவரித்த முதல் படைப்பு இது. பதின்ம வயதுப் பையன்களின் வேட்கைகளை பாலு மகேந்திரா அழியாத கோலங்களில் காண்பித்துவிட்டார். ஆனால் இளம்பெண்களின் மனங்கள் ஆணின் அருகாமையைஎப்படி உணரும் என்பதை உண்மையாகவே இந்தப் படம் சித்தரித்திருக்கிறது என்று நினைக்கிறேன். வர்ஷா பரத் என்கிற பெண்னின் வரிகள்இயக்கம்குரல் எல்லாமே இது ஒரு Sincere effort  என்று தோன்ற வைக்கின்றன்.

அஞ்சலி சிவராமன் ரம்யாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது ஒரு clitche. ஆனால் வேறு வகையில் சொல்லத் தோன்றவில்லை. அவர் தாயாராக வருகிற சாந்திப்பிரியாவின் நடிப்பும் பிரமாதம்.

பள்ளிப் பருவத்திலேயே ஒரு ஆணோடு காதல் கொள்வதுகல்லூரிப் பருவத்தில் பாலுறவு வைத்துக்கொள்வது என்பவற்றின் மீது நமக்கிருக்கும் மனத்தடைகளத் தாண்டி அந்தப் பெண்ணின் மீது நமக்கு ஒரு பிரியம் ஏற்படுவது அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி. வெறும் காமம் மட்டுமல்ல தன் கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு துணைக்கான ஏக்கம்சுதந்திர வேட்கை எல்லாம்தான் அவள் அலைக்கழிப்புகளுக்குக் காரணம் என்று புரிகிறது. ஆனால் அவள் தன் மூன்றாம் காதலனைப் பிரிந்ததற்கான காரணம் வலுவாக சொல்லப்படவில்லை. முதல் காதலன் அப்பா அம்மா மீது உள்ள பயம் காரணமாக வீட்டை விட்டு ஒடி வரப் பயப்படுகிறான். இரண்டாம் காதலன் ஒரு பொறுக்கி. கதாநாயகி சரியான துணை இல்லாததால்தான் அப்படி இருக்கிறான்தன்னால் அவனை திருத்திவிட முடியும் என்று தப்புக்கணக்குப் போட்டு ஏமாந்து விடுகிறாள். ஆனால் மூன்றாம் காதலனைப் பிரிய காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.

அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் அப்படி ரொம்ப “ஸ்ட்ரிக்ட்”அநியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றவில்லை. பாட்டி இறந்து போகிற போது உறவினர்கள் எதிர்ப்பையும் மீறி ஜாதி மாறி கல்யாணம் செய்த பெண்ணை அனுமதிக்கிற அளவிற்கு முற்போக்காகவே இருக்கிறார்கள். பதினைந்து வயதில் பெண் ஓடிப்போனால் பெற்றோர்கள் சும்மா இருக்க வேண்டுமாவளர்க்கிற பூனை வெளியா போனால் மற்ற விலங்குகள் வேட்டையாடுமேபாதுகாப்பில்லையே என்று மகள் தவிப்பது போலத்தானே எங்களுக்கும் இருக்கும் என்று அந்த தாயார் புலம்புவதும் நியாயமாகத்தான் படுகிறது.  அந்த தாயார் அவர் ரிடயர் ஆகும்போது தன் மாணவிகளிடம் IIT, அண்ணா யுனிவெர்சிடியில் படித்து பெரிய ஆளாகுங்கள் என்று சொல்கிறார். அவர்கள் நாங்கள் காமர்ஸ் மேடம் என்கிறார்கள். அதனால் என்னஅவற்றில் படித்தவர்களை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். அப்போது புன்னகை வருகிறது.

இயக்குநர் பிராமண சமூகத்திலிருந்து வந்ததால் கதை பிராமண சூழலில் நடப்பதாக காண்பித்திருக்கிறார். அது இயல்பாகவே இருக்கிறது.

 

இது ZEN -Z பெண்கள் கதை என்கிறார்கள். ஒரு பெண் எல்லா ஆண்களையும் கொன்று விட வேண்டும் என்கிறாள். மற்றொரு பெண்ணோ ஆனால் ஆண்கள் தருகிற செக்ஸ் பிடிக்கிறதே என்கிறாள். இப்படி சில  Zen -Z தூவல்கள் இருக்கின்றன.  ஆனால் எனக்குத் தெரிந்து எல்லா ஜென் பெண்களும் இப்படி பூனையோடு சுதந்திர வாழ்க்கை வாழ விரும்புவதில்லை. பெரும்பாலும் நிறைய உலகியல் புரிதலோடு இருக்கிறார்கள். இது மிகுந்த நுண்ணுணர்வு உள்ள சுதந்திர வேட்கை உள்ள ஒரு  special character ஐப் பற்றிய படம். இத்தகையப் பெண்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்வார்கள். ரம்யா ஒரு தனி வீடு பார்த்து பூனையோடு வாழ ஆரம்பிக்கும் போது இனியாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று  ஒரு பெண்ணின் தந்தையாக என் மனம் ஆசைப்படுகிறது. அதே சமயம் இந்த வாழ்க்கை சந்தோஷமாக அமையுமா என்று சந்தேகமும் படுகிறது. படம் பார்க்கலாம். Hotstar-ல் இருக்கிறது

வெள்ளி, 14 நவம்பர், 2025

CITADEL

CITADEL

 

 எனக்கு மிகவும் பிடித்த  ஆங்கில நாவல்களில்  ஒன்று CITADEL.  A.J. CRONIN எழுதியது. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் .அதேசமயம் நல்ல எழுத்தாளர். CITADEL  இலக்கியமா என்று எனக்குத் தெரியாது. எந்த இலக்கியவாதியும் இதைப்பற்றி சொல்லி நான் கேட்டதில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. படிக்க மிக சுவாரசியமான புத்தகம். எப்போது படித்தாலும்  உற்சாகமும் உத்வேகமும் கொடுக்கிற புத்தகம். என்  மதிப்பீடுகளை உருவாக்கவும் உதவியது.

                      மருத்துவர்களைப் பற்றிய கதை. ஆன்ட்ரே மான்சன் என்கிற தற்போதுதான் மருத்துவ படிப்பு முடித்த இளைஞன். தன் துறையைப்பற்றி நிறைய கனவுகள் உள்ளவன். டிரின்ஃபி என்கிற நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள பள்ளத்தாக்கு நகரம் ஒன்றில் உதவி மருத்துவராகச் சேருகிறான். அவன் படிப்பிற்கும் நிஜ வாழ்விற்கும் உள்ள வேறுபாடுகள், சில சிக்கலான பிரச்சினைகளை அவன் சந்தித்து வெற்றி காண்கிற  அனுபவங்கள் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. க்ரோனின்  ஒரு மருத்துவர் என்பதால் மருத்துவ நிகழ்வுகள் நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கின்றன.

அவனுடய ஆரம்ப அனுபவமே அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வந்த முதல் நாளே ஒரு நோயாளியை பரிசோதிக்க வேண்டி வருகிறது. அவருக்கு என்ன நோய் என்று மான்சனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஆசிரியர்கள் வகுப்பில் கூறிய முறைப்படி ஒரு “காம்பௌண்ட் “ தயாரிக்கிறான். அந்த வழியில் வந்த டென்னி என்கிற உதவி மருத்துவன் அவனை எள்ளி நகையாடுகிறான். டென்னி ஒரு சினிக். வாழ்வில் பல ஏமாற்றங்களை சந்தித்து எல்லாவற்றையும் ஒரு ஏளனப் பார்வை பார்ப்பவன். ஆனால் மருத்துவத்துறையில் மிக உயர்ந்த கல்வித் தகுதியும்அறிவும் உள்ளவன். அவன் உதவியால் இது டைபாயிடு தொற்று நோய் என்று கண்டுபிடிக்கிறார்கள். இருவருடைய பல நோயாளிகளுக்கும் இந்த தொற்று நோய் பிடிக்கிறது. ஒரு குழந்தையும் இறக்கிறது. இதற்கு காரணம் சேதமடைந்த ஒரு கழிவுநீர் தொட்டியின் கசிவு என்று கண்டுபிடிக்கிறார்கள். மாவட்ட அரசு அதிகாரிகளிடம் இந்த கழிவுத் தொட்டியை மாற்ற மன்றாடுகிறார்கள். அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். கடைசியில் இருவரும் சேர்ந்து அந்த கழிவுநீர்த் தொட்டியை வெடி வைத்து தகர்க்கிறார்கள்.

ஒரு திறமையற்ற மருத்துவர் பைத்தியம் என்று முடிவு செய்து மன நல மருத்துவமனைக்கு அனுப்ப நினைத்த ஒரு நோயாளியை தைராயிட் குறைபாடு என்று கண்டுபிடித்து குணப்படுத்துகிறான் மான்சன்.

பத்தொன்பது வருடங்களாக குழந்தையில்லாமல் தவித்தார்கள் ஒரு வயதான தொழிலாள தம்பதி. 43 வயதில் அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கிறாள். பிரசவம் நல்லபடியாக நடக்க மான்சனின் உதவியை நாடுகிறார்கள் அந்த தம்பதி. ஆனால் குழந்தை கிட்டதட்ட இறந்தே பிறக்கிறது. அதை புதிய ஒரு முறையைப் பின்பற்றி காப்பாற்றுகிறான் மான்சன்.இந்தப் பகுதிகள் அற்புதமாக எழுதப்பட்டிருக்கின்றன. 

1930 களிலேயே மருத்துவத்துறை எப்படி வணிக மயமாகத் தொடங்குகிறதுலட்சிய வேகத்துடன் தொடஙுகிற மருத்துவர்கள் கூட எப்படி பணத்தின் ஈர்ப்பு என்கிற புயலில் சிக்கி வீழ்கிறார்கள் என்பது க்ரோனினின் வரிகளில் படிக்க பயமாகத்தான் இருக்கிறது.

ஒரு பெண்ணின் காச நோயை மருத்துவர்களால் குணப்படுத்த முடியாமல் போகஅதில் ஆராய்ச்சி செய்து புதிய முறையைக் கண்டுபிடித்த முறையான மருத்துவப் படிப்பு படிக்காத ஒரு நிபுணரின் உதவியை மான்சன் நாடுகிறான். அதன் காரணமாக அவன் வேலையே போகும் அபாயம்  வருகிறது. இது குறித்த மருத்துவக் கௌன்ஸில் விசாரணயில் மான்சனின் உரை நல்ல வீச்சுடன் அமைந்திருக்கிறது.

மான்சனின் மனைவி க்ரிஸ்டிநண்பர்கள் டென்னிஹோப் மருத்துவத் துறையில் உயர்பதவியில் இருக்கும் அப்பேய் என எல்லா பாத்திரங்களும் உயிர்ப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன

மான்சனின் உயர்கல்விப் பட்டத்திற்காக அவனை நேர்முகத்தேர்வு செய்யும் அப்பேய்  மருத்துவத் தொழிலில் அவனது முக்கியக் கொள்கை என்ன என்று கேட்கிறார். மான்சன் “ I keep telling myself never take anything for granted” என்கிறான். இதுதான் இந்த நாவலின் அடிநாதம். மான்சனை எப்போதும் வழி நடத்துவது இந்தக் கொள்கைதான். அதனால்தான் செல்வாக்குள்ள ஒரு நர்ஸ் எதோ ஒரு எண்ணெயில் காயத்திற்கு மருந்து போடும்போது அது செப்டிக் ஆகும் என்று எச்சரிக்கிறான். அது அலட்சியப்படுத்தப்படுகிறது. அவன் பயம் உண்மையாகிறது. அதனால்தான் அனுபவம் வாய்ந்த மருத்துவர் காச நோய்க்கு இவன் பரிந்துரைக்கிற சிகிட்சை முறையை மறுக்கிற போது முறையான படிப்பு இல்லாத நிபுணரிடமும் துணிந்து செல்கிறான். அதனால்தான் ஒரு பணக்கார இளம்பெண்ணைக் கன்னத்தில் அரைகிறான் சிகிட்சைக்காக என்ற போதும். தனக்கு சரி என்று தோன்றாத விஷயத்தை செய்வதே இல்லை. NO என்று சொல்ல தயங்கவதேயில்லை.

கிரிஷ்டி போன்ற மனைவியும் டென்னி போன்ற நண்பனும் கிடைத்தது அவன் அதிருஷ்டம்.

க்ரோனின் பல மருத்துவ சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கிறார். நல்ல வாசிப்பின்பம் தருகிற கதை. இந்த புத்தகம் நிறைய திறப்புகளைத் தருகிறது. நம் மதிப்பீடுகளைப் பரிசீலிக்கச் சொல்கிறது.  அனைவரும் குறிப்பாக மருத்துவர்கள் படிக்கவேண்டிய நாவல்.

புதன், 29 அக்டோபர், 2025

சிதம்பரம்

1985- ல் எனக்கு இருபது வயது. நானும் என் நண்பர் கணேசமூர்த்தியும் சோமனூரில் வேலை பார்த்துகொண்டிருந்தோம். கணேசமூர்த்தி  FRONT LINE  பத்திரிக்கை வாங்குவார். ஒரு இதழில் சிதம்பரம் என்கிற திரைப்படத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அது ஒரு மலையாள- தமிழ் இருமொழிப் படம். G. அரவிந்தன் இயக்கியது. அதில் கொடுத்திருந்த படங்களும், விவரிப்பும் மனதை மிகவும் கவர்ந்தன. உடனே அந்தப் படம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து எங்கே திரையிடப்பட்டிருக்கிறது என்று விசாரித்தோம். பாலக்காட்டில்  என்று தெரிந்ததுஅடுத்த நாளே லீவு எடுத்துகொண்டு பஸ் ஏறிவிட்டோம்.

                 பாலக்காட்டில் கோட்டை மைதானம் என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விழித்துக் கொண்டு நின்றோம். எங்கே தியேட்டர் என்று தெரியவில்லை. ஒரு இளைஞரிடம் சிதம்பரம் திரைப்படம் ஓடுகிற தியேட்டர் எங்கே இருக்கிறது என்று கேட்டோம். அவர்  நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று மலையாளத்தில் கேட்டார். சிதம்பரம் பார்க்க கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கிறோம் என்றோம். அவர் வியப்புடன், “சினிமா பார்க்க கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கிறீர்களா?” என்றார். “வாங்கள், நான் அழைத்துப் போகிறேன்” என்று ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து தியேட்டர் வாசலில் விட்டார். “அண்ணா நீங்களும் படம் பார்க்க வாருங்கள்”, என்று அழைத்தோம். “இல்லை. ஒரு அவசர வேலை இருக்கிறது  கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கிறீர்களே என்று தான் வந்தேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

                  அடுத்த இரண்டு மணி நேரம் ஒரு புது அனுபவம். நாங்கள் பார்த்த எந்த திரைப்படம் போலவும் இல்லை அந்தப் படம்.  Visual treat  என்கிற வார்த்தைக்கு அன்றுதான் அர்த்தம் தெரிந்தது. அந்தப் படத்தில் காண்பிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகள், காமிராக் கோணங்கள் எங்களை அசர அடித்தது. இந்தப் படம் எடுத்த இடத்தை உடனே பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அடுத்த வாரமே மூன்று தினங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

              மூணாறும், மாட்டுப்பட்டியும் உண்மையிலேயே கடவுளின் சொந்த இடங்கள்தான். மாட்டுப்பட்டியின் இந்தோ ஸ்விஸ் மாட்டுப்பண்ணைதான் சிதம்பரத்தின் கதைக்களம்.  அன்றெல்லாம் சுற்றுலாப்பயணிகளை பண்ணையைப் பார்க்க அனுமதிப்பார்கள். (சிலர் செய்த சில அயோக்கியத்தனங்களால் இப்போது அனுமதி இல்லை). குட்டி யானைகள் போல இருக்கின்ற மாடுகளின் கம்பீரமும், ஆழ்ந்த புல்வெளிகளின் வசீகரமும் மனதில் ஒரு அமைதியைக் கொடுத்தது. இயற்கையின் பிரமாண்ட தரிசனம் மனதின் கொந்தளிப்புகளை அடக்கி ஒரு மோன நிலையைத் தந்தது. என்பதுகளின் மூணாறு எப்படி அழகாக இருந்தது என்பது உங்களுக்குப் புரிய சிதம்பரம் தான் பார்க்க வேண்டும்.

                  மூணாறின் அழகை ஷாஜி கரூணின் காமிரா பசியோடு இருக்கும் கன்று முட்டி முட்டி பால் குடிப்பதைப் போல குடித்திருக்கிறது. அழகு ததும்பும் பிரேம்கள். கண்கள் நிறைந்து போகும்.

                      அடுத்த அற்புதமான விஷயம் தேவராஜனின் இசை. அவர் மலையாள திரை உலகின் மூத்த இசை அமைப்பாளர் என்று தெரியும். ஆனால் தமிழ் இசையில் இவ்வளவு ஞானம் உள்ளவர் என்று தெரியாது. நந்தனார் பாடல்கள், தேவாரம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று ஒரு நல்ல நாத அனுபவம். ஸ்மிதா பாடீலின் முக பாவங்களும்,ஷாஜியின் காமிரா வழி மூணாறின் பூக்களும், தேவராஜனின் இசையில் தேவார வரிகளும் ஒரு தெய்வீக அனுபவம்தான்.

                   ஸ்மிதா பாடிலின் நடிப்பு மற்றொரு சிறப்பு. ஒரு தமிழ்ப் பெண்ணாக சரியாகப் பொருந்துகிறார். மருட்சியும் , மலர்ச்சியும் திறம்பட வெளிப்படும் கண்கள், நுணுக்கமான உணர்வுகளைக் காட்டும் முக பாவங்கள் என ஒரு நடிப்பு உற்சவத்தையே நடத்தியிருக்கிறார்.  What a beautiful women!

                    C.V. ஶ்ரீராமன் என்ற எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படியாக வைத்து அரவிந்தன் உருவாக்கிய இந்த திரைச்சித்திரம் இந்தியாவின் மிகச்சிறந்த படம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது.

                       மாட்டுப்பட்டி இந்தோ ஸ்விஸ் பண்ணையில்  மாடு மேய்க்கும் ஒரு தமிழ்த் தொழிலாளி முனியாண்டி. சங்கரன் ஒரு அன்பான மலையாளி சூப்ரிடண்ட். முனியாண்டியோடு நட்பாக இருக்கிறார். சமயத்தில் பண உதவியும் செய்கிறார். குடிக்கும்போது முனியாண்டிக்கும்  ஊற்றிக்கொடுக்கிறார். இது கண்டிப்பான மற்றொரு சூப்பர்வைசரான ஜேக்கப்பிற்குப் பிடிப்பதில்லை. அவன் தொழிலாளிகளிடம் ஒரு இடைவெளி வைத்திருக்க வேண்டும் எனக் கருதுபவன்.

                       முனியாண்டி சிதம்பரத்திலிருந்து சிவகாமி என்கிற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வருகிறான்.  வரண்ட பகுதியான சிதம்பரத்திலிருந்து வந்த சிவகாமிக்கு மூணாறின் அடர்ந்த காட்டுப் பிரதேசங்களும், பிரமாண்ட மரங்களும் ஒரு மிரட்சியைக் கொடுக்கின்றன. அதேசமயம் அழகான மலர்களால் ஈர்க்கப்படுகிறாள். இந்த சூழ்நிலை ஒருவித தனிமை உணர்வைக் கொடுக்கிறது. ஏதேனும் வேலை செய்ய நினைக்கிறாள். ஆனால் முனியாண்டி அதை விரும்பவில்லை.

                         சங்கரன் சிவகாமிக்கு அவள் அப்பாவுக்கு கடிதம் எழுதும்போது அட்ரஸ் எழுத உதவியாக இருக்கிறார். அவளிடம் அன்பாக, கரிசனையாக நடந்து கொள்கிறார். ஜேக்கப்பின் கரடுமுரடான நடவடிக்கை சிவகாமிக்கு பயத்தைக் கொடுக்கிற போது சங்கரனின் அன்பான அருகாமை முனியாண்டியாலும் கொடுக்க முடியாத ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.

                   ஓரு திரைப்படக் குழுவோடு மது விருந்தில் இருக்கும்போது சிவகாமியைப்பற்றி அவதூறாகப் பேசுகிறான் ஜேக்கப். சங்கரன் அவனைத் தாக்கிவிடுகிறார். ஜேக்கப் சிவகாமிக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்துகொடுக்கிறான். அதை முனியாண்டி மறுக்கிறான். அதனால் அவனுக்கு இரவு ஸிப்ட் ஏற்பாடு செய்கிறான் ஜேக்கப். ஒரு பாடம் கற்பிக்கப் போவதாக மிரட்டவும் செய்கிறான்.

                        இரவு ஷிப்டில் வேலை செய்கிறபோது ஜேக்கப்பின் பைக் சப்தம் கேட்டு ஓடி வருகிறான் முனியாண்டி. தன் வீட்டிலிருந்து ஒடிப்போகும் சங்கரனைக் காண்கிறான். அடப்பாவி என்று கதறி அழுகிற முனியாண்டி மனைவியைக் கொன்று தற்கொலை செய்து கொள்கிறான்.

                               அடுத்தப்பகுதி முழுவதும் குற்ற உணர்ச்சியிலும், கழிவிரக்கத்திலும் அல்லலுறும் சங்கரனின் பாவ விமோசனத்திற்கான பயணத்தை விவரிக்கிறது. இடையறாது குடித்ததின் விழைவாக கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் சங்கரனை , ஆன்மீகத்தில் ஈடுபடும்படியும் , பயணம் மேற்கொள்ளும்படியும் மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

                            ஊர் ஊராய் செல்லும் சங்கரன் இறுதியாக சிதம்பரம் வருகிறார். அங்கே செருப்பு வாங்கி டோக்கன் தரும் பெண் சிவகாமியாக சங்கரன் கண்களுக்குத் தோற்றம் தருகிறாள். அவள் முன் தலை குனிந்து சரணாகதித் தோற்றத்தில் நிற்கிறார்  சங்கரன். ஊழித்தாண்டவமாடும் இசையின் பின் புலத்தில் காமிரா சிதம்பரக் கோயிலின் கோபுர அடுக்குகளை படிப்படியாக காண்பித்து, உயர்ந்து வானத்தோற்றத்தில் நிற்கிறது.

சிதம்பரம் கொடுக்கிற ஆன்மீக, தத்துவ தரிசனங்கள் பல. சங்கரன், முனியாண்டி என்பவை சிவனின் வெவ்வேறு பெயர்கள், சிவகாமி என்பது சிதம்பரக் கோயிலில் அம்பாளின் பெயர் என்பதை யோசிக்கும்போது, சிதம்பர கோயிலின் தொன்மத்தை உணர்ந்தவர்களுக்கு பல புது புது அர்த்தங்களை இந்த திரைப்படம் கொடுக்கிறது.

               சிதம்பரத்தின் தொன்மம் என்ன? இந்து மத சம்பிரதாயப் படி பஞ்ச பூத சக்திகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கோயில் இருக்கிறது. சிதம்பரம் ஆகாயத்திற்கான கோயில். சிதம்பர ரகசியம் பார்ப்பது என்று சடங்கு ஒன்று சிதம்பரம் கோயிலில் உண்டு. அதில்  ஆகாயத்தைத் தான் காட்டுவார்கள். முதலும் முடிவும் இல்லாத பிரமாண்ட ஆகாய வெட்ட வெளிதான் பிரம்மம் என்பதே சிதம்பர ரகசியம். இந்த மகா சக்தியின் முன் ஒரு தூசியாக தன்னை உணர்ந்து சிவகாமியின் முன் பணிந்து நிற்கும் சங்கரனின் தோற்றமே சிதம்பரம் திரைப்படத்தின் தரிசனம்.

                       இருபது வயதில் என் அழகுணர்ச்சிகளை தூண்டிய , என் ரசனைகளை மேம்படுத்திய படம் சிதம்பரம். நான் பார்த்த முதல் கலைப்படம் சிதம்பரம். சத்யஜித்ரே, அகிரா குருசேவா எல்லாம் அப்புறம் தான் பார்த்தேன். அதற்காக அரவிந்தன் என்றும் என் நன்றிக்கு உரியவர். இந்தப் படத்தை 2025 -ல் மீண்டும் பார்த்தேன். ஶ்ரீராமனின் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் படித்தேன். எனக்கு திரைப்படம் ஒருபடி மேலாகத் தோன்றுகிறது. நாற்பது வருடங்களுக்கு முன் எனக்கு கொடுத்த அதே பிரமிப்புகளை, உணர்வுகளை இன்றும் கொடுக்கிறது சிதம்பரம். நாற்பது வருடங்களுக்கு முன் பூத்தது அல்ல இன்று பூத்த மலர் என்று வாசம் வீசி நிற்கிறது சிதம்பரம்.

வியாழன், 23 அக்டோபர், 2025

WHEN BREATH BECOMES AIR


WHEN BREATH BECOMES AIR  என்கிற புத்தகம் படித்தேன். பால் கலாநிதி எழுதியது. படிக்க வேண்டிய புத்தகம்தான். இதன் சிறப்பு  இது மரணத்தின் நிழலில் நிற்கிற ஒருவர், சில நாட்களில் இறக்கப் போகிறோம் என்று தெரிந்த ஒருவர் எழுதியது. மரணத்தின் மணம் அடிக்கிற  அசலான வரிகள்.

பால் கலாநிதி ஒரு மூளை நரம்பியல் நிபுணர். அமெரிக்காவில் வசித்த ஒரு இந்திய வம்சாவளியினர். இலக்கியம் , தத்துவம் மற்றும் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். அவருக்கு நுறையீரல் புற்று நோய் வரும்போது முப்பத்தாறு வயது. சில காலமே தன் ஆயுள் என்று தெரிந்து கொள்கிறார். நரம்பியல் துறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தவேண்டும் என்கிற கனவில் இடியாய் விழுகிறது இந்த செய்தி. அவரும் அவர் காதல் மனைவி லூசியும் எப்படி இந்த துயரத்தை எதிர் கொண்டார்கள் என்பதை விவரிக்கிறது இந்த புத்தகம்.

பால் கலாநிதி இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். இலக்கியம் மூலமே இதை எதிர்கொள்கிறார். தன் வாழ்க்கையை, தன் போராட்டங்களையே புத்தகமாக எழுதுகிறார். அவருக்கு T.S. ELIOT  மிகப் பிடித்தமான எழுத்தாளர் என்று தெரிகிறது.எலியட்டின் வரிகள் புத்தகம் நெடுகத் தெறித்துக்கொண்டே இருக்கின்றன.

இது புனைவு அல்ல. நிஜம். மரணத்தைக் கண்களுக்கு முன் காண்பவனின் வரிகள். விசையாய் நம்மை அறைகின்றன. எந்த தத்துவம் இதற்கு நீதி சொல்ல முடியும்?  முட்டி மோதுகின்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?ஆனால் இது ஒரு அழுகாச்சி புத்தகம் அல்ல. மரணத்தை தீரமாக எதிர்கொள்கிறார் பால். Matter of Fact  தொனியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் மெலோ டிராமா கிடையாது. 

பால் சொல்கிறார்.  Death may be a  one time event. But living of a terminal illness is a process.   ஒவ்வொரு படியும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளப்படுகிறது.  ஏமாற்றத்தோடு முடிகிறது. இருந்தாலும் அடுத்த படியையும் நம்பிக்கையோடுதான் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்தப் பயணத்தில் பாலின் குடும்பம் உறுதியோடு துணை நிற்கிற்து. புற்று நோய் என்று தெரிவதற்கு முன் அவர் மனைவி லூசியோடு ஒரு சிறிய கருத்துவேறுபாடு உண்டாகிறது. பிரியலாமா என்று கூட யோசிக்கிறார்கள். ஆனால் கணவருக்கு புற்று நோய் என்று தெரிந்ததும் லூசி  ஊசலாடவே இல்லை. பால் மறுமணம் செய்யச் சொல்வதை பொருட்படுத்தவே இல்லை. குழந்தை வேண்டுமா என்கிற முடிவை பால் எடுக்க வேண்டும் என்று லூசியும், லூசிதான் எடுக்க வேண்டும் என்று பாலும் நினைக்கிறார்கள். கடைசியில் செயற்கை முறையில் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.  CADY  என்று பெயரிடுகிறார்கள். அந்த குழந்தையை அவர்கள் வளர்த்துகிற முறையும் , பாலுக்கும் அந்த குழந்தைக்கும் உள்ள உறவும் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

புத்தகத்தின் ஆரம்பப்பக்கங்களில் இந்திய வம்சாவளியினர் அமெரிக்க சிறு நகரங்களில் வாழ்கிற பால்ய காலங்கள் அழகாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. படிக்க சுவரசியமாக இருக்கிறது. அமெரிக்க கல்லூரி வாழ்வையும் புரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் புத்தகங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்: புத்தகங்களை பரிசளிக்கிறார்கள். ஏக்கப் பெருமூச்சு வருகிறது.

பாலின் புற்று நோய் மருத்துவர் எம்மா, பாலை விரும்பினால் ,அறுவை சிகிட்சை நிபுணர் தொழிலை மேற்கொள்ளச் சொல்கிறார். முதல் அறுவை சிகிட்சையின் போது பலவீனம் காரணமாக பாதியிலேயே வேறு ஒரு மருத்துவரின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் அடுத்த சர்ஜரிகளில் திறம்பட பணி பிரிந்து உயிர்களைக் காப்பாற்றுகிறார். பெருமிதம் கொள்கிறார். சர்ஜரிகளிலும் , நரம்பியல் சம்பந்தமான ஆய்வுகளிலும் சாதனைகள் நிகழ்த்த திட்டங்கள் தீட்டுகிறார். ஆனால் புற்று நோய் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறது.

மருத்துவத் துறையின் வாழ்வியல் நுணுக்கமாக விவரிக்கபட்டிருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சிக்காக சாதாரண மக்கள் தங்கள் உடல்களை தானமாகத் தரும்போது , நன்றாக விவரம் தெரிந்த பல மருத்துவர்கள் தங்கள் உடல்களைத் தானமாகத் தருவதில்லை என்கிறார். மூளையில் ஒரு 2  mm  தவறாக ஆழமாக கத்தியை சொருகி விட்டால் , நோயாளியின் விதியே மாறி விடக் கூடும். மிகச் சிக்கலான வேலை  மூலை நரம்பியல் நிபுணர் வேலை.

 பால் இந்த புத்தகத்தை முடிக்க முடியவில்லை. லூசி தான் எழுதி முடிக்கிறார். அவர் மொழியும் நன்றாக இருக்கிறது.எப்படி அவரும், பாலும், குடும்பமும், மரணத்தின் நொடிகளிலும், ஜோக்குகளைப் பகிர்ந்துகொண்டு பாலின் இறுதி நிமிடங்களில் இனிமை சேர்த்தார்கள் என விவரித்திருக்கிறார். பாலின் இறுதி நொடிகளில் எப்படி அவர் உடல் இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன , எப்படி பால் தைரியமாக சுவாசிக்கும் இயந்திரத்தை நிறுத்தச் சொன்னார் என்று அவர் நுணுக்கமாக எழுதியதை கண் கலங்காமல் படிக்க முடியாது. அவரின் வார்த்தைகளிலே “Paul’s decision not to avert his eyes from death epitomizes a fortitude we don’t celebrate in our death avoidant culture. His strength was defined by ambition and effort but also by softness, the opposite of bitterness. He spent much of his life wrestling with the question of how to live a meaningful life and his book explores that territory.

 

 

எனக்குப் பாலின் பல வரிகள் பிடித்திருந்தன. 

If the unexamined life was not worth living, was the unlived life worth examining? 

 As a resident my highest ideal was not saving lives but guiding a patient or family to understanding of death or illness.

Even if I am dyeing , until I actually die, I am still living.

You can’t ever reach perfection. But you can believe in an asymptote towards which you ceaselessly striving.

The main message of Jesus is that mercy trumps justice every time.

Learning to live with the awareness of death is learning to live with grace

 

 நிச்சயம் படியுங்கள். வாழ்வு, மரணம் பற்றி சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம். சில புதிய கேள்விகளும்.......

புதன், 15 அக்டோபர், 2025

BREAKING BAD

கடைசியாக நானும் Breaking Bad  பார்த்து விட்டேன். 2008 -லிருந்து 2013 வரை வந்த தொடரை இப்போது தான் பார்க்க முடிந்தது. Netflix-ல் இருக்கிறது. தொலைக்காட்சித் தொடர்களிலேயே தலை சிறந்த ஒன்று என்று பலரால் பாராட்டப்பட்டது. பாராட்டுக்குத் தகுதியானது தான். 

ஒரு சாதாரண மசாலாத் தொடர் என்று விட முடியவில்லை. பல ஆழங்கள் இருக்கின்றன. Breaking Bad என்றால் கெட்டுப் போதல் அல்லது கெட்டவனாக மாறுதல் என்று தமிழ்ப் படுத்தலாமா? 

வால்டர் வைட் ரசாயனத் துறையில் தலை சிறந்த அறிவாளி, ஆழ்ந்த புத்திசாலி , கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் ஒரு சாதாரண ஆசிரியராக இருக்கிறார். மாலை வேளைகளில் கார்கள் சுத்தம் செய்யும் கம்பனியில் வேலை செய்கிறார். கர்ப்பிணியான அழகான மனைவிநரம்பியல் குறைபாடு உள்ள மகன் என்று சிறு குடும்பம். வாழ்க்கை அமைதியாகப் போகிறது. ஆரம்ப காலத்தில் நண்பர்களோடு Grey Matter Technologies  என்ற கம்பனி  தொடங்கியிருக்கிறார். பிறகு கருத்து வேறுபாடுகளால் வெளியே வந்து விட்டிருக்கிறார். ஆனால் அது மகத்தான வெற்றி பெற்று பங்குதாரர்கள் கோடீஸ்வரர்களாகிறார்கள்.  வால்ட் புழுங்குகிறார். இவருக்கு கான்ஸர் வருகிறது. சிகிட்சை செய்ய பணமில்லை. மெத் என்று அழைக்கப்படுகிற மெத்தம்பெட்டமைன் என்கிற போதைப் பொருள் தயாரிக்க ஆரம்பிக்கிறார். முதலில் சிகிட்சைக்காகபிறகு குடும்பத்திற்காக என பணம் சம்பாதிக்க தொடங்கியது எப்படி தன் ஈகோவிற்காக என்று மாறுகிறது என்கிற அந்த ஆளுமை மாற்றத்தை நுணுக்கமாக சித்தரித்திருத்திருக்கிறார்கள்.

Breaking Bad -n சிறப்புகளை நிறையப் பேர் பதிவிட்டிருக்கிறார்கள். நான் வியந்த சில விசயங்களை குறிப்பிட விரும்புகிறேன். முதலில் அந்த வால்டர் வைட் ஒரு இலக்கிய வாசகர். அவரிடம் அப்பரண்டிஸாக சேரும் இளைஞன் அவருக்கு வால்ட் விட்மனின் Leaves of Grass கவிதைப் புத்தகத்தைப் பரிசளிக்கிறான். அதை வால்டர் வைட் கழிவறையில் தான் வைத்திருக்கிறார். அங்கேதான் அவரும் அவர் போலீஸ்கார மச்சினன் ஹான்கும் அந்த புத்தகத்தைப் படிக்கிறார்கள். கிரிமினலும், போலீஸும் இலக்கியம் படிப்பது எனக்குப் பிடித்திருந்தது. அந்த புத்தகத்தினால்  வால்டர் வைட் மாட்டிக்கொள்கிறார்தான். எனக்கு ரொம்ப பிடித்தது கழிவறையில் புத்தகம் வைக்க ஸ்டாண்ட் எல்லாம் வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கழிவறை!. அமெரிக்கர்கள் கழிவறையில் புத்தகம் படிப்பார்கள் என்பது தெரிந்ததும் எனக்கு அமெரிக்கர்களை பிடிக்க ஆரம்பித்து விட்டது. நானும் கழிவறையில் புத்தகம் படிப்பேன். எங்கள் வீட்டில் சரஸ்வதியை அவமதிப்பதாக திட்டுவார்கள். எனக்கு இப்போது சப்போர்ட் கிடைத்துவிட்டது. ஆனானப்பட்ட வால்ட்டே இந்த பழக்கத்தினால்தான் சிக்கிகொள்கிறார்.

வால்ட் ஒரு சாதாரண Chemistry  ஆசிரியர். ஆனால் எவ்வளவு பெரிய வீடு வைத்திருக்கிறார். நீச்சல் குளம் வேறு. இருந்தாலும் மருத்துவ செலவுக்கு பணம் பத்தவில்லை. போதை மருந்து தயாரிக்க வேண்டிய நிர்பந்தம். அதிலும் பயங்கர Quality conscious. 96% Purity லெவலில்   வால்டர் வைட் ஒருவரால் தான் தயாரிக்க முடிகிறது. அதற்கு பயங்கர டிமாண்ட். அதே வேண்டும் என்று எல்லோரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஒரு போதைப் பொருளுக்கு அவ்வளவு  தர எதிர்பார்ப்பு.  ஒரு ஈ லேபுக்குள் வந்து விடுகிறது. Contamination ஆகி விடும் என்று ஒரு எபிஸோட் முழுவதும் சுத்தம் செய்கிறார் வால்டர் வைட்..  Export Quality  என்றால் அப்படி இருக்க வேண்டும் என்று எங்கள் மில்லில் மிரட்டியது நியாயம் தான் போல.

     ஒரு அவசரமான தருணத்தில் தாய் மகனை அழைத்துக்கொண்டு காரில் வருகிறாள். அவன் அப்பா ஒரு போதை மருந்து கிரிமினல் என்று தெரிந்து பயங்கர வருத்தத்தில் இருக்கிறான். இருந்தாலும் தாய் சீட் பெல்ட் போடச் சொல்லி வற்புறுத்துகிறாள். சீட் பெல்ட் இல்லாமல் பயணம் செய்வது  பாதுகாப்பு இல்லை என்கிறாள். அதேபோல் குடும்பத்தில் ஒரு விசயம் விவாதிக்கும் போது ஒரு தலயணை வைத்துக் கொள்கிறார்கள். யாரிடம்  தலயணை இருக்கிறதோ அவர்தான் பேச வேண்டும். மற்றவர் குறிக்கிடக்கூடாது. பேசுகிற விசயம்  புற்று நோய் சிகிட்சை.  இதற்கே இப்படி கட்டுப்பாடு. அமெரிக்க குடும்பங்களின்  பிணைப்பும்  நமக்கு சற்றும் குறைந்தது அல்ல என்பதும் நமக்கு தெரிய வருகிறது. அவர்கள் சமூக ஒழுக்கம், பழக்க வழக்கங்கள் சிறு சிறு சம்பவங்கள் மூலம் தெரிய வரும் போது ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது.

வால்ட் குற்றவாளியாவதன் உளவியல் காரணிகள், படிப்படியான குண மாற்றங்கள் திறம்பட எடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா எபிசோடும் உலகத்தரம். நிச்ச்யம் பார்க்க வேண்டிய ஓன்று. அடுத்தது Better call Saul பார்க்கலாம் என இருக்கிறேன். அது இதன் முதல் பாகமாம்.

திங்கள், 6 அக்டோபர், 2025

கடல்புறா

பணி ஓய்வு பெற்ற போது சில நண்பர்கள் நான் ஒரு புத்தகப் பிரியன் என்று தெரிந்ததால் புத்தகங்களைப் பரிசளித்தார்கள். அவர்கள் இலக்கியம் படிப்பவர்கள் அல்ல. அன்பினால் கொடுத்தார்கள். ஒருவர் வேள் பாரியையும், ஒருவர் கடல் புறாவையும் கொடுத்தார். 

              கடல் புறா பழைய நினைவுகளை கிளறி விட்டது.  நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே நூலக உறுப்பினராகி விட்டேன். அதில் எங்கள் தமிழ் ஆசிரியருக்கு ரொம்பப் பெருமை.  எல்லா மாணவர்களுக்கும் என்னை ஒரு முன் உதாரணமாக காட்டுவார்.  நூலகம் செல்லும் போது சாண்டில்யன் நாவல்களுக்கு கிராக்கி அதிகம் இருப்பதை கவனித்திருக்கிறேன். திரும்பி வந்ததும் உடனே போய் விடும். கிடைக்கவே கிடைக்காது. சிலர் நூலகரிடம் சொல்லி வைத்திருப்பார்கள். வேறு ஒருவர் எடுத்துப் போய்விட்டார் என்று தெரிந்ததும் நூலகர் சாமியிடம் “ என்ன சாமிசொல்லியிருந்தேனே “ என்று அலுத்துக்கொள்வார்கள். அப்படி என்ன இருக்கிறது சாண்டில்யன் புத்தகங்களில் என்று தோன்றும்.

                  எங்கள் ஊரில் ஒரு பூசாரி இருந்தார். அவர் கட்டுக் கட்டாய் புத்தகங்கள் வைத்திருப்பார். அழகாக பைண்டு செய்யப்பட்ட சாண்டில்யன் புத்தகங்கள் அவர் வீட்டில் நிறைய இருக்கும். அவர் ஒரு சாண்டில்யன் ரசிகர். அவரிடம் புத்தகங்கள் வாங்குவதற்காகவே நாங்கள் சில பையன்கள் ஒரு குரூப்பாக அவரிடம் சுற்றிக்கொண்டு சிறு ஏவல் வேலைகளை செய்துகொண்டிருப்போம்.  அதில் சிலர் சுண்டலுக்காகவும்தான். நான் அவரிடம் இருந்த எல்லா புத்தகங்களையும் அவர் வீட்டிலிருந்தே படித்துவிட்டேன். கடல் புறா நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது படித்தேன். சரசரவென்று வேகமாக போகும் திருப்பங்கள் நிறைந்த கதை. ஓரு ஞாயிறன்று அவர் திண்ணையில் படுத்துக்கொண்டு மூன்று பாகங்களையும் படித்துவிட்டேன். சாப்பிடக்கூட போகவில்லை. அப்பா வந்து தலையில் ஒன்று போட்டு இழுத்துச்சென்றார். சில நாட்கள் கடலிலேயே கடல்புறாவின் பாய் மரத்தில் கம்பீரமாய் நின்றுகொண்டிருப்பேன். பாய் மரச் சீலைகள் பறந்து கொண்டிருக்கும். இல்லாத மீசையை தடவிக்கொண்டு இளைய பல்லவனாய் கற்பனை செய்துகொண்டு போர்த்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருப்பேன்.

சாண்டில்யன் நாவல்களில் ஒரு அத்தியாயம் ஆறு பக்கங்கள் என்றால் மூன்று பக்கங்கள் வர்ணனையாக இருக்கும். முதல் இரண்டு வரிகளும் கடைசி இரண்டு வரிகளும் படித்துவிட்டால் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளலாம். வர்ணனைகளை தள்ளி விடுவேன். அடுத்த மூன்று பக்கங்களும் பட்டாசாக கதை போகும். இடை இடையில் வர்ணனைகள் இடை பற்றியதாய் இருக்கும். அந்த வயதில் அது போர் அடித்தது. டிப்ளமா மூன்றாம் வருடம் இரண்டாம் முறை படித்தபோது கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. அவர் கதைகளின் பெண் வருணனைகளுக்கு தீவிர ரசிகர்கள் இருந்தது போல் கடும் விமரிசனங்களும் இருந்த. அவர் அதை சிருங்கார ரசம் எப்படி ஒரு ஒரு இலக்கிய முறை என்று காளிதாசன்கம்பன் எல்லோரையும் சாட்சிக்கு அழைத்து பக்கம் பக்கமாக எழுதுவார். இன்றைய திகட்டும் இணைய உலகில் அவருடைய  SOFT PORN  வளவள வரிகளாகவே கடந்து போகப்படும்.

ஒரு  Nostalogic  உணர்வுடன் தான் கடல்புறாவை கையில் எடுத்தேன். இப்போதும் சுவாரசியமாகவே படிக்க முடிந்தது என்பது சாண்டில்யன் ஒரு வெற்றிகரமான வணிக எழுத்தாளர் என்பதற்கு சாட்சி.

1967 -ல் முதல் பதிப்பு. 2025 -ல் எழுபத்தி ஏழாம் பதிப்பு என்பது சாண்டில்யன் நடையில் சொன்னால் சிறு பத்திரிக்கை இலக்கிய எழுத்தாளனுக்கு கோபப் பெருமூச்சு வரவழைக்கும் விஷயம். .

கதா நாயகன் ஒரிஸா போகிறான்: (கலிங்கம்). மலேசியா போகிறான். (கடாரம்) இந்தோனேஸியா போகிறான்.(ஶ்ரீ விஜயம்). சீனாக்காரர்கள் வருகிறார்கள்: அரேபியர்கள் வருகிறார்கள். எல்லோரும் இலக்கண சுத்தத் தமிழ் பேசுகிறார்கள். பேசிக்கொண்டிருக்கையிலேயே LOGIC பிரச்சினை சாண்டில்யனுக்கு ஞாபகம் வந்து  அவர்கள் மொழியில் பேசுவது போல் எழுதிவிடுகிறார். அது ஒன்றும் பிரச்சினை இல்லை. கதா நாயகனுக்கு எல்லா மொழிகளும் புரிகிறது. நமக்கு ஆந்திரா போவதற்குள்ளேயே நாக்கு தள்ளி விடுகிறது.

நாற்பது வருடங்கள் கழித்துப் படிப்பதாலாயோ என்னவோ கதை முழுவதும் மறந்து விட்டது. ஆகவே ஒவ்வொரு திருப்பம் வரும் போதும் ஆ என்று ஆச்சரியப்பட வைத்தது. விரு விரு என்று படித்தேன். மூன்று பாகங்கள்ஆயிரத்து அருநூறு பக்கங்களை விட்டு விட்டு நான்கைந்து மணி நேரத்தில் படித்து விட்டேன் என்று  நினைக்கிறேன். என்னுள்ளே உள்ள பாலகன் இன்னும் சாகவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

கதை எல்லா சாண்டில்யன் நாவல்களிலும் ஒன்று தான். ஓரு தமிழ் வீரன் அன்னிய நாட்டு அரசுகளை வீழ்த்துகிறான். போகிற இடத்திலெல்லாம் அழகிகள் அவனை வீழ்த்துகிறார்கள் அல்லது வீழ்கிறார்கள். சாண்டில்யனுக்கு பலதார உறவு என்பது பெரிய கவர்ச்சி என்று தெரிகிறது. காந்தர்வ விவாகம் தெரியுமா?  Instant Marriage.  ராஜ வம்சத்திற்கு அது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாம்!

சாதாரணமாக சாண்டில்யன் கதைகளில் ஒரு மந்திரி அல்லது துறவி பயங்கர புத்திசாலியாக வருவார். இதில் காணோம். கதா நாயகனே அந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறான்.

ஒரு காலத்தில் இத்தகைய வணிக நாவல்களை ஒரு பெரிய நச்சு சக்தி என்று இலக்கிய வாதிகள் எதிர்த்தார்கள். அதற்கான தேவை இருந்தது. காரணம் இலக்கியம் பற்றிய பிரக்ஞை தமிழ் உலகில் இல்லை. வணிக எழுத்துவணிக கலை ஒரு பொழுது போக்காகத்தான் இருக்கும். இலக்கியத்தின் மூலம் தான் வாழ்க்கையின் ஆழங்களைஅர்த்தங்களை உணர முடியும். நிகர் வாழ்க்கை வாழ முடியும். ஆனால் எல்லாராலும் உடனடியாக இலக்கியத்துக்குள் வந்துவிட முடியாது. அதற்கான வாசிப்புப் பயிற்சியை வணிக எழுத்து தரும். ஆகவே அதற்கான இடம் மதிப்பு இருக்கிறது என்கிறார் ஜெயமோகன். எனக்கும் அதே கருத்துதான். என் படிப்பு ருசியை வளர்த்தியவர்கள் சாண்டில்யன்கல்கிசுஜாதா போன்றவர்கள். அவர்கள் என் நன்றிக்கு உரியவர்கள்தான்.

அதேபோல் ஒரு அலையாய் வந்தவர் ரோலிங். ஹாரி போட்டர் கதைகள் படிப்பு ஆர்வத்தை ஒரு தலைமுறையினரிடம் புயல் போல் மூட்டியது. என் மகன் ஹாரி போட்டர் கதைகளை இரவும் பகலுமாக படித்தான். எவ்வளவு ஆழமாக படித்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள ஹாரி போட்டரின் அங்கிள் என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டேன். டிரில் தயார் செய்யும் கம்பனி  வைத்திருக்கிறார் என்றான். அசந்து போனேன்.

படிப்பின் ருசியையும் ஆனந்தத்தையும் அறிந்து கொள்ள ஹாரி போட்டர், சாண்டில்யன் போன்றவர்கள் ஒரு துவக்கப்படி. அந்த வகையில் இவர்கள் முக்கியமானவர்கள். ஆனால் ஒரு சிலரே இந்தப் படிகளைத் தாண்டி இலக்கிய சிகரங்களில் ஏறுகிறார்கள். படிப்பின் சுவையை தக்க வைக்கும் சூழல் இருந்தால் இவர்கள் எண்ணிக்கை உயரலாம்.

சாண்டில்யனை எண்பது தொன்ணூறுகளில் மாணவர்களாக இருந்தவர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என நினைக்கிறேன். இன்றைய இளைஞர்கள் படிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் படிப்பது போல நவீனப்படுத்தப்பட்ட சாண்டில்யர்கள் படிப்பின் தித்திப்பை ஊட்ட நிச்சயம் தேவை. இனிப்பு அதிகம் ஆனால் நோய் வரும் என்று காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள். நல்ல உணவிற்கு வந்து சேர்வார்கள்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

ZORBA THE GREEK

பணி ஒய்வு பெற்றதும் படித்த முதல் புத்தகம் Zorba, the Greek என்பது தற்செயலாக அமைந்த விஷயம். ஆனால் சரியான  நேரத்தில் சரியான புத்தகம்தான். ஒஸோ, சாரு, ஜெயமோகன் எல்லோரும் சிலாகித்து எழுதியிருந்ததால்  படித்தேன். Nikos Kazantzakis  எழுதியது. படிக்க கஷ்டமான புத்தகம்தான். அவ்வளவு சுவாரசியமான நடை என்று சொல்ல முடியாது. பொறுமையாகத்தான்  படிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் படிக்க முடிந்ததற்கு காரணம் இடை இடையில் வருகிற சில அபாரமான பகுதிகள். படித்து முடிந்ததும் படிக்க வேண்டிய புத்தகம் தான் என்று தோன்றியது.

கதாநாயகனின் பெயர் சொல்லப்படுவதில்லை. புத்தகம் படித்துக் கொண்டு இலக்கற்ற வாழ்க்கை வாழும் ஒரு அறிவு ஜீவி, போர் அடிப்பதால் க்ரேட் என்கிற கிரேக்க கிராமம் ஒன்றில் சுரங்க வேலை செய்யப் புறப்படுகிறான். வழியில் அறுபத்தைந்து வயதுள்ள ஸோர்பா என்பவன் தன்னையும்  அழைத்துச் செல்லும்படி கேட்கிறான். எதற்காக என்றால் அற்புதமான சூப்புகள் செய்வேன் என்கிறான். இவனும் சம்மதிக்கிறான். இருவரும் சேர்ந்து அந்த கிரேக்க கிராமத்தில் சுரங்கத்தில் நிலக்கரி எடுக்கும் வேலை செய்வதுஅங்குள்ள பெண்களுடனான அவர்கள் உறவுகள்மடாலயத்தில் இருக்கும் துறவிகளுடன் தொடர்பு என ஒரு வாழ்க்கைச் சித்திரம் விரிகிறது. படிக்காத சோர்பாவின் வாழ்க்கைச் சித்தாந்தம் ஒரு மகத்தான தத்துவம். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் தேன் போல அருந்துபவன் அவன். அந்தந்த நொடியில் வாழ்கிறவன். அவன் வாழ்வின் தத்துவத்தை அழகான இரண்டு சித்தரிப்புகளில் விவரிக்கிறார் கஸந்த்ஸாகிஸ்.

ஸோர்பா தன் முதலாளியிடம் சொல்கிறான். “பாஸ்ஓரு நாள் சிறிய கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். 90 வயதுள்ள தாத்தா ஒருவர் ஒரு பாதாம் செடியை நட்டுக் கொண்டிருந்தார். என்ன தாத்தா செடி நடுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார்’ “மகனேநான் இறக்கவே போவதில்லை என்பது போல காரியங்களை செய்து கொண்டிருக்கிறேன் “. நான் சொன்னேன “ நான் அடுத்த நிமிடத்தில் இறந்து போய் விடுவேன் என்பது போல காரியங்களை செய்து கொண்டிருக்கிறேன். யார் இதில் சரி பாஸ்?”  முதலாளியால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அவர் நினைக்கிறார். இரண்டுமே  ஒரே சிகரத்துக்கு இட்டுச் செல்லும் இரு பாதைகள். எது சரி என்று எப்படி சொல்ல முடியும்?

கஸாந்த்ஸாகிஸ் இந்த நாவலில் பெண்களை சித்தரிக்கும் விதம் இந்தக் காலத்தில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. மிகவும் பலவீனமானவர்களாக பூக்களைப் போல கையாள வேண்டியவர்களாக சித்தரித்திருக்க்றார். ஓரு விவேகமான பலமான பெண் கதாபாத்திரம் ஒன்று கூட இல்லை. 1952-ல் எழுதப்பட்ட புத்தகம். இருந்தாலும் பெண் பாத்திரங்களின் சித்தரிப்பு ஏமாற்றம்தான்.

தன் இளமை வயதைக் கடந்த சத்திர உரிமையாளரான டேம் ஹார்டென்ஸிடம் ஸோர்பா காட்டுகிற காதல் வியப்பூட்டும். அவள் இளமைப் பருவத்தை மீண்டும் அவளில் விதைக்கிறான். அவள் மனதில் மீண்டும் மலர்கள் பூக்கின்றன. இளம்பெண்ணாகிறாள். அவளை திருமணம் செய்து கொள்கிறான். இருந்தாலும் இறந்து போகிறாள். ஸோர்பா மிகவும் துயர் அடைகிறான். ஆனால் சீக்கிரம் மீண்டு விடுகிறான். அவன் சொல்கிறான். நேற்று நடந்ததை நான் நினைப்பதை நிறுத்திவிட்டேன். நாளை என்ன நடக்கும் எனக் கேட்டுக்கொள்ள மாட்டேன். இந்த நிமிடத்தில் என்ன நடக்கிறதோ அதில்தான் எனக்கு அக்கறை. ஸோர்பா இப்போது என்ன செய்கிறாய்தூங்குகிறேன். ஆனந்தமாக தூங்கு. என்ன செய்கிறாய் ஸோர்பாவேலை செய்கிறேன். நன்றாக வேலை செய். இப்போது என்ன செய்கிறாய் ஸோர்பா? முத்தமிடுகிறேன். நன்றாக முத்தமிடு. மற்ற எல்லாவற்றையும் மறந்து விடு. உலகில் நீயும் அவளும் மட்டும் தான் இருக்கிறீர்கள்.  இந்த நொடியில் உலகில் வேறு ஏதும் இல்லை. இதுதான் ஸோர்பாவின் வாழ்க்கை கோட்பாடு.

மற்றொரு ஆழமான நிகழ்வு நாவலில் வருகிறது. கதாநாயகன் ஒரு பட்டாம்பூச்சி அதன் கருமுட்டையிலிருந்து வெளி வரும் தருணத்தை கவனிக்கிறான். முட்டையில் லேசான விரிசல் தெரிகிறது. ஆனால் அது உடைய நேரமாகிறது. இவனுக்குப் பொறுமையில்லை. மெதுவாக முட்டை மேல் ஊதுகிறான். அது உடைகிறது. பட்டாம்பூச்சி வெளி வருகிறது. ஆனால் அதன் சிறகுகளை அதனால் விரிக்க முடியவில்லை. இவன் அதன் மேல் மீண்டும் மீண்டும் ஊதிப் பார்க்கிறான்.  ஆனால் பலனில்லை. இவன் உள்ளங்கையில் அது இறக்கிறது. அந்த பட்டாம்பூச்சியின் எடை மிக கனமாக அவன் மனதை அழுத்துகிறது. அததற்கு அததனான நேரம் தேவை. அதை கொடுத்தே ஆக வேண்டும். இயற்கையின் விதிகளை மீறுவது மகத்தான பாவம் என உணர்கிறான்.

மடாலயத்தில் நடக்கிற சம்பவங்கள் மூலம் மதங்களின் இறுக்கமான விதிகளின் அபத்தங்களை அங்கதமாக விவரிக்கிறார் கஸந்த்ஸாகிஸ். கடைசியில் ஒரு துறவியே மடாலயத்தை தீ வைத்துக் கொளுத்துகிறார்.

நிலக்கரிப்பாறைகளை சரிவு  மூலம் கீழே கொண்டு வரும் திட்டத்தை செயல் படுத்துகிறான் ஸோர்பா. பெரும் தோல்வி. அதைப் பற்றிக் கவலைப்படாமல் இயற்கையின் பெரும் நடனமாக கருதி நடன்மாடுகிறார்கள் இருவரும்.

பல அடுக்குகள் கொண்ட ஒரு ஆழமான நாவலாக மிளிர்கிறது ஸோர்பா தி க்ரீக். படிக்க வேண்டிய இலக்கியம்தான்.

 

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

 

கவிதை எழுதவில்லை என்றாலும்

கவிஞன் தான் நான்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

                                                           மாமல்லன்

விமலாதித்த மாமல்லனைப் பற்றி ஜெயமோகனின் தளத்தில் தான் பார்த்தேன். சென்னை புத்தக கண்காட்சியில் பார்த்ததைப் பற்றி எழுதும்போது தன்னை கடுமையாக  விமரிசனம் செய்து எழுதுவதாக நண்பர்கள்  சொன்னதாகவும்  அதனால் என்ன தமிழின் சிறந்த சிறுகதைகள் சில எழுதியவர் என்று சொன்னதாக குறிப்பிட்டிருந்தார். உடனே கூகிளில் தேடி அவர் ப்ளாகை பார்த்தேன். அவர் சிறுகதைகளைப் படித்தேன். இலக்கியதரமான அபூர்வமான கதைகள் என்று தோன்றியது. அவர் சிறுகதைகள் மின்னூலையும் வாங்கினேன்.  ஜெயமோகனைப்பற்றிய அவர் விமர்சனங்களையும்  படித்தேன்.  சில தகவல் பிழைகள், சில மொழிக் குறைபாடுகள்  போன்றவை  சரி  என்று  தோன்றினாலும்   ஜெயமோகனின்  கருக்களின் ஆழத்தையும்  அவர்  கதைகளின் பல பரிமாணங்களையும் அவர் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றியது.அவர் விமர்சனங்கள் ஜெயமோகன் மேல் எனக்கு இருந்த அபிமானத்தைக் குறைக்கவில்லை. இருந்தாலும் மாமல்லனை ப்ளாகிலும்   முக நூலிலும்  தொடர்ந்து வந்தேன்.தமிழில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவு, யார் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவது, அநீதி இழைக்கப் படுவதாக தோன்றினால் தனக்கு சரி என்று தோன்றும் பக்கத்தின் பக்கம் நின்று தீவிரமாகப் போராடுவது ( சின்மயி, ஓலா டிரைவர்  விவகாரங்கள்), கஷ்டப்படும் இலக்கிய வாதிகளுக்கு பிரதி பலம் பாராமல் உதவுவது (ரமேஷ், மோகன்   போன்ற இலக்கியவாதிகளுக்கு செய்த உதவிகள்)  போன்றவை அவர்  மேல் மதிப்பு அதிகரிக்க  செய்தது. அவரது புனைவு ஒரு புதிர் இரண்டு  புத்தகங்களும் வாங்கினேன். நவீன இலக்கியங்களை எப்படி அணுக வேண்டும் என்ற ஒரு திறப்பை அது அளித்தது.  கதைகளை அற்புதமாக திறனாய்வு செய்திருந்தார்.  ஜெயமோகனின் ஒரு கதை கூடவா அவருக்குப் பிடிக்கவில்லை என்ற அங்கலாய்ப்பும் இல்லாமல் இல்லை.

அவரது  ஆபீஸ் தொடருக்காகவே   மெட்ராஸ் பேப்பர்   இணைய இதழுக்கு சந்தா கட்டினேன்.  சமீபத்தில்  அவரது விளக்கும் வெளிச்சமும்  புத்தகம்  வாங்கினேன்.  அவரது படைப்புகளைப் பற்றிய  அபிப்ராயத்தை பொதுவில்  வெளியிடுமாறு அறிவித்திருந்தார்.  அதற்காகவே இந்தப் பதிவு.

ரிட்டயரான பிறகு அவரது படைப்புகள் சுயசரிதைத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. மத்திய அரசின் கலால் வரி வசூல் அலுவலகங்கள் இலக்கியத்துக்குள்  முதன்முறையாக கொண்டு வரப்படுவதால் படிக்க சுவையாகவே இருக்கின்றன.  அவை வெறும் சம்பவங்களாக இல்லாமல் சில வரிகள் மூலம் இலக்கியமாக்கிவிடுகிற விற்பன்னர் தான் மாமல்லன். 

அமன் என்ற கதையில் ஒரு சிறுவன்  இவரிடம்  சைக்கிள்  கேட்கிறான். இவர் மறுத்து விடுகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் இவர் மனைவிக்கு அந்த சிறுவனின் முகம் வாடுவது கண்டு  வருத்தம். இவருக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் ஸைக்கிள் யாருக்கும் கொடுப்பதில்லை என்ற கொள்கை. அடுத்த நாள்  சைக்கிள் சக்கரத்தில் காற்று இறங்கியிருக்கிறது. அந்தப் பையன்  பிடுங்கி விட்டிருப்பானோ என்று இவருக்கு சந்தேகம். மெக்கானிக்கிடம்  போகிறார். அவர் காற்று போவதற்கான  பல காரணங்களை அடுக்குகிறார். இவருக்கு அப்பாடி அந்த பையன் பிடுங்கி விடவில்லை  என்ற நிம்மதி. நமக்கும். சரி செய்து கொண்டு வருகிறார். இப்படியே விட்டிருந்தால் அது ஒரு சம்பவம். அசோகமித்திரன் பாணியில் ஒரு கடைசி வரி. அது இதை இலக்கியமாக்குகிறது.

மறைவு என்ற கதையில் ஓரு இளைஞனின்  தற்கொலை நடக்கிறது. ஏதோ அவமானம். அதைப் பார்க்கிற  ஒரு   முதியவருக்கு தன் சிறு வயது அவமானம் நினைவு  வருகிறது. வகுப்பை கட் அடித்து விட்டு சினிமா சென்று வருகிற  சிறுவனை  பொதுவில் நிர்வானமாக்கி  அவமானப்படுத்த தன் தந்தை திட்டமிட்ட  போது   விளக்கை அணைத்து  காப்பாற்றிய ஒரு பிசினஸ்  மேனை நினைவு கூறுகிறார்.  அவரையே  ஒரு டிரைவராக  சந்திக்கிற  வாய்ப்பு  கிடைக்கிறது.  ஆனால்  அவரிடம்  தன்னை  ஏன்  அடையாளம்   காண்பித்துக் கொள்ளவில்லை.? மறைவு   பேருக்கேற்ற   சிந்தனையை தூண்டும் கதை.

பயம்  என்ற கதையில் மதம் சார்ந்த  நம் அர்த்தமற்ற பயங்களையும் அதே சமயம் சாதுக்கள் என்று நாம் நினைப்பவர்கள்  சில சமயம் காட்டுகிற  வன்மத்தையும் கலால் வரி ஊழல்களின்  பிண்ணனியில்  விவரிக்கிறார்.

காவி இன்னொரு நல்ல கதை. அன்றாட வேலையின் அலுப்பிலிருந்து  தப்பிப்பதற்காக  சாமியாரான  ஒரு இலைஞனை  முதலில் துறவி என்று வணங்கிய பூஜாரி  அவன் அணிந்திருந்த விலை உயர்ந்த  ஜட்டியை வைத்தே  வீட்டிலிருந்து  கோபித்துகொண்டு வந்தவன்  என்று புரிந்து கொண்டு  அவனை திரும்பி போகக் சொல்லி உபதேசிக்கிறார். நன்றாக எழுதப்பட்ட கதை.

விளக்கு என்கிற நெடுங்கதை அவர் இப்போது எழுதுகிற ஆபீஸ் தொடருக்கு  ஒரு முன்னோடி போல. படிக்க நன்றாக இருந்தாலும்  ஒரு குறு நாவலின்  பூரணம் கூடி வரவில்லை என்று தோன்றுகிறது.

இந்த கதைகள்  அவரது முந்தையக் கதைகளின்  தளத்தில் இல்லாவிட்டாலும்   இன்றும் தவிர்க்கமுடியாத  எழுத்தாளராகவே இருக்கிறார் விமலாதித்த மாமல்லன்.




ஞாயிறு, 7 ஜூன், 2020

ஜெயமோகனுக்கு ஒரு கடிதமும் அவர் பதிலும்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
                                உங்கள் ஊரடங்கு கால இலக்கிய வேள்வியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது ஒரு மாபெரும் அதிருஷ்டம். எனக்கு கதைகள் படிப்பதுதான் ஒரே ஆன்மத் தேடல். இலக்கியம் தான் என் மதம். ஆகவே விஸ்வரூபம் எடுத்த உங்கள் பித்து என்னையும் உள்ளிழுத்துக்கொண்டது. என் எல்லா நாட்களும் உங்கள் புனைவுடனே ஆரம்பித்து உங்கள் புனைவுடனே முடிவடைந்தன. நன்றி. இந்த நாட்களை அர்த்தமுள்ளவைகளாக்கியதற்கு,
                    உங்கள் கதைகளுக்கு வந்த கடிதங்களுக்கு அப்பால் ஏதும் சொல்லிவிட முடியாது. என்றாலும் என்னை மிகவும் பாதித்த கதைகளை குறிப்பிடாமல் இந்த கடிதம் முடிவடையாது. தன் வேலை செய் நேர்த்தியை கலையாய் மாற்றி, தான் கலைஞன் என்கிற கர்வத்துடன் உலகை துச்சமாக பார்க்கிற மாடன் பிள்ளை தன்னையே அந்த கலையாய் மாற்றிய ஒரு குருவியின் முன் கண் கலங்கி பணியும் குருவி என்கிற கதை என் உள்ளத்திற்கு நெருக்கமான கதை. காமப் பொம்மைகளுக்கு மாதிரியாய் தன் உடலை விற்ற பெண்ணையும் தேவியாய் காணும் யாதேவி, பாம்பும் சேர்ந்த லூப்பு, வான் கீழ் என்கிற அழகான காதல் கதை, ஆண் பெண் உறவின் சுழல்களை சொல்கிற ஆழி, கள்ளன்களையும் நேசிக்க வைக்கிற கதைகள், பெண்களின் பயணத்தில் உடன் வரும் நற்றுணை,, கலைஞன் இறைவனாகிற இறைவன் கதை, வனவாசத்தில் இருந்தாலும், கலைஞர்களாகிற போது அரசர்களாய் தோன்றும் சாமியப்பாவும், குமரேசனும், தன் கலை மூலம் தேவியாகவே மாறும் தேவி,  பாட்டைக் கேட்க விரும்பியும் வர முடியாமல் போன பெண்ணிற்காய் வீட்டிற்கே செல்கிற பயில்வான் பாகவதர், ஜானகிராமனின் ஒரு கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்திகிற கடவுளாகியே மாறிப்போன சங்கரன் போற்றி என எத்தனை பாத்திரங்கள், எத்தனை தருனங்கள். நீங்களும் மாடன் பிள்ளையைப் போல நீயும் நானும் ஒன்னு தான்வே என்று சாமி கிட்ட சொல்லலாம்
அன்புடன்
ராமகிருஷ்ணன்
கோவில்பட்டி 

அன்புள்ள ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நலம்தானே?
நானும் நலம்

உங்கள் கடிதம் கண்டேன். இக்கதைகள் இன்றைய முழுஅடைப்புச் சூழலில் ஒரு வகையான அகப்பயணத்திற்கான வாசல்கள். இயல்பான எளியகதைகளில் இருந்து மேலும் மேலும் செல்பவை. உங்களுக்கு அவை உதவியிருப்பதை அறிந்தேன். மகிழ்ச்சி
கோயில்பட்டியில் வெயில் எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டேன்😂
ஜெ