“ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்” என்ற புத்தகம் படித்தேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. 711 பக்கங்கள் கொண்ட ஒரு பெரிய புத்தகம். கதைப்புத்தகம் அல்ல. செல்வம் என்ற தண்டனைக் கைதி எழுதிய சுய சரிதை. ஆனால் ஒரே மூச்சில் படிக்க முடிகிற, சுவராசியமான புத்தகம். வாசிப்பதில் ஆர்வமுள்ள, சமூக அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். 2025-ல் வந்த மிக முக்கியமான புத்தகம் என்று சொல்லுவேன். காரணம் நாம் கண்டிருக்காத உண்மைகளை உரக்கச் சொல்லுகிறது இந்தப் புத்தகம்.. சுடுகிற உண்மைகள்.
நாம் ஒரு ரவுடியை திரைப்படங்களில், நாவல்களில் பார்த்திருப்போம். ஆனால் அது ஒரு கற்பனைச் சித்திரம்தான். உண்மையில் ஒரு ரவுடியின் மனம் எப்படி வேலை செய்யும்? அவன் உணர்வுகள் என்ன? அவன் வாழ்வு எப்படி இருக்கும் என்பவற்றை இந்த புத்தகம் காட்டுகிறது. ரத்தமும் சதையுமாக அவனை நம் முன் நிறுத்துகிறது. அவனை நாம் வெறுக்கலாம்: அச்சப்படலாம்: அருவெறுக்கலாம். ஆனால் அவன் நம் சமூகத்தின் ஒரு பகுதி. அவனை நாம் புரிந்துகொள்ளாமல் சமூக முன்னேற்றம் சாத்தியம் இல்லை. அந்த உலகத்தை இவ்வளவு தீவிரமாகச் சொன்ன வேறு புத்தகத்தை நான் படித்ததில்லை.
செல்வம் குற்றச் சூழல் இயல்பாக இருக்கும் இடத்தில் பிறந்து வாழ்கிறார். அவர் பிறந்த புதுக் குடியிருப்பு என்ற பகுதியை மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் அஞ்சுகிறார்கள். இவர்களிடம் வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று விலகிப் போகிறார்கள். இயல்பாகவே வன்முறை சம்பவங்களில் ஈடுபட நேரிடுகிறது. ஒரு மாஃபியா கும்பலின் தலைவன் சப்பட்டை ஐயப்பன் என்பவனை ஒரு சம்பவத்தின் போது எதிர்த்துப் பேசி விடுகிறார். அவன் அடியாள் ஒருவனை செல்வத்தின் உறவினர் ஒருவரிடம் சண்டையிடும்பொது வெட்டி விடுகிறார் செல்வம். சப்பட்டை ஐயப்பன் அவரைக் கொலை செய்ய ஆணையிடுகிறான். செல்வத்தைக் கொல்ல அந்தக் கும்பல் அவனை வெட்டிச் சிதைக்கிறது. மயிரிழையில் உயிர் பிழைக்கிற செல்வம் ஒரு முழு ரவுடியாகிறார். ஐயப்பனுக்கு எதிரான கும்பலில் சேருகிறார். அந்தக் கும்பல் ஐயப்பனைக் கொல்கிறது. அய்யாவு என்பவன் ஐயப்பன் கும்பலின் புதுத் தலைவனாகிறான். அவன் செல்வத்தைத் தாக்க வரும்போது அவர் உறவினர் வீட்டில் இருந்த 17 மாடுகளை கொல்கிறான். இதில் கடும் ஆத்திரம் அடைந்த செல்வமும் நண்பர்களும் அய்யாவுவைக் கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள். அய்யாவுவை கோர்ட்டில் நீதிபதி முன்பே கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் செல்வத்திற்கும் அவன் நண்பர்களுக்கும் தூக்குத்தண்டணை விதிக்கப்படுகிறது. ஐய்யப்பன், பிரபு, தேவராஜன், லிங்கம் என்று மாறி மாறி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகிறார்கள். ரத்தம் வெள்ளமாக ஒடுகிற ஒரு குற்றச் சரித்திரம் நம் கண்முன் விரிகிறது. இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என்று நாம் விக்கித்துப்போகிறோம். இந்த உலகம் நம் உலகில் வந்து விடக்கூடாதே என்று வேண்டுகிறோம். விலகிப் போகிறோம். ஆனால் சில அப்பாவிகளும் இடையில் வந்து இரையாகிறார்கள்.
தூக்குத் தண்டனை கிடைத்தபின் அதை மாற்றப் போராடுகிறார்கள். எல்லா நீதி மன்றங்களும் அவர்கள் மனுவை நிராகரிக்கின்றன. பின் கவர்னருக்கு கருணை மனு அனுப்புகிறார்கள். அதுவும் நிராகரிக்கப்படுகிறது. பின் ஜனாதிபதிக்கு அனுப்புகிறார்கள். ஜனாதிபதிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். காலம் சென்று கொண்டே இருக்கிறது. போரட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.
இதனிடையில் செல்வம் சிறைக்கைதிகளின் உரிமைக்காக போராடுகிறார். அவரை சிறை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான சிறைகளில் அவர் இருந்திருக்கிறார். பிரபலமான ,சுவாரசியமான பல கைதிகளின் நட்பு கிடைக்கிறது. சுவாமி பிரேமானந்தா, சசிகலா கணவர் நடராஜன்,, தீரன் சின்னமலை பேரவை யுவராஜ். ராஜீவ் காந்தி கொலையாளிகள் , நெடுமாறன், ஜான் பாண்டியன் எனப் பலரின் சித்திரம் நமக்கு கிடைக்கிறது. நமக்குத் தெரியாத வேறு பரிமாணங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக பிரேமானந்தா அரசியல் காரணங்களுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர், அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் உண்மையல்ல என்கிறார். ராஜீவ் கொலையாளிகளுக்குள்ளேயே இணக்கம் இல்லை. முருகனைக் கொலை செய்ய ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் முயன்றார்கள் என்ற செய்தி வியப்பை அளிக்கிறது.
கைதிகளின் சிறை வாழ்க்கை நுணுக்கமாகக் காட்டப்படுகிறது. எல்லா கைதிகளின் வாழ்க்கையும் ஒன்று போலில்லை என்று தெரிகிறது. சிலர் தனிச் சமையல், கோழிக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி , புரோட்டா என்று விதவிதமான சாப்பாடு, மின் விசிறி, டிவி, பீடி,சிகரட்டு என்று ராஜபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். வீடியோ டெக் எடுத்து ஆபாசப்படங்கள் கூடப் பார்க்கிறார்கள்.அதே சமயம் பெரும்பாலான கைதிகள் தரமற்ற உணவு, சுகாதாரமற்ற கழிப்பறைகள், சிறைக் காவலாளிகளின் அடக்குமுறை என ஒரு நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். பணமும் உடல் பலமும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. சாதாரண சமூகத்திலேயே ஊழலை ஒழிக்க முடியவில்லை. சபிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறவர்களின் ஊழலை கேட்க யார் இருக்கிறார்கள்?
அதிருஷ்டவசமாக செல்வத்தை இலக்கியம் என்ற தேவதை அணைத்துக் கொள்கிறாள். தேர்ந்த வாசகராகிறார். புத்தகங்கள் அவர் மனதில் ஏற்படுத்திய மாற்றங்கள் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர் திருந்தியது நம்பகத்தனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு நண்பன் நோய்வாய்ப்பட்டு இறந்து போக இரண்டு குழந்தைகளுடன் அவன் மனைவியை மறுமணம் செய்து கொள்கிறார். அவர் மனைவி, “உங்களால் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளை நீங்கள் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கும் போது அவர் கண்களின் ஓரத்திலிருந்து அவர் அறியாமல் கண்ணீர் வழிகிறது. அவர் குழந்தைகளுடன் பேசுவது கவித்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. அவரை முதன் முதல் தாக்கியவர்கள் மீது வழக்கு 32 வருடங்களுக்குப் பின் நடைபெறுகிறது. ஒருவரைத் தவிர எல்லா குற்றம் சாட்டப்பட்டவர்களும் இறந்துவிடுகிறார்கள். அவரையும் இவர் வெளிச்சம் இல்லாத்ததால் இவர்தான் வெட்டினாரா என்று சொல்ல முடியவில்லை என்று சாட்சி கூறி விடுவித்து விடுகிறார். பழி வாங்க வேண்டும் என்கிற ரத்த வெறியிலிருந்து மன்னிக்க முடிகிற மனநிலைக்கு உயர்ந்து விடுகிறார்.
பத்ரி ஷேசாத்ரியை அவர் சந்திக்க சிறையில் நேரிட்டது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. இந்த புத்தகம் வெளிவர அது ஒரு காரணம்.
சிறைச் சாலை நடைமுறைகளில் பல சீர்திருத்தங்களை செல்வம் வழியுறுத்துகிறார். இந்த சீர்திருத்தங்களை அமுல் படுத்தினால், கைதிகளின் வாழ்க்கை மேம்படும். இது சிறைக்கு செல்வதின் அச்சத்தை நீர்க்கச் செய்து விடாதா என்ற கேள்வி எழுந்தாலும் கைதிகளின் மன மாற்றத்திற்கு, சிறிய கிரிமினலாக உள்ளே செல்பவன் பெரிய கிரிமினலாக மாறாமல் வெளி வர இவை அவசியம் என்கிற நியாயமும் புரிகிறது.
இந்த புத்தகம் படித்தது மன நிறைவைத் தந்தது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்