பக்கங்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

                                                           மாமல்லன்

விமலாதித்த மாமல்லனைப் பற்றி ஜெயமோகனின் தளத்தில் தான் பார்த்தேன். சென்னை புத்தக கண்காட்சியில் பார்த்ததைப் பற்றி எழுதும்போது தன்னை கடுமையாக  விமரிசனம் செய்து எழுதுவதாக நண்பர்கள்  சொன்னதாகவும்  அதனால் என்ன தமிழின் சிறந்த சிறுகதைகள் சில எழுதியவர் என்று சொன்னதாக குறிப்பிட்டிருந்தார். உடனே கூகிளில் தேடி அவர் ப்ளாகை பார்த்தேன். அவர் சிறுகதைகளைப் படித்தேன். இலக்கியதரமான அபூர்வமான கதைகள் என்று தோன்றியது. அவர் சிறுகதைகள் மின்னூலையும் வாங்கினேன்.  ஜெயமோகனைப்பற்றிய அவர் விமர்சனங்களையும்  படித்தேன்.  சில தகவல் பிழைகள், சில மொழிக் குறைபாடுகள்  போன்றவை  சரி  என்று  தோன்றினாலும்   ஜெயமோகனின்  கருக்களின் ஆழத்தையும்  அவர்  கதைகளின் பல பரிமாணங்களையும் அவர் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றியது.அவர் விமர்சனங்கள் ஜெயமோகன் மேல் எனக்கு இருந்த அபிமானத்தைக் குறைக்கவில்லை. இருந்தாலும் மாமல்லனை ப்ளாகிலும்   முக நூலிலும்  தொடர்ந்து வந்தேன்.தமிழில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவு, யார் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவது, அநீதி இழைக்கப் படுவதாக தோன்றினால் தனக்கு சரி என்று தோன்றும் பக்கத்தின் பக்கம் நின்று தீவிரமாகப் போராடுவது ( சின்மயி, ஓலா டிரைவர்  விவகாரங்கள்), கஷ்டப்படும் இலக்கிய வாதிகளுக்கு பிரதி பலம் பாராமல் உதவுவது (ரமேஷ், மோகன்   போன்ற இலக்கியவாதிகளுக்கு செய்த உதவிகள்)  போன்றவை அவர்  மேல் மதிப்பு அதிகரிக்க  செய்தது. அவரது புனைவு ஒரு புதிர் இரண்டு  புத்தகங்களும் வாங்கினேன். நவீன இலக்கியங்களை எப்படி அணுக வேண்டும் என்ற ஒரு திறப்பை அது அளித்தது.  கதைகளை அற்புதமாக திறனாய்வு செய்திருந்தார்.  ஜெயமோகனின் ஒரு கதை கூடவா அவருக்குப் பிடிக்கவில்லை என்ற அங்கலாய்ப்பும் இல்லாமல் இல்லை.

அவரது  ஆபீஸ் தொடருக்காகவே   மெட்ராஸ் பேப்பர்   இணைய இதழுக்கு சந்தா கட்டினேன்.  சமீபத்தில்  அவரது விளக்கும் வெளிச்சமும்  புத்தகம்  வாங்கினேன்.  அவரது படைப்புகளைப் பற்றிய  அபிப்ராயத்தை பொதுவில்  வெளியிடுமாறு அறிவித்திருந்தார்.  அதற்காகவே இந்தப் பதிவு.

ரிட்டயரான பிறகு அவரது படைப்புகள் சுயசரிதைத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. மத்திய அரசின் கலால் வரி வசூல் அலுவலகங்கள் இலக்கியத்துக்குள்  முதன்முறையாக கொண்டு வரப்படுவதால் படிக்க சுவையாகவே இருக்கின்றன.  அவை வெறும் சம்பவங்களாக இல்லாமல் சில வரிகள் மூலம் இலக்கியமாக்கிவிடுகிற விற்பன்னர் தான் மாமல்லன். 

அமன் என்ற கதையில் ஒரு சிறுவன்  இவரிடம்  சைக்கிள்  கேட்கிறான். இவர் மறுத்து விடுகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் இவர் மனைவிக்கு அந்த சிறுவனின் முகம் வாடுவது கண்டு  வருத்தம். இவருக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் ஸைக்கிள் யாருக்கும் கொடுப்பதில்லை என்ற கொள்கை. அடுத்த நாள்  சைக்கிள் சக்கரத்தில் காற்று இறங்கியிருக்கிறது. அந்தப் பையன்  பிடுங்கி விட்டிருப்பானோ என்று இவருக்கு சந்தேகம். மெக்கானிக்கிடம்  போகிறார். அவர் காற்று போவதற்கான  பல காரணங்களை அடுக்குகிறார். இவருக்கு அப்பாடி அந்த பையன் பிடுங்கி விடவில்லை  என்ற நிம்மதி. நமக்கும். சரி செய்து கொண்டு வருகிறார். இப்படியே விட்டிருந்தால் அது ஒரு சம்பவம். அசோகமித்திரன் பாணியில் ஒரு கடைசி வரி. அது இதை இலக்கியமாக்குகிறது.

மறைவு என்ற கதையில் ஓரு இளைஞனின்  தற்கொலை நடக்கிறது. ஏதோ அவமானம். அதைப் பார்க்கிற  ஒரு   முதியவருக்கு தன் சிறு வயது அவமானம் நினைவு  வருகிறது. வகுப்பை கட் அடித்து விட்டு சினிமா சென்று வருகிற  சிறுவனை  பொதுவில் நிர்வானமாக்கி  அவமானப்படுத்த தன் தந்தை திட்டமிட்ட  போது   விளக்கை அணைத்து  காப்பாற்றிய ஒரு பிசினஸ்  மேனை நினைவு கூறுகிறார்.  அவரையே  ஒரு டிரைவராக  சந்திக்கிற  வாய்ப்பு  கிடைக்கிறது.  ஆனால்  அவரிடம்  தன்னை  ஏன்  அடையாளம்   காண்பித்துக் கொள்ளவில்லை.? மறைவு   பேருக்கேற்ற   சிந்தனையை தூண்டும் கதை.

பயம்  என்ற கதையில் மதம் சார்ந்த  நம் அர்த்தமற்ற பயங்களையும் அதே சமயம் சாதுக்கள் என்று நாம் நினைப்பவர்கள்  சில சமயம் காட்டுகிற  வன்மத்தையும் கலால் வரி ஊழல்களின்  பிண்ணனியில்  விவரிக்கிறார்.

காவி இன்னொரு நல்ல கதை. அன்றாட வேலையின் அலுப்பிலிருந்து  தப்பிப்பதற்காக  சாமியாரான  ஒரு இலைஞனை  முதலில் துறவி என்று வணங்கிய பூஜாரி  அவன் அணிந்திருந்த விலை உயர்ந்த  ஜட்டியை வைத்தே  வீட்டிலிருந்து  கோபித்துகொண்டு வந்தவன்  என்று புரிந்து கொண்டு  அவனை திரும்பி போகக் சொல்லி உபதேசிக்கிறார். நன்றாக எழுதப்பட்ட கதை.

விளக்கு என்கிற நெடுங்கதை அவர் இப்போது எழுதுகிற ஆபீஸ் தொடருக்கு  ஒரு முன்னோடி போல. படிக்க நன்றாக இருந்தாலும்  ஒரு குறு நாவலின்  பூரணம் கூடி வரவில்லை என்று தோன்றுகிறது.

இந்த கதைகள்  அவரது முந்தையக் கதைகளின்  தளத்தில் இல்லாவிட்டாலும்   இன்றும் தவிர்க்கமுடியாத  எழுத்தாளராகவே இருக்கிறார் விமலாதித்த மாமல்லன்.




ஞாயிறு, 7 ஜூன், 2020

ஜெயமோகனுக்கு ஒரு கடிதமும் அவர் பதிலும்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
                                உங்கள் ஊரடங்கு கால இலக்கிய வேள்வியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது ஒரு மாபெரும் அதிருஷ்டம். எனக்கு கதைகள் படிப்பதுதான் ஒரே ஆன்மத் தேடல். இலக்கியம் தான் என் மதம். ஆகவே விஸ்வரூபம் எடுத்த உங்கள் பித்து என்னையும் உள்ளிழுத்துக்கொண்டது. என் எல்லா நாட்களும் உங்கள் புனைவுடனே ஆரம்பித்து உங்கள் புனைவுடனே முடிவடைந்தன. நன்றி. இந்த நாட்களை அர்த்தமுள்ளவைகளாக்கியதற்கு,
                    உங்கள் கதைகளுக்கு வந்த கடிதங்களுக்கு அப்பால் ஏதும் சொல்லிவிட முடியாது. என்றாலும் என்னை மிகவும் பாதித்த கதைகளை குறிப்பிடாமல் இந்த கடிதம் முடிவடையாது. தன் வேலை செய் நேர்த்தியை கலையாய் மாற்றி, தான் கலைஞன் என்கிற கர்வத்துடன் உலகை துச்சமாக பார்க்கிற மாடன் பிள்ளை தன்னையே அந்த கலையாய் மாற்றிய ஒரு குருவியின் முன் கண் கலங்கி பணியும் குருவி என்கிற கதை என் உள்ளத்திற்கு நெருக்கமான கதை. காமப் பொம்மைகளுக்கு மாதிரியாய் தன் உடலை விற்ற பெண்ணையும் தேவியாய் காணும் யாதேவி, பாம்பும் சேர்ந்த லூப்பு, வான் கீழ் என்கிற அழகான காதல் கதை, ஆண் பெண் உறவின் சுழல்களை சொல்கிற ஆழி, கள்ளன்களையும் நேசிக்க வைக்கிற கதைகள், பெண்களின் பயணத்தில் உடன் வரும் நற்றுணை,, கலைஞன் இறைவனாகிற இறைவன் கதை, வனவாசத்தில் இருந்தாலும், கலைஞர்களாகிற போது அரசர்களாய் தோன்றும் சாமியப்பாவும், குமரேசனும், தன் கலை மூலம் தேவியாகவே மாறும் தேவி,  பாட்டைக் கேட்க விரும்பியும் வர முடியாமல் போன பெண்ணிற்காய் வீட்டிற்கே செல்கிற பயில்வான் பாகவதர், ஜானகிராமனின் ஒரு கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்திகிற கடவுளாகியே மாறிப்போன சங்கரன் போற்றி என எத்தனை பாத்திரங்கள், எத்தனை தருனங்கள். நீங்களும் மாடன் பிள்ளையைப் போல நீயும் நானும் ஒன்னு தான்வே என்று சாமி கிட்ட சொல்லலாம்
அன்புடன்
ராமகிருஷ்ணன்
கோவில்பட்டி 

அன்புள்ள ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நலம்தானே?
நானும் நலம்

உங்கள் கடிதம் கண்டேன். இக்கதைகள் இன்றைய முழுஅடைப்புச் சூழலில் ஒரு வகையான அகப்பயணத்திற்கான வாசல்கள். இயல்பான எளியகதைகளில் இருந்து மேலும் மேலும் செல்பவை. உங்களுக்கு அவை உதவியிருப்பதை அறிந்தேன். மகிழ்ச்சி
கோயில்பட்டியில் வெயில் எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டேன்😂
ஜெ  




செவ்வாய், 21 ஏப்ரல், 2020




அப்பா
என் தங்கை தேவி ஃபோன் செய்து அப்பா பேச்சு மூச்சின்றி இருக்கிறார் என்று அழுது கொண்டே சொன்ன போது முதலில் நான் பயப்படவில்லை. மாலை வரை நன்றாக பேசிக்கொண்டு, டிவி பார்த்துக்கொண்டு இருந்தவர் லேசாக மயக்கம் வருகிறது என்று படுத்தாராம்.  எழுப்பினாலும் எழுந்திருக்கவில்லை என்றாள். இதற்கு முன் இந்த மாதிரி மூன்று தடவை ஸீரியஸ் என்று அலறி அடித்துக்கொண்டு ஒடியிருக்கிறோம். இரண்டு நாள் மருத்துவமனையில் ICU-வில் இருந்தது விட்டு வீடு திரும்பி விடுவார். அடுத்த நாளே மட்டன் எடுக்கவில்லையா என்பார்.  ஆகவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல் என்றேன். அங்கே உறுதி செய்துவிட்டு இறந்து விட்டார் என்று தெரிவித்தபோது கூட முதலில் துயரம் வரவில்லை.
இந்த கொரோனா காலத்தில் எப்படி போவதற்கு அனுமதி வாங்குவது என்று பீதிதான் தோன்றியது. எங்கள் மில் D.G.M (HR) சரவணனை அழைத்தேன். அவரும் அவர் சகாக்களும் போராடி அனுமதி வாங்கிக் கொடுத்து விட்டார்கள். இரவு பதினோரு மணி ஆகி விட்டது. காரில் ஏறிய பிறகு தான் அந்த மரனத்தின் தாக்கம் உறைத்தது. கடந்த மூன்று வருடங்களாகவே மிகவும் சிரமப்பட்டு விட்டார். அவர் படுகிற கஷ்டங்களை பார்த்து அவருக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் சமீப காலமாக நன்றாகத்தான் இருந்தார். தன் காரியங்களை தானே பார்த்துக் கொண்டார். இன்று பேசும்போது கூட நன்றாக பேசினார். உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறினார். ஆகவே இந்த திடீர் மரணம் ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒரு பூ உதிர்வதைப் போல மறைந்து விட்டார். அதில் ஒரு சின்ன ஆறுதல்.
அப்பாவின் நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தன.
கடந்த சில வருடங்களாக நோயால் அவதிப்பட்ட அவர் முகம் அவரது பழைய முகத்தை மறக்க செய்தது போல இருந்தது. அவர் முன்பெல்லாம் எப்படி இருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். அழகன். உயர்ந்த உருவம்.அவர் சிரிப்பு மிகவும் வசீகரமாக இருக்கும். மனதுக்குள் சென்று வருடும் அன்பு. சிறுவயதில் அப்பா அடித்ததே இல்லை என்று சொல்லலாம். எப்போதாவது அரிதாக அடித்தால் சந்தோஷமாக இருக்கும். எங்கள் ஊரில் ஒரு பாலம் உண்டு. அங்கே போய் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்வேன். வந்து ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு போய் ரோஸ்ட் வாங்கித் தருவார்.
அற்புதமான ஆசிரியர். கம்பீரமான குரல். வரலாறு மற்றும் புவியியல் ஆசிரியர். ஆங்கிலமும் கற்றுத் தருவார்.  நானும் அவர் மாணவனாய் இருந்திருக்கிறேன்.  This is my prayer to Thee My Lord.Strike strike at the root of penury in my heart  என்ற தாகூரின் பாடல் அவர் குரலில் இன்னமும் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு ஒரு மனக்குறை உண்டு. நான் எல்லா பாடங்களிலும் முதல் மாணவன். ஆனால் அவர் பாடமான வரலாறு மற்றும் புவியியலில் மட்டும் இரண்டாமிடம். பாபு என்று ஒரு பையன். எப்போதுமே அவன் தான் முதல். எவ்வளவோ முயற்சி செய்தும் அவனை முந்த முடியவில்லை. விரிவான கேள்விகளில் ஒரு அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் கூடச் சேர்த்துப் போட்டிருந்தால் பிடித்திருக்கலாம். சொந்தப் பையன் தானே. போட மாட்டார்.
புத்தகம் படிக்கும் பழக்கம் அவரிடமிருந்து தான் ஒட்டிக்கொண்டது. சாப்பிடும் போதும் எங்கள் வீட்டில் எல்லாரும் புத்தகம் படித்துக் கொண்டே இருப்போம். என் மனைவி இப்போதும் சாப்பிடும்போது புத்தகம் படிக்காதீங்க என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். மாற்ற முடியவில்லை.
என் அப்பாவிடம் எதுவும் மறைக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது  செக்ஸ் புத்தகம் படித்தபோது கூட அவரிடம் சொன்னேன். இந்த வயது பத்தாது. இன்னும் கொஞ்சம் போகட்டும் என்று மென்மையாகத்தான் சொன்னார். தப்புத்தாளங்கள் என்று ஒரு பாலச்சந்தர் படம். A – சர்டிஃபிகேட் படம். போவதற்கு அனுமதி கேட்டேன். உனக்குப் புரியுமா என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு அனுமதி கொடுத்தார்.
எந்த நிலையிலும் என் அப்பா என்னை விட்டுக் கொடுத்ததேயில்லை. பாலிடெக்னிக்கில் ஒரு சம்பவம். முதலாமாண்டு ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். சாதாரணமாக டேஸ்காலர்ஸை விருந்தினராக மெஸ்ஸுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். தேர்வு சமயத்தில் விருந்தினர் அனுமதியில்லை என்று ஒரு அறிவிப்பு செய்திருக்கிறார்கள். அதை மெஸ்ஸில் ஒட்டாமல் , அலுவலகத்தில் ஒட்டியிருக்கிறார்கள். நாங்கள் பார்க்கவில்லை. சில நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தோம். எழுத்தர் ஸாமி நாத ஐயர் நின்றிருந்தார். இருக்கையில் அமர்ந்ததும், பறிமாறுபவர் அந்த நண்பர்களுக்கு மட்டும் தட்டு வைக்கவில்லை. கெஸ்ட் அனுமதியில்லை என்றார். ஏன் என்று கேட்டோம். ஐயரை கண் காட்டினார். அவரிடம் கேட்டோம். கெஸ்ட் அனுமதியில்லை என்று நோட்டீஸ் போட்டிருக்கிறோமே என்றார். எங்கே என்றோம். அலுவலகத்தில் என்றார். ஏன் மெஸ்ஸில் போடவில்லை, ஏன் உட்காருவதற்கு முன்பே சொல்லவில்லை, உட்கார்ந்தததற்கு பின் அவமானப்படுத்துகிறீர்கள் என்று உரக்க பேசிவிட்டு வெளியேறி விட்டோம். அந்த சம்பவத்தை மறந்தும் விட்டோம். இரண்டாமாண்டு ஹாஸ்டலில் சேர வந்த போது ஹாஸ்டலில் அறை தர முடியாது என்றார்கள். காரணம் கேட்டதற்கு பிரின்சிபாலை பாருங்கள் என்றார்கள். ப்ரின்சிபால் என் அப்பாவிடம் உங்கள் பையன் கலாட்டா பண்ணுகிறான் என்றார். அப்பா என்ன விசயம் என்று கேட்டார். அவர் சம்பவத்தை விவரித்தார். அப்பா பொங்கி விட்டார். என் பையன் நிச்சயம் தப்பு செய்ய மாட்டான். அவன் ஏதாவது செய்திருந்தால் அதில் நியாயம் இருக்கும் என்றார். ஹாஸ்டல் இல்லையென்றாலும் பரவாயில்லை என்றார். பிரின்சிபால் அசந்து போனார். ஒன்றும் பேசாமல் அனுமதிக்கவும் என்று எழுதி கையொப்பம் இட்டார்.
என்பதுகளில் ஆந்திராவில் கொஞ்ச காலம் வேலை செய்திருந்தேன். ஒருமுறை கேரளாவில் கொழிஞ்சாம்பாறையிலிருந்த என் வீட்டுக்கு  விடுமுறைக்கு வந்து விட்டு திரும்பிப் போனேன். வந்து சேர்ந்தேன் என்று கடிதம் எழுத மறந்து போனேன். போனில் தொடர்பு கொள்ளும் வசதியும் எங்களிடம் இல்லை. ஒரு நான்கு நாள் பொறுத்துப் பார்த்துவிட்டு கிளம்பி வந்து விட்டார். ஐனூறு கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து வந்து ஏண்டா போன் செய்யவில்லை என்று கேட்டுவிட்டு அரை மணி நேரம் இருந்துவிட்டுப் போனார்.
என் மகனின் காது குத்தும் வைபவத்தை என் மனைவி மிகவும் நம்பிக்கை வைத்திருந்த ஒரு சாமியார் மடத்தில் நடத்த வேண்டும் என்று விரும்பிய போது அவருக்கு நம்பிக்கை இல்லாத போதும் அங்கே தான் நடத்த வேண்டும் என்றார். அந்த குழந்தை மீது உன் மனைவிக்குத்தான் அதிக உரிமை உள்ளது என்றார்.
நாங்கள் பாலக்காடு குடியிருப்பில் இருந்த போது என் பையன் கௌதமிற்காக ஒரு மூன்று சக்கர ஸைக்கிளை தூக்கிகொண்டு டவுன் பஸ்ஸில் வந்தது ஞாபகத்தில் சித்திரமாய் நிற்கிறது.
உறவினர்களுக்கு செய்ததை வெளிக்காட்டியதே கிடையாது.
செஸ், கேரம் அழகாக விளையாடுவார். அற்புதமான நண்பர். எல்லா வயதிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. அவர்  நண்பர்கள் மலையாளத்தில் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சுத்தமான தமிழில் பதில் சொல்லும் அழகே தனி. தகவல் தொடர்பில் ஒரு குழப்பமும் இருக்காது.
என்னை அதிகம் படிக்க வைக்கவில்லை என்ற குறை அவருக்கு உண்டு. அது தேவையில்லாதது, என் துறையில் நான் திருப்தியாய்த்தான் இருக்கிறேன் என்று நான் சொன்னாலும் அவருக்கு அந்த வருத்தம் போக வில்லை.
மின் மயானத்தில் அந்த எரிக்கும் சூலையில் என் அப்பா உள்ளே செல்லும் போது, இனி பார்க்க முடியாது என்ற நிஜம் உறைத்த போது ஒரு இரண்டு வயது பையனாய் அடிவயிற்றில் இருந்து அப்பா என்று கத்தி அழைத்தேன். அவர் திரும்பி பார்க்கவில்லை. போகட்டும். வரும் பிறவிகளிலும் அவரே அப்பாவாக வந்தால் நன்றாக இருக்கும்.




வெள்ளி, 23 நவம்பர், 2018




திரு ஜெய மோகன் அவர்களுக்கு,

உங்களின் ரயிலில், பிரதமன் இரண்டு சிறுகதைகளையும் படித்தேன். வெண்முரசு போன்ற பிரமாண்டமான ஆக்கதிற்கிடையிலும் இவ்வளவு ஆழமான சிறுகதைகள எழுத முடிகிற உங்கள் படைப்பூக்கம் ஆச்சரியப்படுத்துகிறது. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்கிற ரயில் நல்ல குறியீடு. சாமி நாதன்  குடும்பத்தின் சொத்தை அபகரிக்க முத்து சாமியின் குடும்பம் செய்கிற முயற்சி அநீதிதான். ஆனால் முத்துசாமியின் மகள்களுக்கு நடந்தது மகா கொடுமை. அது நடக்க காரணமாய் இருந்தது பற்றிய குற்ற உணர்வு சாமி நாதனுக்கு இருக்கிறது. மன நிலை பிறழ்ந்த மகளை சொல்லாமலே திருமணம் செய்து கொடுக்க முத்து சாமி முயல்வது தவறுதான். ஆனால் அதை பெரும்பாலோர் செய்யக்கூடும். அது சாமி நாதனின் மனதிலிருக்கும் குற்ற உணர்வை மட்டுமல்ல , வாசகர் மனதில் இருக்கும் அநீதி இழைக்கப்பட்ட உணர்வையும் அகற்றி விடுகிறது. அவனுக்கு வேண்டியதுதான் என்று தான் பெரும்பாலான வாசகர் கடிதங்கள் சொல்கின்றன. பீஸ்மரை வீழ்த்த கிருஷ்ணன் கூறுகிற உத்தியை ஸகாதேவன் நியாயப்படுத்துகிற வெண்முரசுவின் அத்தியாயத்தையும் உடனே படிக்க நேர்ந்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அநீதி இழைக்க வேண்டிய  அல்லது அநீதிக்கு துணை போகிற நிர்ப்பந்ததிலிருந்து  யாருமே தப்ப முடியாதோ.

ரயிலில் ஏற்படுத்திய மன நெருக்கடியிலிருந்து ஒரு விடுதலை  பிரதமன். பிரதமனின் மணத்தை, சுவையை இன்னும் உள்ளம் ருசிக்கிறது. தான் படைக்கிற எந்த உணவையும் வாயில் இட்டுப் பார்க்காமலே , அற்புத ருசியை சிருஷ்டிக்கிற ஆசானின் ருசியைப் பற்றிய புரிதல் ஒரு பெரிய தரிசனம். ”மனசுக்கப் பழக்கமாக்கும் ருசி.  நினைச்சா மனசைப் பழக்கி எடுக்கலாம். அல்லாமெ ஒத்த ருசியில் நின்னா பலதும் நமக்கு இல்லாம ஆகும். இந்த உலகம் ருசிகள் கொண்டு நிறைஞ்சதாக்கும்.   நாக்க மனசு  பிடிச்சு நடத்தக்கூடாது. நாக்க அது பாட்டிற்கு விட்டால் அது பாட்டிற்கு எல்லா ருசியையும் கண்டுகிடும்.” இந்த ஞானம்  அவ்ருக்கு இருந்த தால் தான் அந்த பிரதமன்  அவ்வளவு ருசியாய் இருக்கிறது. ஒரு வகையில் அவர் ஞானம்  சாமி நாதன்களுக்கும், முத்து சாமிகளுக்கும் பதில்.

அன்புடன்

ராம கிருஷ்ணன்

திங்கள், 12 நவம்பர், 2018


ஜெயமோகனின் கட்டண உரை
10-11-2018
ஒரு ஆர்வத்தில் பதிவு செய்து விட்டாலும் உடல் நிலை பயமுறுத்தியது. குளிரூட்டப்பட்ட ஹால் என்ற அறிவிப்பு மேலும் அச்சத்தைக் கொடுத்தது. தொடர்ந்த இருமல். எங்கே ஜெயமோகன் பேசிக்கொண்டிருக்கும் போது அடுக்கடுக்காய் இருமி,  யார் இந்த ஆள்? வெளியே அனுப்புங்கள் என்று சொல்லி விடுவாரோ என்ற பயம். இருந்தாலும் வீரியம் கூடிய மருந்துகள் மற்றும் வென்னீர் உபயத்துடன் தைரியமாக சென்று விட்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று கதவு பக்கத்தில் இடம் பிடித்து அமர்ந்தேன். கழிப்பறை சென்று வருவதற்குள் அந்த இடத்தை   ஒருவர்  பிடித்துக் கொண்டார். கடலூர் சீனு என்று தோன்றியது. வேறு வழியில்லை. பின்னால் சென்று அமர்ந்தேன்.
ஜெயமோகன் வந்தார். கோவையில் செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் நடந்த ரப்பர் விழாவிற்குப் பிறகு இன்று தான் நேரில் பார்க்கிறேன். நிறைய மாறிவிட்டார். அப்போது சினிமா ஸ்டார் மாதிரி இருப்பார். இப்போதும் அழகாகத்தான் இருக்கிறார். முன்பின் தெரியாதவர்களையும் சினேகத்துடன் பார்க்கும் கண்கள். அழகான சிரிப்பு. ஒரிரு வார்த்தைகளில் அறிமுகம் செய்து கொண்டு அமர்ந்தேன். சமீப காலமாக என் சிந்தனையை அதிகம் பாதித்த எழுத்தாளர்களில் ஒருவரை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்.
கிருஷ்ணன் திறமையான நிர்வாகி என்று தெரிந்தது. அரங்கு நிரைந்திருந்தது.சரியான நேரத்தில் ஆரம்பித்தது. சுருக்கமான வார்த்தைகளில் கட்டண உரையின் நோக்கங்களை விளக்கி வரவேற்றார். ஜெயமோகன் போல் புகழ் பெறாத , அதே சமயம்  ஜெயமோகன்  அளவிற்கே அசலான இலக்கியவாதிகளையும்  கட்டண உரைக்கு அழைப்போம் என்றார்.
150 ரூபாய் கொடுத்தால் தான் உன்னையும் உள்ளே விடுவார்கள் என்று சொன்னதும் ஜெயமோகன் மனைவி 500 ரூபாய் நீட்டியது, சப்த சோதனைக்காக ஒரு குத்து பாடலை போட , ஜெயமோகன் பதறி அடித்துக் கொண்டு நிறுத்தச் சொன்னது, இடை வேளையில் டீ கிடையாது , தண்ணீர் தான் என்று கிருஷ்ணன் சொன்னதும், வெளியே தண்ணீர் வினியோகித்தவர் இதை எதற்கு வெளியே சொல்லி மானத்தை வாங்குகிறார் என்று சலித்து கொண்டது போன்ற மெல்லிய நகைச்சுவைகள் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கின.
சிறுகதையின் தேவதச்சன் வண்ணதாசனிடம் கையெழுத்து ஆசீர்வாதம் வாங்கியது மகிழ்வாய் இருந்தது.
ஜெயமோகனின் உரை  நன்றாக திட்டமிடப்பட்டு, ஆழமான உழைப்புடன் கட்டமைக்கப்பட்ட உரை. நமது சிந்தனைத்தடத்தை ஒரு வீட்டுடன் உருவகம் செய்தார். ஒரு மரபான வீடு எப்படி தனி மனிதனுக்கான இடத்தை அளிக்காமல், பெண்களை பின்னுக்குத் தள்ளி உருவாக்கப்பட்டது. அது எப்படி இன்று உருமாறி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனியான இடம், பெண்களுக்கான சமையலறை வரவேற்பறையை நோக்கி எப்படி நகர்ந்து வந்திருக்கிறது என்று காட்டி, அதே போல் நமது மரபான சிந்தனையில்  தாராளவாத சிந்தனைகள் ஏற்படுத்திய பாதிப்புகளை ஒப்பிட்டு விளக்கினார்.
தாராளவாதம் என்கிற வாக்கியம் அவ்வளவு சரியில்லை என்று ஜெயமோகனே அபிப்ராயப்பட்டதால் சுதந்திர வாதம் என்கிற வார்த்தையை உபயோகிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
என்னதான் சுதந்திர வாதம் நமது சிந்தனைகளை பாதித்தாலும் நமக்குள் இன்னும் நாட்டார் கூறுகள் இருக்கின்றன என்றார். 4000 வருடமாக அறுபடாத ஒரு மரபுச் சங்கிலி நமக்குள் இருக்கிறது  என்றார்.
அதே போல் என்னதான் சுதந்திர வாதம் தனிமனித சுதந்திரம், பெண் விடுதலை, ஜன நாயகம் போன்ற கொடைகளை மனித குலத்திற்கு அளித்தாலும் , அதற்கான limitations  கொண்டுள்ளது என்றார். தர்க்க புத்திக்கு அப்பாற்பட்ட , நுன்ணுணர்வுகளால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்களை அதால் புரிந்து கொள்ள முடியாது என்றார். சபரி மலை விஷயத்தை உதாரணமாக முன் வைத்தார்.
மார்க்சியம் போன்ற சித்தார்த்தங்களின் பங்களிப்பையும், நேர்மறை பாதிப்புகளையும் விளக்கினார். மார்க்சிசம் binary எதிரிகளையே முன் வைக்கிறது. இரு கருத்துகள் இருந்தால் ஒன்று இன்னொன்றை அழித்துதான் வாழ முடியும் என்கிற கருதுகோள் அபாயகரமானது என்றார்.
மாறாக எல்லா சித்தாந்தங்களில் உள்ள நல்ல விஷயங்களை அடையாளம் கண்டு கொண்டு ஒரு முழுமையான சிந்தனையை நோக்கி செல்வதுதான் ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சி என்றார்.
மார்க்சியம் எல்லா தனி மனிதர்களின் உள்ளேயும் ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது என்றார். சுந்தர ராமசாமி ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் கனவு இருந்தது என்று சொன்னதை விவரித்தபோது அவையில் எழுந்த சிரிப்பொலி ஒரு துனுக்குறுதலை அளித்தது. மார்க்சியம் மட்டுமல்ல , காந்தியம் உட்பட எல்லா சித்தாந்தங்களும் அத்தகைய லட்ச்சியவாத கனவுகளை உருவாக்கதானே செய்திருக்கிறது. தங்கள் சொத்துக்கள் எல்லாம் இழந்து அத்தகைய கனவுகள் பின்னே சென்றவர்கள் மூலமாகத்தானே கொஞ்சம் மாற்றங்களாவது நடந்திருக்கிறது.
இன்றைய சிந்தனையில் சிரிக்க தோன்றலாம். ஆழமாய் யோசித்தால் வணங்கத் தான்  தோன்றுகிறது. இன்று எந்த சித்தாந்தமும், எந்த பேச்சும் அத்தகைய கனவுகளை எற்படுத்த முடியாது என்று தோன்றும்போது ஏக்கம் தான் வருகிறது.
மார்க்சியத்தை பின்பற்றிய நாடுகளில் ஏற்பட்ட அழிவு சமுதாய மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும் என்ற கனவினால அல்ல , என்றென்றைக்குமான அறங்களை கணக்கிலெடுத்துக்கொள்ளாததே என்று நினைக்கிறேன். 
ஆரோக்கிய நிகேதனம் நாவலை வைத்து மரபு சிந்தனைகளுக்கும், நவீன சிந்தனைகளுக்கும் உள்ள மோதல்களை விளக்கியது அற்புதமாக இருந்தது.
அதேபோல அலை கடல் மேல் நிலவு என்ற படிமத்தின் மூலம் கொந்தளிப்பான வாழ்க்கையின் மேல் குளிர்ந்த அமைதியாய் அமர்ந்திருக்கும் ஞானத்தையும், பாற்கடல் கடைந்து கிடைக்கும் அமிர்தம் என்ற படிமத்தின் மூலம் வாழ்வின் நெருக்கடிகள் மூலம் கிடைக்கும் ஞானம் பற்றியும் விளக்கியது அழகாக இருந்தது.
மொத்தத்தில் புதிய சிந்தனை திறப்புகளை அளித்த உரை.
 

வியாழன், 29 ஜூன், 2017


திரு ஜெயமோகன்  அவர்களுக்கு,

                                                              என் எல்லா தினங்களும் வெண்முரசுடனே  ஆரம்பிக்கிறது .  வெண்முரசின் தொடர்ந்த வாசகன் என்ற போதிலும் இதுவரை அதைப்பற்றி எழுத தோன்றவில்லை.  ஆனால்  நீர்க்கோலத்தின்  ஆரம்ப  அத்தியாயங்கள்  என் உள்ளத்தை  அதிகம் பாதித்த ஒரு  விஷயத்தை  பேசுகின்றன . நீர்க்கோலத்தில் நீங்கள் ஒரு உச்சத்தை அடைந்து விட்டதாக தோன்றுகிறது. அதிகம்  பேசப்படாத  நகுலன், சகாதேவன்  இவர்களை நீங்கள் ஆழமாக சித்தரிப்பது மட்டுமல்ல , இந்தப்   பகுதி  செய்யும் தொழிலை ஒரு தவமாக மாற்றி ஆத்ம திருப்தி  அடைவதை சொல்கிறது .  புத்தகம் படிப்பதை தொடங்கிய காலத்தில் என்னை  மிகவும்  பாதித்த  புத்தகங்களில் ஓன்று   CRONIN -னின்  CITADEL . அதன் பிறகு தாஸ்தாயெவெஸ்கி , டால்ஸ்டாய் என்று படிக்க ஆரம்பித்தபிறகு அதன் இலக்கிய மதிப்பு பற்றி ஒரு ஐயம்  இருந்தபோதும் , இன்றும் என்னை  மிகவும் கிளர்ச்சி  அடைய வைக்கும் புத்தகம் அது.நீங்கள் படித்திருக்கிறீர்களா என்று தெரியாது. முப்பது வருடங்களுக்கு பிறகு அதை இன்று படிக்கும்போதும் அதே உணர்வுகள் ஏற்படுகிறது. என் வேலையை  இன்றும் நான் நேசித்து செய்வதற்கு அந்த புத்தகம் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. என்  வேலையில்  என்றாவது சோர்வு  ஏற்படும்போது  திரும்ப திரும்ப அந்த  புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பேன் . ஒரு வணிக இலக்கியமான  CITALDEL  ஐ   ஒரு மகத்தான காவியத்துடன்  ஒப்பிடுவது சரியா  என்று தெரியவில்லை. ஆனால் ANDREW  அந்த  குழந்தையை காப்பாற்றும்போதும் , இறுதியில் ஆற்றுகின்ற  உரையை  படிக்கும்போதும்  கண்கள் பனிக்காமல்  இருந்ததில்லை .  அதே உள்ளக்கிளர்ச்சி  நீர்க்கோலத்தின் ஆரம்ப அத்தியாயங்கள் படிக்கும்போதும் ஏற்படுகிறது.  புரவிகளுடன்  பேசுகிற நகுலனில்  தொடங்கிய அந்த படைப்பாற்றல்   செங்கோலுக்கும்  மேல் செல்லும் அடுமனைக்கரண்டியைப்பற்றி பேசுகிற போது  உச்சத்தை தொடுகிறது. பீமனை இந்த பரிமாணத்தில் யாரும் சொன்னதாக தெரியவில்லை. சமையல்  கலையை இவ்வளவு உயர்வு செய்த  தமிழ்  படைப்பு வேறு இருப்பதாகவும்  தெரியவில்லை.திரும்ப திரும்ப படித்து கொண்டே இருக்கிறேன். 
                                

ஞாயிறு, 4 ஜூன், 2017





வெற்றி -  ஒரு எதிர்வினை


தினமும் காலையில் எழுந்ததும் மொபைலில் ஜெயமோகனின் சைட்டில்  உள்ள  வெண்முரசு மற்றும் கட்டுரைகளை விரைவாக ஒரு முறை படிப்பேன். இரவு சாவதானமாக லேப்டாப்பில் மீண்டும் ஒருமுறை அனுபவித்து படிப்பேன். அப்படிதான் வெற்றி சிறுகதையையும் படித்தேன் .  முதல் முறை படிக்கும்போது மனதில் அதிர்வலைகளை உருவாக்கியது. இரவில் படிக்கும் போதும்.. முதலில் கோபம். சாதாரணமாக மனதில் எழும் பாமரத்தனமான கேள்விகள்தான் எழுந்தது. மீண்டும் சில முறை நிதானமாக படித்தபோது சில உள்ளடுக்குகள்  புலனானது . அதை    எழுததோன்றியது.  . எழுதும் முன் ஜெயமோகனின் வாசகிகளின்  எதிர்வினை என்ன என்று பார்க்க தோன்றியது. காரணம்  அவர்கள் தேர்ந்த வாசகிகள் . ஞாயிறு காலை வரை இரண்டு எதிர்வினைகள்  தான் வந்திருந்தது . இரண்டும் எதிர்மறை தான்.

CSK  வின் விமரிசனமும் படித்தேன்

CSK  இது அந்த பெண்னின்  ராஜதந்திரத்தின் வெற்றி என்று எழுதியிருந்தார். எனக்கு சிறுவயதில் படித்த ஒரு குட்டிக்கதை ஞாபகம் வந்தது . ஒரு கழைக்கூத்தாடி தினமும் குரங்குகளை  வைத்து விளையாட்டு காட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தான் . அவனுக்கு ஒரு பையன் இருந்தான். ஒருநாள் பையனை அழைத்து உனக்கு வயதாய்விட்டது . வந்து வித்தை  கற்றுக்கொள்  என்று கூட்டிக்கொண்டு போனான். நன்றாய் பார்த்துக்கொள் என்று பையனிடம் சொல்லிவிட்டு கையை தட்டினான். குரங்கு ஒரு கரணம்  அடித்தது. உடனே அதற்கு ஒரு பழம் கொடுத்தான். பார்த்தாயா எப்படி குரங்கை பழக்கி வைத்திருக்கிறேன்  என்றான் பையனிடம். கரணம்  அடித்து திரும்பிய குரங்கு அருகிலிருந்த  குட்டியிடம் பார்த்தாயா , ஒரு கரணம் அடித்தால் பழம் கொடுப்பான். அப்படி பழக்கி வைத்திருக்கிறேன்  அவனை என்றதாம் .  யார் சரி?

வெற்றியில்  யார் வென்றது? கற்பை இழக்காமல் , மகனை  காப்பாற்றிய தாயா , பந்தயத்தில் வென்று பணக்காரனான நமச்சிவாயமா  , ஐந்து லட்சத்தை இழந்து , நினைத்த பெண்ணை அடைந்து , தன்  நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொண்ட ரங்கப்பரா , . எல்லோரும் எதோ வென்றிருக்கிறார்கள். ஏதோ  இழந்திருக்கிறார்கள். வெற்றி என்பது எது அவர்களுக்கு முக்கியம் என்பதைப்பொறுத்தது.

விஷயம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆணோ பெண்ணோ அனைவருமே பலவீனமானவர்கள்தான். காமம் என்கிற விஷயத்தில் 99.9% ஆண்கள்  வீழ்ந்து விடுவார்கள்  என்பதில் பெரிய அபிப்ராய பேதம்  இருக்காது  என்று நினைக்கிறேன். பெண்களிலும் ஒரு கணிசமான  அளவினர்  ஏதோ  ஒரு பலவீனத்தில்  , ஒரு தருணத்தில்  வீழ்ந்து விடுவார்கள்  என்பதும் எல்லா ஆண்களுக்கும் தோன்றும். எவ்வளவு சதவிகிதம் , எதற்காக  என்பதில் தான் சர்ச்சை.

எல்லாப் பெண்களும் ஒரு குறைந்த எண்ணிக்கை  தவிர  பணத்திற்காக விழுந்து விடுவார்கள்  என்ற தொனி  வருவதால்தான் சிக்கல். 

எல்லா ஆண்களும் காமத்தில் விழுந்து விடுவார்கள் என்று எழுதினால் சிக்கல் இல்லை. காரணம் இந்த சமூகத்தில் ஒரு ஆண்  எத்தனை  பெண்களை  வீழ்த்தினான்  என்பதிலே வெற்றி என்று காண்பிப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் ஒரு பெண் எத்தனை  ஆண்களை வீழ்த்தினாள்  என்பது வெற்றியாக கருதப்படுவதில்லை. எவ்வளவு ஆண்களின் முயற்சிகளை தடுத்தாள்  என்பதை வைத்து தான் அவள் வெற்றியை காண்பிக்க முடியும். இந்த கதையில் கூட அவள் தன பெயர் கெடாமல் , மகனையும் காப்பாற்ற்றினாள்  என்பது தான் அவள் வெற்றியாக  கருதப்படுகிறது.

உலக சுகங்களுக்காக பெண்கள் வீழ்ந்து விடுவார்கள் , ஆண்கள் தங்கள் ஆணவத்திற்காக  எதையும் தியாகம் செய்வார்கள் என்பது எவ்வளவு தூரம் உண்மை  ?  அழகிற்காகவோ , கிடைக்காத  அன்பிற்க்காகவோ , சொத்து சுகங்களை  துறந்து ஓடுகிற எத்தனை பெண்களை கண்டிருக்கிறோம். விரும்பிய பெண்ணிற்காக அதிகாரத்தையே துறந்த ஆண்கள் எத்தனை ?  ராமராவ்  ஞாபகம்  வருகிறார் .

ஜெயமோகனின் படைப்புகளை தொடர்ந்து படித்து கொண்டிருப்பதால்  எனக்கு ஜெயமோகனின் ஒரு இயல்பாக தோன்றுவது இரண்டு முரணியக்கங்கள். அவர் பெண்கள் ஒருபக்கம் உலக சுகங்களில் பலவீனம் உள்ளவர்கள்  என்று எண்ணுகிறார்.. மறுபக்கம் தாய்மையின் மகத்தான சக்தி பற்றி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் படைப்புகளில் தாய்மையின்  சக்தி  திரும்ப திரும்ப  வருகிறது.

.
ரங்கப்பரிடம் பெற்ற அனுபவத்தைப்பற்றி லதா என்ன  நினைக்கிறாள்  என்று தெளிவாக தெரியவில்லை. ஜெயகாந்தனின் சூயிங்கம்  போல எதாவது இருக்கிறதா என்று பார்த்தேன் . ஒரே நாளில் பத்து  பதினைந்து வயது கூடியது போல இருந்தாள் . எங்கிருந்தோ   ஒரு தனி ஒளி அவள் மேல் வீழ்ந்தது  போல இருந்தது என்று எழுதியிருக்கிறார்.  அந்த ஒளி  தியாகத்தின் ஒளியா  , இதுவரை  கிடைக்காத  பரிவு இப்போது கிடைத்ததின்  ஒளியா  என்று தெரிய வில்லை.
இந்தக்  கதையில் காச நோய்  பிடித்த மகனை  காப்பாற்ற அவள் வீழ்வதாக காட்ட  வேண்டிய தேவையே இல்லை.  ரங்கப்பர் வீசிய பனத்திற்கெல்லாம்  மயங்காமல்  , ஆனால் அவர் காண்பித்த அன்பிற்காக , நமச்சிவாயத்தின் புறக்கணிப்பிற்கு பழியாக அவள் தன்னை ரங்கப்பரிடம் சமர்ப்பித்தாக அமைந்தால் லதாவின் பாத்திரம் மோசமடையுமா ? இல்லை என்றே தோன்றுகிறது. ரங்கப்பர் லதா பணத்திற்காக வீழவில்லை , தன்  அன்பிலேயே  வீழ்ந்தாள் . ஆகவே பெண்கள் பணத்தில்  வீழ்வார்கள்  என்ற தன்  சித்தாந்தம் தோற்றுப்போனதை ஒத்துக்கொண்டு பணம் கொடுப்பதாக முடித்தாலும் சரியான முடிவாகத்தான் இருக்கும்.

அப்புறம் எதற்கு ஜெயமோகன்  ஒரு காச நோய்  மகனை உருவாக்கி , தாய்மைக்காக அவள் வீழ்வதாக  எழுதியிருக்கிறார்.?  இது ஒரு சீரியல் எழுத்தாளரின் உத்தி என்று அவருக்கு தெரியாதா ?

அவர் சுமதி என்ற பெண் வாசகருக்கு எழுதிய பதில்  சுவாரசியமானது. இது தான்  என் தரப்பா   என்றால் இல்லை என்கிறார். ஆனால் எந்த எழுத்தாளரும் தான் அந்தரங்கமாக  நம்பாததை எழுத மாட்டான் . அதை அடுத்த வரியிலேயே ஒத்துக்கொள்கிறார் . இவ்வுண்மையை கண்டு அஞ்சி அறம்  போன்ற கதையில் ஒளிந்து  கொள்வேன்  என்று எழுதுகிறார்.  அந்த பெண் வீழ்வாள் என்று அவர் உள்  மனம் நம்புகிறது. இது பெரும்பாலான  ஆண்கள் உண்மையாக உணர்வது. அந்தராத்மாவை உண்மையாக நம்பும் எந்த எழுத்தாளரும் அதை எழுதாமல் தப்ப முடியாது. இதனால் பெரும் திட்டுகளை சந்திக்க வேண்டும் என்று உணர்ந்த பிறகும் கூட. ஆனால்  தாய்மையை ஆராதிக்கிற ஜெயமோகனுக்கு அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அதை ஒரு தாய்மையின் தியாகமாக  மாற்றி ஆறுதல் கொள்கிறார் . ஒரு உத்தியாக  அது ஒரு தோல்வி என்ற போதும் கூட.  அது அவர் அறம் . இது அவர் வெற்றியா  , தோல்வியா என்பது  அவரவர் கோணத்தைப் பொறுத்தது .
ஆனால்  கதை ஒரு வாசகனாக  என்னை வென்றிருக்கிறது.


வெள்ளி, 24 மார்ச், 2017


தல்ஸ்தோய்க்கு  நிகரான எழுத்தாளர் . உலகின்  எந்த எழுத்தாளருக்கும்  தாழ்ந்தவரில்லை . நோபல் பரிசே கிடைத்திருக்க வேண்டும். ஞான பீடம் கூட கொடுக்க விட வில்லை சிறுமதியாளர்கள் . கேரளாவில் , கர்நாடகாவில் மகத்தான எழுத்தாளர்கள்  மறையும்போது  முதலமைச்சர்கள்  அஞ்சலி செலுத்துகிறார்கள். நாடே துக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் அசோக மித்திரன் யாரென்றே பெரும்பாலாருக்கு தெரியாது. பாரதியின்  இறுதி ஊர்வலத்திலேயே ஐம்பதுக்கும் குறைவானர்களே பங்கு கொண்டிருக்கிறார்கள். தன்  கலாச்சார உன்னதங்களை அடையாளம் கண்டு கொள்ளாத , கௌரப்படுத்தாத எந்த சமூகம் உருப்படும் ? ஆனால் அசோக மித்திரன் படைப்புகள் காலம் கடந்து வாழும். வாழையடி வாழையாக  வரும் இலக்கிய வாசகர்கள் அவருக்கு தங்கள் வாழ்க்கையில்  முக்கிய இடம் கொடுப்பார்கள். என் குடும்பத்தில் ஒருவரை இழந்த துக்கம் ஏற்படுகிறது. அவருக்கு என் அஞ்சலிகள்.

வியாழன், 15 ஜனவரி, 2015



பெருமாள் முருகன் மீது  திருசெங்கோடை சேர்ந்த ஜாதி அமைப்புகளும் மத தீவரவாதிகளும் , அரசு இயந்திரமும்  நடத்திய அடக்குமுறை தமிழ் மீதும் தமிழ்நாட்டின்மீதும் , இந்திய கலாச்சாரத்தின் மீதும் அக்கறை உள்ளவர்கள்  கண்டனம் செய்ய வேண்டிய ஒன்றாகும். இன்று உங்கள் தளத்தில்  திருசெங்கோடை சேர்ந்த ஒரு அன்பர் எழுதிய கடிதம் வாசித்தேன். அரசு அதிகாரிகள் நடத்திய சமரச (!) கூட்டம் எப்படி நடந்தது என்று பெருமாள் முருகனுடன் சென்ற நண்பர் கொடுத்த பேட்டியை  Hindu -வில் படித்தாலே தெரியும். இது கட்டை பஞ்சாயத்து இல்லாமல் வேறு என்ன ? திருசெங்கோடில்  பணி  புரிந்த ஒரு முன்னாள்  அரசு அதிகாரி இன்றைய Hindu  -வில் அந்த மாதிரி ஒரு சடங்கு முன்காலங்களில் நடந்ததாக கேள்விப்பட்டதாக எழுதியிருக்கிறார். அந்த சடங்குக்கு இந்து மதத்தில் இடம் இருப்பதாக பல நிபுணர்களும் சொல்கிறார்கள். அந்த சடங்கை பயன்படுத்தி குழந்தையில்லாத  ஒரு தம்பதி குழந்தை பெற்று கொள்வதாக  எழுதுவது எப்படி திருசெங்கோடை அவமதிப்பதாகும் ? நல்லவேளை  திரௌபதி  ஐந்து பேரை கல்யாணம் செய்வதாக இப்போது ஜெயமோகன் நாவல் எழுதினால் சாத்தி  விடுவார்கள். வியாசர் இந்த கலாசார காவலர்கள் வருவதற்கு முன்பே மகாபாரதம் எழுதிவிட்டார் . பெருமாள் முருகன் திருசெங்கோடை அவமதிக்கவில்லை. இவர்கள் தான் அவமதிக்கிறார்கள் . இவர்கள் புரிந்து கொள்ளாத  விஷயம் மாதொரு பாகன்  அழிந்து போகாது. பெருமாள் முருகன் எழுதுவதை நிறுத்தினாலும் , எல்லா புத்தகங்களையும் எரித்து விட்டாலும் அது மீண்டும் உயிர்த்து எழும் . எழுத்தின் சக்தி அது. பெருமாள் முருகன் புத்தகத்தை பல நூறு பேர்தான் படித்திருப்பார்கள். இவர்களே அதை உலகளாவிய அளவில் பரப்பி விட்டார்கள். இன்னும் ஓன்று சில அறிவு ஜீவிகள் சென்னையில் இருந்துகொண்டு பெருமாள் முருகன் எடுத்த முடிவை விமர்சிக்கிறார்கள். அவர் சூழ்நிலை அவருக்குதான் தெரியும். அவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிற உரிமை அவருக்கு இருக்கிறது. அன்புடன் ராமகிருஷ்ணன் 

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பொள்ளாச்சி  மகாலிங்கம் 


HINDU  நாளிதழில்  பொள்ளாச்சி மகாலிங்கம்  மறைந்தார்   என்ற செய்தி படித்ததும் மனதில் நெருங்கிய உறவினரை இழந்தது  போல ஒரு உணர்வு . அவர் நிறுவனராக இருந்த நாச்சிமுத்து   POLYTECHNIC - இல்  தான் நான் படித்தேன். படிக்கும் போது அவர் மீது அப்படியொன்றும் பெரிய நல்ல அபிப்ராயம்  கிடையாது . பொதுவாகவே